பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

போஷான் எனப்படும் ஊட்டச்சத்துத் திட்டம்

Posted On: 21 JUL 2023 2:21PM by PIB Chennai

வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன், போஷன் அபியான் திட்டம் 2018 மார்ச் 8 அன்று தொடங்கப்பட்டது.

மிஷன் போஷான் 2.0 எனப்படும் ஊட்டச்சத்து இயக்கத்தின் 2-து கட்டத் திட்டத்தின் கீழ், செறிவூட்டப்பட்ட அரிசி துணை ஊட்டச்சத்திற்காக ஒதுக்கப்படுகிறது. மேலும் போதுமான ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக சிறுதானியங்கள் மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் சத்தான உணவு வகைகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. வடக்கு, வடகிழக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய என, நாட்டின் பல்வேறு பகுதிகள் வாரியாக, கர்ப்பிணி பெண்களுக்கான உணவு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜனா (பி.எம்.வி.வி.ஒய்) திட்டம், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. இது ஒரு குழந்தைக்கு ரூ.5,000 நேரடி பணப்பலன்களை வழங்குகிறது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பகிர்ந்து கொண்ட தகவல்களின்படி, தேசிய சுகாதார இயக்கத்தின் (என்.எச்.எம்) கீழ், நாடு முழுவதும் உள்ள ஏழை பெண்கள் உட்பட அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் மகப்பேறு சுகாதார சேவைகளை வழங்க பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன:

•    சுரக்ஷித் மாத்ரித்வ ஆஷ்வாசன் (சுமன்): இது பொது சுகாதார நிலையங்களுக்கு வருகை தரும் ஒவ்வொரு பெண் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தரமான சுகாதார சேவையை இலவசமாக வழங்குகிறது.

 

•    ஜனனி சுரக்ஷா யோஜனா (ஜே.எஸ்.ஒய்): இது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களில் பிரசவத்தை ஊக்குவிப்பதற்கான திட்டமாகும்.

•    ஜனனி சிசு சுரக்ஷா காரியக்ரம் (ஜே.எஸ்.எஸ்.கே) திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் பொது சுகாதார நிறுவனங்களில் சிசேரியன் உட்பட இலவச பிரசவத்திற்கான வசதிகள் வழங்கப்படுகின்றன. 

•    பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ரித்வா அபியான் (பி.எம்.எஸ்.எம்.ஏ) திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் தரமான பேறுகால பரிசோதனையை வழங்குகிறது.

•    கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு, ஓய்வு, கர்ப்பத்தின் ஆபத்து அறிகுறிகள், நன்மைத் திட்டங்கள் மற்றும் மருத்துவமனை பிரசவங்கள் குறித்து கல்வி கற்பிப்பதற்காக எம்.சி.பி அட்டை மற்றும் பாதுகாப்பான தாய்மை கையேடு வழங்கப்படுகின்றன.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பகிர்ந்து கொண்ட தகவல்களின்படி, 10 முதல் 19 வயதுக்குட்பட்ட வளரிளம் பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

o    வளர் இளம் பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல்.

o    வளரிளம் பெண்கள் உயர்தர சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதை அதிகரித்தல்.

o    சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் சானிட்டரி நாப்கின்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்தல்.

சானிட்டரி நாப்கின்களின் பயன்பாடு 42 சதவீதத்தில் இருந்து 64 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் ஜன் அந்தோலன் திட்டத்தின் கீழ், வருடாந்திர போஷன் மா மற்றும் போஷன் பக்வாடா மூலம் பெரிய அளவிலான நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் மாதவிடாய் சுகாதாரம் குறித்த 7.18 லட்சம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

 

இத்தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

****

ANU/PLM/KPG



(Release ID: 1941479) Visitor Counter : 141


Read this release in: English , Urdu