நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 2018 - 2022 வரை ரூ.172.88 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAR 2023 5:58PM by PIB Chennai

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முன்முயற்சிகள் பற்றிய விவரங்களை  மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும்  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி இன்று மக்களவையில் எடுத்துரைத்தார். இதன்படி, 2018-19 நிதியாண்டில் இருந்து 2021-22 நிதியாண்டு வரையிலான காலத்தில் இந்த நிறுவனம் ரூ.172 கோடியே 88 லட்சம் செலவில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

இதில் சுகாதார கவனிப்பு, குடும்பநலன், துப்புரவு ஆகியவற்றுக்கு 2021-22-ல் ரூ.15 கோடியே 94 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இதே நிதியாண்டில், சிறப்பு கல்வி, தொழிற்பயிற்சி திறன் அளிப்பு, படிப்பு உதவித்தொகை உள்ளிட்ட கல்வித்  திட்டங்களுக்கு  ரூ.12.85 கோடி செலவிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விளையாட்டுகளை மேம்படுத்த ரூ.30 லட்சமும், ஊரகப்பகுதிகளில் இணைப்பு சாலைகளை அமைக்க ரூ.69 லட்சமும், 2021-22-ம் நிதியாண்டில் செலவிடப்பட்டுள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தைச் சுற்றி 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 48 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு 2022-23ல்  10 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 8,627 பேர் பயனடைந்தனர்.

நெய்வேலி நகரப்பகுதியில் ஆம்புலன்ஸ் வசதியுடன் உள்ள மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் புற நோயாளிகளாக அல்லது அவசர சிகிச்சைக்காக வருகின்றனர். உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு இந்த மருத்துவமனை  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற காமன் பயோ மெடிக்கல் வேஸ்ட் ட்ரீட்மெண்ட் ஃபெசிலிட்டி  என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது என்பது உள்ளிட்ட தகவல்களையும், அமைச்சர்  திரு பிரலாத் ஜோஷி மாநிலங்களவையில் தெரிவித்தார்.

 

***

AD/SMB/RS/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1907295) வருகையாளர் எண்ணிக்கை : 164
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu