தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

‘குரங்கு பெடல்’ மிதிவண்டியின் மீது ஒரு தலைமுறைக்கு உள்ள உணர்வுபூர்வமான தொடர்பைப் காட்சிப்படுத்தியுள்ளது


கோல்டன் பீகாக் மற்றும் காந்தி விருதுக்கு போட்டியிடும் தமிழ்படம் குரங்கு பெடல்

Posted On: 24 NOV 2022 7:05PM by PIB Chennai

தந்தைக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாத நிலையில், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வதில் குழந்தையின் ஆர்வத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது குரங்கு பெடல் திரைப்படம் .“என்னுடைய குழந்தைப் பருவத்தில் சைக்கிள் மிகவும் சுவாரசியமான விஷயங்களில் ஒன்றாக இருந்ததால் அந்தக் கதை என் மனதில் என்றுமே இருந்துக்கொண்டே இருந்தது. சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது ஒருவருக்கு நம்பிக்கையைத் தருகிறது, அது என்னை ஒரு திரைப்படத்தை உருவாக்கத் தூண்டியது” என்று படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன் கூறினார்.

கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ‘டேபிள் டாக்ஸ்’ அமர்வில் ஊடகங்கள் மற்றும் விழாப் பிரதிநிதிகளுடன் உரையாடும் போது, குரங்கு பெடல் மிதிவண்டியின் மீது ஒரு தலைமுறைக்கு உள்ள உணர்வுபூர்வமான தொடர்பைப் காட்சிப்படுத்தியுள்ளது என்றார் கமலக்கண்ணன்.

அதிக பட்ஜெட் படங்களிலிருந்து தனது படத்திற்கு உள்ள போட்டி பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, ஒரு திரைப்படம் அதிக பார்வையாளர்களை சென்றடைய சிறந்த கதைக்களம், திரைக்கதை மற்றும் நடிப்பு ஆகியவை முக்கியம் என்று கூறினார்.

நடிகர் காளி வெங்கட் தனது அனுபவத்தைப் பற்றி பேசுகையில், தமிழில் 90 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், இந்த படத்தில் அறிமுகமான குழந்தை கலைஞர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன், என்று கூறினார். கதையில் உள்ள உணர்வுகளை தத்ரூபமாக படம்பிடித்து, அதை அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குனர் என்று கதாசிரியர் ராசி அழகப்பன் தெரிவித்தார்.

ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட இப்படம், சர்வதேச போட்டிப் பிரிவில் விரும்பப்படும் கோல்டன் பீகாக் விருது மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான சர்வதேச கவுன்சில் வழங்கும் காந்தி பதக்கம் ஆகிய இரு பிரிவுகளில் போட்டியிடுகிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், இதில் குழந்தை கலைஞர் சந்தோஷ் "மாரி" கதாபாத்திரத்திலும் நடிகர் காளி வெங்கட் அவரது தந்தையான 'கந்தசாமி' கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

திரைப்படம் பற்றி

இயக்குனர்: கமலக்கண்ணன் எஸ்

தயாரிப்பாளர்: #மான்டேஜ், யூவிடபள்யூ (UVW)பிசினஸ் பிரைவேட் லிமிடெட்.

திரைக்கதை: பிரபாகர், கமலக்கண்ணன்

ஒளிப்பதிவாளர்: சுமி பாஸ்கரன்

தொகுப்பாளர்: சிவானந்தீஸ்வரன்

நடிகர்கள்: காளி வெங்கட், சந்தோஷ், ராகவன், ஞானசேகர், ரத்தீஷ், ஏ.இ.சாய் கணேஷ்

கதை சுருக்கம்:

1980களின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், குழந்தைக் கதாநாயகன் மாரியப்பன் (மாரி) மற்றும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவனது கனவை பற்றியது. கிராமம் அதன் முதல் சைக்கிள் வாடகைக் கடையைக் காண்கிறது. வாடகைக்கு சைக்கிள் எடுக்க பணம் மறுக்கப்பட்ட மாரி, சைக்கிள் ஓட்டுவதைக் கற்றுக் கொள்வதற்காக சைக்கிளை வாடகைக்கு எடுப்பதற்காக அவனை எப்போதும் செல்லம் கொஞ்சும் தாயிடமிருந்து ரகசியமாகப் பணத்தைப் பெறுகிறான். அவனது சைக்கிள் ஓட்டும் தருணங்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் அந்நியர்களை அவன் சந்தித்தல் ஆகியவையே இத்திரைப்படம்.

**************

PKV / SRI/ DL



(Release ID: 1878654) Visitor Counter : 185


Read this release in: English , Marathi , Urdu , Hindi