வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதமரின் வீட்டு வசதி திட்டம்: 5 மாநிலங்களில் 60,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அனுமதி
இடுகை இடப்பட்ட நாள்:
15 FEB 2022 6:07PM by PIB Chennai
ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், ஹிமாசலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் 58வது கூட்டம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் திரு. மனோஜ் ஜோஷி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்தது.
இதில் பல மாநிலங்களில் வீடுகள் கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநிலங்களில் வீடுகள் கட்டும் பணியின் நிலவரம் குறித்து திரு .மனோஜ் ஜோஷி ஆய்வு செய்தார். வீடுகள் கட்டும் பணியை விரைவு படுத்தும்படியும், பயனாளிகளுக்கான ஒதுக்கீடுகளை மதிப்பீடு செய்யும்படியும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் பயன்கள், பயனாளிகளுக்கு தாமதம் இன்றி கிடைக்க வேண்டும் என திரு. மனோஜ் ஜோஷி கூறினார்.
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தற்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை 114.04 லட்சமாக உள்ளது. இவற்றில் 93.25 லட்சம் வீடுகளை கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. 54.78 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இத்திட்டத்தில் மொத்த முதலீடு ரூ.7.52 லட்சம் கோடி. இதில் மத்திய அரசின் உதவி ரூ.1.87 லட்சம் கோடியாகும். இதில் ரூ.1.21 லட்சம் கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ‘‘அனைவருக்கும் வீடுகள் என்ற திட்டத்தில் மாற்றத்துக்கான சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பிலான புத்தகத்தையும் திரு. மனோஜ் ஜோஷி வெளியிட்டார். இதை https://pmay-urban.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798525
*******************
(வெளியீட்டு அடையாள எண்: 1798617)
வருகையாளர் எண்ணிக்கை : 364