சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

அறிவியல்-20-ன் (எஸ்20) தொடக்கக் கூட்டம் புதுச்சேரியில் ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் நடைபெறுகிறது

Posted On: 29 JAN 2023 5:02PM by PIB Chennai

அறிவியல்-20-ன் (S-20) முதலாவது கூட்டம் (தொடக்கக் கூட்டம்) புதுச்சேரியில் 30 மற்றும் 31 ஜனவரி 2023-ல் நடைபெற உள்ளது. இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவுடன் இந்தோனேஷியா மற்றும் பிரேசில் இணைந்து முத்தரப்பு உறுப்பினர்களாக இந்த எஸ் 20 கூட்டத்தை நடத்துகின்றன. இக்கூட்டத்திற்கு இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் (INSA) தலைவர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா இணைந்து தலைமை வகிக்கிறார்.

 

ஜி 20 நாடுகளின் தேசிய அறிவியல் அகாடமிகளை உள்ளடக்கிய எஸ்20 செயல்பாட்டுக் குழு, 2017 ஆம் ஆண்டு ஜெர்மனியின் தலைமைத்துவத்தின் போது தொடங்கப்பட்டது. இது ஒருமித்த கருத்துகள் அடிப்படையிலான அறிவியல் சார்ந்த பரிந்துரைகளை, சர்வதேச நிபுணர்கள் அடங்கிய பணிக்குழுக்கள் மூலம் கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்குகிறது.

 

ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இந்தியா, கொரியா குடியரசு, துர்கியே, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஜி-20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 15 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தொடக்கக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். புதுச்சேரியில் நடைபெறும் எஸ் 20 தொடக்கக் கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 50 பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்கின்றனர்.

 

ஜி 20-ன் தலைமைத்துவத்தில் உள்ள இந்தியா, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, ஜி 20 அமைப்பை உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கிய, லட்சியம் கொண்ட, தீர்க்கமான மற்றும் செயல் சார்ந்ததாக  மாற்ற விரும்புகிறது. எஸ்-20 கூட்டத்தின் செயல் திட்டம் இந்தக் இந்தக் கொள்கையை பிரதிபலிக்கிறது. இந்த எஸ்-20 கூட்டம், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் திட்டமிடல் மற்றும் பயன்பாட்டு அம்சத்தில் கவனம் செலுத்தும்.

 

இந்த ஆண்டு அறிவியல்-20 கூட்டத்துக்கான கருப்பொருள் “புதுமையான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு, மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவியல்” என்பதாகும். இந்த பரந்த கருப்பொருளின் கீழ், எஸ்20-ன் அடுத்தடுத்த கூட்டங்கள் மூன்று பகுதிகளில் கவனம் செலுத்தும். பசுமையான எதிர்காலத்திற்கான தூய எரிசக்தி, உலகளாவிய முழு ஆரோக்கியம், அறிவியலை சமூகம் மற்றும் கலாச்சாரத்துடன் இணைப்பது ஆகியவை தொடர்பாக அடுத்தடுத்த கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்படும். அகர்தலா, லட்சத்தீவின் பங்காரம் தீவு, மத்தியப் பிரதேசத்தின் போபால் ஆகிய இடங்களில் அடுத்தடுத்த கூட்டங்கள் நடைபெறும். இறுதிக் கூட்டம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.

 

எஸ் 20-ன் தொடக்கக் கூட்டத்தின் குறிக்கோள், மீதமுள்ள இந்த கூட்டங்களுக்கு விரிவான செயல்திட்டத்தை அமைப்பதாகும். இதில் ஜி20 உறுப்பு நாடுகளின் அறிவியல் அகாடமிகளால் விரிவான ஆலோசனைகள் வழங்கப்படும்.

 

எஸ் 20 கூட்டமானது ஜி 20 உறுப்பு நாடுகளுக்கு இடையே பயனுள்ள அறிவியல் கலந்துரையாடலை ஊக்குவிக்கும். அத்துடன் எரிசக்தி சமநிலை, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு போன்ற உலகளாவிய விஷயங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கும். மேலும் அறிவியலை சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்றும். உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு பல்வேறு துறைகளுக்கு இடையே மற்றும் பலதரப்பு அறிவியல் ஒத்துழைப்புகள் மற்றும் உலகளாவிய கூட்டுச் செயல்பாடுகள் தேவையானதாகும்.

 

பருவநிலை மாற்றம், சுகாதாரம் மற்றும் அறிவியலை சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக ஆக்குதல் போன்றவற்றுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் மற்றும் யோசனைகளை வழங்குவதற்காக ஜி20 உறுப்பு நாடுகளுக்கு இடையே பயனுள்ள அறிவியல் உரையாடலை எஸ்20-ன் முதலாவது கூட்டம் ஊக்குவித்து உற்சாகப்படுத்தும். இந்த விவாதங்களுக்கான செயல்திட்டம், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) மற்றும் 2030 செயல்திட்டத்துடன் இணைந்த வகையில் அமைந்துள்ளது.

*****

 

PLM / DL



(Release ID: 1894488) Visitor Counter : 179


Read this release in: English