பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படை குழந்தைகள் பள்ளியின் மாணவி செல்வி ஜியா ராய் பாக் நீர்ச்சந்தியை (ஜலசந்தி) சாதனை நேரத்தில் நீந்திக் கடந்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAR 2022 3:06PM by PIB Chennai
தலைமன்னாரிலிருந்து (இலங்கை) தனுஷ்கோடி வரையிலான (இந்தியா) வரையிலான 29 கிலோ மீட்டர் தொலைவுள்ள பாக் நீர்ச்சந்தியை (ஜலசந்தி) கடந்த 20-ம் தேதியன்று (மார்ச், 20, 2022) 13 மணி 10 நிமிடங்கள் என்ற சாதனை நேரத்தில் நீந்திக் கடந்த மாணவி செல்வி ஜியா ராய் இந்தியாவுக்கு புகழ் சேர்த்திருக்கிறார். மும்பையில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியின் மாணவியான இவர், இந்திய கப்பற்படையின் ஐஎன்எஸ் குஞ்சாலி கப்பலின் மூத்த மாலுமியான மதன்ராயின் புதல்வியாவார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள 13 வயது 10 மாதங்கள் நிறைந்த சிறுமி ஜியா ராய் இந்த அரும் சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம் பாக் நீர்ச்சந்தியை நீந்திக் கடந்த உலகின் மிகவும் இளைய, அதிவேக நீச்சல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஏற்கனவே 2004-ல் இந்த தூரத்தை செல்வி புலா சவுத்ரி 13 மணி 52 நிமிடங்களில் கடந்து சாதனைப் படைத்திருந்தார்.
இந்திய நீச்சல் கூட்டமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய ஆட்டிசம் சங்கம் உள்ளிட்ட பல முகமைகளின் ஒத்துழைப்புடன் இந்திய மாற்றுத் திறனாளி நீச்சல் கூட்டமைப்பு இந்த நிகழ்வை நடத்தியது. நீச்சல் வீராங்கனைக்கு கோவா கப்பல் கட்டும் நிறுவனம் நிதியுதவி வழங்கியது.
இந்த அற்புதமான சாதனைக்காக செல்வி ஜியா ராய் மற்றும் அவரின் பெற்றோர்களுக்கு கப்பற்படையின் வைஸ் அட்மிரல் பகதூர் சிங் பாராட்டுத் தெரிவித்தார்.
கௌரவமிக்க பிரதமரின் தேசிய பாலர் விருது – 2022 உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள செல்வி ஜியா ராய் உலகின் அனைத்து கடல்களிலும் நீந்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
----------------------------------
(வெளியீட்டு அடையாள எண்: 1808283)
வருகையாளர் எண்ணிக்கை : 232