ஜல்சக்தி அமைச்சகம்
‘யமுனோத்ஸவம்’ நிகழ்ச்சியை நடத்தியது, கங்கையைத் தூய்மைபடுத்துவதற்கான தேசிய இயக்கம் (என்எம்சிஜி)
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAR 2022 4:12PM by PIB Chennai
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, யமுனோத்ஸவம் நிகழ்ச்சியை தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அசிதா ஆற்றங்கரையில் உள்ள ஐடிஓ பாலத்தில் கங்கை தூய்மைபடுத்துவதற்கான தேசிய இயக்கம் (என்எம்சிஜி) நடத்தியது. யமுனையின் பெருமையை கொண்டாடுவதற்காக, சுத்தமாக வைத்திருப்போம் என்ற உறுதிமொழியுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை என்எம்சிஜி தலைமை இயக்குனர் திரு. ஜி.அசோக் குமார் பாராட்டினார். கங்கை நதியின் மிகப்பெரிய கிளை நதியான யமுனை நதியைச் சுத்தப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
யமுனையைச் சுத்தப்படுத்தும் என்எம்சிஜியின் உறுதியை வலியுறுத்திய திரு. அசோக்குமார் , கங்கை நதியைச் சுத்தப்படுத்த கவனம் செலுத்தப்பட்டது என்றும், இதன் பலன் தற்போது தெரிகிறது என்றும், யமுனை நதியைச் சுத்தம் செய்வதுதான் தற்போது இலக்கு என்றும் இதற்காக தற்போது கட்டப்பட்டு வரும் மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இந்தாண்டு டிசம்பரில் நிறைவடையும் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்தாண்டு தில்லி மக்கள் சுத்தமான யமுனை நதியைப் பார்ப்பர் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். யமுனை நதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு என்எம்சிஜி ரூ.2,300 கோடி நிதியுளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யமுனோத்ஸவம் நிகழ்ச்சியைக் கொண்டாட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யமுனா படித்துறையில் இன்று காலை கூடினர். இந்நிகழ்ச்சியில் ஓவியம், தெரு நாடகங்கள், இசை, நடனம் எனப் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்ற தகவலைப் பரப்புவதற்காக, இந்நிகழ்ச்சியில் தண்ணீர் குடிப்பதற்கு, மண் டம்பளர்கள் வைக்கப்பட்டிருந்தன.
நமாமி கங்கைத் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 7ம் தேதி நடத்தப்படும் வினாடி-வினா நிகழ்ச்சியில் குழந்தைகள் பங்கேற்பது குறித்தும் இந்நிகழ்ச்சியில் என்எம்சிஜி எடுத்துக் கூறியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1810231
**************
(வெளியீட்டு அடையாள எண்: 1810277)
வருகையாளர் எண்ணிக்கை : 245