குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நாட்டின் கூட்டாட்சித் தன்மைக்கு வலிமை சேர்த்த புகழ்பெற்ற தலைவர், திரு மு.கருணாநிதி என குடியரசு துணைத் தலைவர் புகழாரம்


திரு நாயுடு: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்டவர், திரு மு. கருணாநிதி

குடியரசு துணைத்தலைவர்: நெருக்கடி நிலையை எதிர்த்து, தமது அரசியல் நம்பிக்கைகளில் திரு மு.கருணாநிதி உறுதியாக நின்றார்

திரு மு.கருணாநிதியின் பன்முக ஆளுமைக்கு குடியரசு துணைத்தலைவர் மரியாதை செலுத்துகிறார்

நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சாம்பியனாக கலைஞர் திகழ்ந்தார்: திரு நாயுடு

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் திரு மு.கருணாநிதியின் உருவச்சிலையை குடியரசு துணைத்தலைவர் திறந்துவைப்பு


Posted On: 28 MAY 2022 8:10PM by PIB Chennai

நாட்டின் கூட்டாட்சித் தன்மைக்கு வலிமை சேர்த்த புகழ்பெற்ற தலைவர் என்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் வல்லமை வாய்ந்தவருமான டாக்டர் மு. கருணாநிதிக்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தலைசிறந்த திமுக தலைவரின் 98-வது பிறந்தநாள் விழாவில் அவரது உருவச் சிலையை திறந்து வைத்துப் பேசிய திரு நாயுடு, நாட்டின் கூட்டாட்சித் தன்மைக்கு வலிமை சேர்த்த தலைவர்களுள் திரு மு.கருணாநிதியும் ஒருவர் என்று குறிப்பிட்டு, அவருக்கு உயரிய மரியாதை செலுத்தினார். இந்த நடைமுறையால் வலுவான ‘குழு இந்தியாவாக' நாடு வளர்ந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

 

அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள பார்வையை நிலைநிறுத்தும் வகையில், ஒரு துடிப்பான, வளர்ந்த ஜனநாயகமாக இந்தியாவை வடிவமைக்க மக்களை மையமாகக் கொண்டிருந்த தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் திரு மு.கருணாநிதியும் இடம்பிடித்தார் என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். “1947-இல் சுதந்திரத்திற்குப் பிறகு, நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையை வடிவமைத்த மேன்மைவாய்ந்த பிரதமர்களையும், முதல்வர்களையும் நாம் பெற்றிருந்தோம்”, என்றார் அவர். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், கொள்கைகளை வடிவமைக்கவும், திட்டங்களை உருவாக்கவும், நிறுவனங்களைக் கட்டமைக்கவும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு அளவில் கலைஞர் திரு மு.கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் முயற்சிகளை குடியரசு துணைத் தலைவர் வெகுவாகப் பாராட்டினார். “அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்துத் தந்த பாதையால் வழிநடத்தப்பட்டு, இது போன்ற தலைவர்கள் நமது அரசியலமைப்பின் வார்த்தைகளுக்கு அர்த்தம் காண பல்வேறு நிலைகளில் முயன்றுள்ளனர்”, என்று திரு நாயுடு தெரிவித்தார்.

 

மொழிவளம், இலக்கிய மற்றும் கலாச்சார பொக்கிஷங்கள், தலைசிறந்த கட்டிடவியல், அபாரமான கைவினைத் திறன், அறிவியல், தொழில் மற்றும் வேளாண்மை சாதனைகள் போன்ற வளங்களால் துடிப்பான, தனித்துவம் வாய்ந்த திறனை ஒவ்வொரு மாநிலமும் பெற்றுள்ளது. “ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளார்ந்த வலிமையைப் பயன்படுத்தி, இத்தகைய வியப்பூட்டும் பன்முகத்தன்மையைக் கொண்டாடி, ஒரு நாடாக நாம் வளர்ந்திருப்பதோடு, விவேகமான முன்னேற்றத்தையும் அடைந்துள்ளோம். ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் ஒளிந்திருக்கும் அபரிமிதமான சக்தியைத் தட்டி எழுப்புவதன் மூலம் அரிதான ஒருங்கிணைப்பை நம்மால் ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்துள்ளோம். திரு மு.கருணாநிதி போன்ற தலைசிறந்த தலைவர்கள் இதைத்தான் செய்ய முயன்றார்கள்”, என்று திரு நாயுடு மேலும் கூறினார்.

 

ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் வளர்ச்சி வட்டத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை திரு கருணாநிதி தொலை நோக்குப் பார்வையாகக் கொண்டிருந்தார் என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். “வளர்ச்சி மற்றும் சமூக நலனின் மரபை நிலைநிறுத்திய முதல்வராக அவர் திகழ்ந்தார்”, என்று திரு நாயுடு கூறினார். “உழவர் சந்தை” என்ற விவசாயிகளின் சந்தை  மற்றும் ஏழைகளுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் திரு மு.கருணாநிதியின் தொலைநோக்கு அணுகுமுறையை பிரதிபலிக்கும் பல்வேறு திட்டங்களுள் இடம்பெற்றுள்ளதாக அவர் நினைவுகூர்ந்தார். இந்தியாவின் சக்திவாய்ந்த முதலமைச்சர்களுள் திரு மு.கருணாநிதியும் ஒருவர் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை அவர் ஊக்குவித்ததை சுட்டிக்காட்டினார்.

 

பொது வாழ்க்கையில் தமது நீண்டநாள் பயணத்தின்போது, பல தசாப்தங்களில் கலைஞர் திரு மு.கருணாநிதியுடன் தாம் நெருக்கமாக கலந்துரையாடியதை திரு நாயுடு நினைவுகூர்ந்தார். திமுகவின் சக்திவாய்ந்த தலைவர், தமது அரசியல் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளில் உறுதியாக நின்றார் என்று குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார். இதன்படி, அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்கு திரு மு.கருணாநிதி தெளிவாக எதிர்ப்பு தெரிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

 

திரு மு.கருணாநிதியின் பன்முக ஆளுமையில் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்திய திரு நாயுடு, பல்வேறு திறமைகளின் தனித்துவமான கலவையோடு ஓர் பல்துறை வித்தகர் என்று திமுக தலைவரை வர்ணித்தார். தாம் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற நுட்பமான அரசியல்வாதியாக இருந்ததுடன், சுமார் ஐம்பது ஆண்டு காலம் தமது கட்சிக்கு அவர் தலைமை தாங்கினார்”, என்றார் அவர். தமது புத்திசாலித்தனம், இலக்கிய சுவை மற்றும் கற்றறிந்த வெளிப்பாடுகளோடு பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் தலைசிறந்த சொற்பொழிவாளராகவும் திரு மு.கருணாநிதி இருந்ததாக திரு நாயுடு குறிப்பிட்டார். அவர், ஆக்கபூர்வமான அரசியல் விவாத கலையில் சிறந்து விளங்கிய ஒப்பற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆவார்”, என்று குடியரசு துணைத்தலைவர் மேலும் கூறினார். கலை, கலாச்சாரம் மற்றும் இதழியலின் மீது திரு கருணாநிதி கொண்டிருந்த ஈடுபாட்டினால், “கலைஞர்” என்ற கௌரவப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டதாக திரு நாயுடு தெரிவித்தார். “தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் என்றும் அழியாத தடத்தை விட்டுச் சென்றுள்ள உண்மையான பன்முக ஆளுமை கொண்டவராக”  திரு மு.கருணாநிதி விளங்கினார் என்று அவர் கூறினார்.

 

திரு மு.கருணாநிதியின் பல அம்சங்கள் நிறைந்த பணிகள், தமிழகத்தின் சமூக- அரசியல் வட்டாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக திரு நாயுடு தெரிவித்தார். “தமது எழுத்து மற்றும் வசனங்களின் வாயிலாக தமிழ் திரைப்படத் துறையில் புதிய பாதையை கலைஞர் திரு கருணாநிதி வகுத்தார். அன்றாட நிகழ்வுகளின் நுண்ணறிவுமிக்க வர்ணனையாளராக, அரசியல் பகுப்பாய்வராக செயல்பட்டதோடு, தாம் நிறுவிய கட்சி வெளியீடான முரசொலியில் தமது விசாலமான எழுத்துக்களின் மூலம் சக்திவாய்ந்த எழுத்தாளராகவும் திரு மு.கருணாநிதி விளங்கினார்”, என்று அவர் மேலும் குறிப்பிட்டார். நிர்வாகி, சமூக ஆர்வலர், அரசியல் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், கவிஞர், திரைப்பட எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர் என கலைஞர் திரு மு.கருணாநிதியின் பணிகளில் பொதுவான இழை இயங்குமானால், அது சமூக சமத்துவமும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியுமாக இருக்கும், என்றார் அவர்.

 

நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சாம்பியனாக கலைஞர் திகழ்ந்தார் என்றும் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். தமது தாய்நாடு மீதும், தாய் மொழி மீதும் திரு மு. கருணாநிதி அளவற்ற பற்று கொண்டிருந்ததோடு, செம்மொழியான தமிழில் உள்ள இலக்கிய படைப்புகள் பற்றியும், மாநிலத்தின் பாரம்பரிய கலாச்சார வளம் பற்றியும் உலகம் தெரிந்துகொள்ள உதவினார், என்று திரு வெங்கையா நாயுடு கூறினார். “மாநிலத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் இடம்பெறும் ‘தமிழ்த்தாய் வாழ்த்தை' தமிழ்நாட்டின் இறைவணக்கப் பாடலாக 1970-இல் திரு கருணாநிதி உருவாக்கினார்”, குடியரசு துணைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.

 

அனைத்து நிலைகளிலும் விரைவான வளர்ச்சியை தமிழகம் பதிவு செய்யும் என்றும், ‘கூட்டாட்சி உணர்வு’ மற்றும் ‘கூட்டாட்சியில் போட்டித்தன்மை’ என்ற உணர்வோடு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் ஆண்டுகளில் இந்தியா தனது உண்மையான திறனை உணரும் என்றும் திரு நாயுடு நம்பிக்கை தெரிவித்தார். தற்போதைய முதல்வர் திரு மு.க. ஸ்டாலின், தமது புகழ்பெற்ற தந்தை கலைஞர் திரு மு. கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணிகளால் வழிநடத்தப்படுவார் என்ற தமது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

•••••••••••••

 



(Release ID: 1829033) Visitor Counter : 318


Read this release in: English , Urdu , Hindi , Punjabi