விவசாயத்துறை அமைச்சகம்

கிசான் ட்ரோன்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைக்காக சுமார் ரூ.127 கோடி வழங்கப்பட்டுள்ளது: திரு நரேந்திர சிங் தோமர்

Posted On: 10 FEB 2023 7:04PM by PIB Chennai

விவசாயிகளிடம் ட்ரோன்களை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைக்காக அரசிடமிருந்து சுமார் ரூ.127 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள தகவலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஏஆர் மூலம் 300 கிசான் ட்ரோன்களை வாங்குவதற்காக ரூ.52.5 கோடி விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் விவசாயிகளின் 75,000 ஹெக்டேர் விளைநிலங்களில் ட்ரோன்கள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக விவசாய பயன்பாட்டுக்கான ட்ரோன்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது.   

இதேபோல், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் இயங்கும் வேளாண் அறிவியல் மையம் (கேவிகே), மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் துறை அமைப்புகளுக்கு கிசான் ட்ரோன் விலையில் 100 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மானிய உதவியாக  வழங்கப்படுகிறது. 

அதேநேரத்தில் கிசான் ட்ரோன்களை வாங்க முன்வரும் தனிநபர்கள், சிறு-குறு விவசாய அமைப்புகள் பழங்குடியின பெண்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆகியோருக்கு ட்ரோன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.  மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் மானியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

***

SG/ES/UM/KPG



(Release ID: 1898111) Visitor Counter : 182


Read this release in: English , Urdu