அணுசக்தி அமைச்சகம்

மகாராஷ்டிரா மாநிலம் ஜெய்தாபூரில் மொத்தம் 9900 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மிகப்பெரிய அணுமின் திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 16 DEC 2021 3:37PM by PIB Chennai

மகாராஷ்டிரா மாநிலம் ஜெய்தாபூரில் பிரான்சின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் ஒவ்வொன்றும் 1650 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ஆறு அணுமின் உலைகளை நிறுவ அரசு  கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு)  டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இது மொத்தம் 9900 மொகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மிகப்பெரிய அணுமின் திட்டமாகும்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ள அமைச்சர்  மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் நாட்டில் தற்போது நிறுவப்பட்ட அணுமின் திட்டத்தின் மூலம் 6780 மொகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கூறினார். 2020-21-ல்  நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணுமின்சாரத்தின் பங்கு 1.1 சதவீதமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அணுமின்சாரம் தூய்மையானதும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருப்பதாக  கூறிய ஜிதேந்திர சிங், அணுமின் திட்டங்கள் இதுவரை 755 பில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி செய்திருப்பதாகவும், இதன் மூலம் 650 மில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.  தற்போது 6780 மொகாவாட்டாக உள்ள அணுமின் உற்பத்தி திறனை 2031 வாக்கில் 22480 மொகாவாட்டாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782229

 

                                     ********
 



(Release ID: 1782385) Visitor Counter : 178


Read this release in: English , Urdu