குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
உயர்கல்வியில் பன்முகத் தன்மைக்கு குடியரசுத் துணைத்தலைவர் அழைப்பு
Posted On:
08 SEP 2021 5:11PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு க்ரியா பல்கலைகழகத்தின் மானுடவியல் நவீன கல்விக்கான மோட்டூரி சத்யநாராயணா மையத்தை சென்னை ராஜ்பவனிலிருந்து மெய்நிகர் முறையில் திறந்து வைத்துப் பேசினார்.
க்ரியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மகேஷ் ரங்கராஜன், நிர்வாகக் குழு தலைவர் திரு கபில் விஸ்வநாதன், திரு மோட்டூரி சத்யநாராயணாவின் குடும்ப உறுப்பினர்கள், பேராசிரியர் முகுந்த் பத்மநாபன், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
குடியரசுத் துணைத்தலைவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் பின்வருமாறு:
”அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே,
க்ரியா பல்கலைகழகத்தின் மானுடவியல் நவீன கல்விக்கான மோட்டூரி சத்யநாராயணா மையத்தை இன்று திறந்து வைப்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தரமான கல்வியை போதித்துவரும் க்ரியாவின் பயணத்தில் குறிப்பிடத்தக்க இந்த சாதனைக்குக் காரணமான, நிர்வாகத்தினர், ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.
இந்தியாவின் தவப் புதல்வர்களில் ஒருவரான பத்மபூஷன் திரு.மோட்டூரி சத்யநாராயணாவின் பெயரில் அமைந்துள்ள இந்த மையம், அதன் கல்வித்தன்மை மற்றும் தரத்தில் தீவிர கவனம் செலுத்துவதால், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கற்றல் மற்றும் கற்பித்தல் மையமாக உருவெடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சுதந்திரப் போராட்டத் தியாகி என்ற முறையில், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மோட்டூரி சத்யநாராயணா, பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்ததுடன், இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பிரமுகராகவும் விளங்கினார்.
மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரும், தோழருமான திரு.மோட்டூரி சத்யநாராயணா, வாழ்க்கையின் அனைத்து மட்டத்திலும் இந்திய மொழிகளைப் பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தியவர்களில் முக்கியமானவர் ஆவார். இந்தி மொழியை தென்னிந்தியாவில் பரப்புவதை, தமது வாழ்நாளின் முக்கியப் பணியாக கருதி செயல்பட்டு வந்ததுடன், பல்வேறு வெளியீடுகள் மூலம், அவரது தாய்மொழியான தெலுங்கு மொழியையும் ஊக்குவித்து வந்தார். தெலுங்கு மொழி சமிதியின் நிறுவனச் செயலாளராகவும் அவர் திகழ்ந்தார்.
சகோதர, சகோதரிகளே,
இந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை நாம் அளிக்க வேண்டும், குறிப்பாக, நமது தாய் மொழிக்கு, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம். நமது கலாச்சார பாரம்பரியத்தில், மொழி ஒரு மிகமுக்கியமான அம்சம் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்; மொழி தான் நமக்கு அடையாளம், சுயமரியாதையை வழங்குவதோடு, நாம் யார் என்பதையும் வெளிப்படுத்துகிறது. எனவேதான், உங்களது தாய் மொழியில் பேசுவதை பெருமையாகக் கருதுங்கள் என்று நான் அடிக்கடி கூறிவருகிறேன்!
புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட ஆவணம் என்பதோடு, பரவலான கலைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, நவீன காலத்திற்கேற்ப கல்வியில் பன்முக அணுகுமுறையைப் பின்பற்றுவதிலும் சிறப்புக் கவனம் செலுத்துகிறது. இந்தியக் கல்வி முறையைப் பிரித்தெடுத்து, ‘தொழில்ரீதியான மற்றும் தாராள கல்வி‘ முறைகளுக்கிடையிலான கடினமான மற்றும் செயற்கைத் தடைகளை தகர்த்தெறிவதே இதன் நோக்கம் ஆகும்.
‘தரமான கல்வி‘ என்பது, 64 கலைகளைப் பற்றிய அறிவு என்று பண்டையக்காலத்தில் கூறப்பட்டதைத்தான் புதிய தேசிய கல்விக் கொள்கையும் எடுத்துரைக்கிறது. வேதியியல் மற்றும் கணிதம், போன்ற அறிவியல் துறைகள், ‘தொழில் பிரிவுகளான‘ தச்சுத்தொழில், ஆடை தயாரிப்பு, மற்றும் தொழில்சார்ந்த மருத்துவம், பொறியியல் போன்றவற்றுடன், தொலைத்தொடர்பு, வாதம் மற்றும் விவாத அறிவாற்றல்களையும் உள்ளடக்கியது தான் இந்தக் கலைகள்.
கல்வித்துறையில் பரவலான கலைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தக்கூடிய, அதுபோன்ற முழுமையான அணுகுமுறை மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், சமீப தசாப்தங்களில், நமது கல்வி முறையில் பரவலான கலைகள் இரண்டாந்தர நிலைக்கு புறந்தள்ளப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது. பரவலான கலைகள், ஆழ்ந்த சிந்தனை, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் தனிநபரின் தகவமைப்பு போன்ற பண்புகளை வளர்த்தெடுக்கும். 21-ம் நூற்றாண்டு பொருளாதாரத்தில் இதுபோன்றவற்றுக்குத் தான் அதிக தேவை உள்ளது. பொருளாதாரத்தின் எந்தப்பிரிவும் காற்றுப்புகாதவாறு செயல்பட முடியாது. எனவே நாம், நமது ‘பாரம்பரிய‘ பரவலான கலைகளை மீள கண்டுபிடிப்பதன் மூலமே, தனிநபர்களை சிறப்பானவர்களாக உருவாக்க முடியும்.
அந்தவகையில், ஸ்டெம்-அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களைப் பயிலும் மாணவர்கள், தங்களது பட்டப்படிப்பில், பரவலான கலைகள், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஈடுகொடுக்கும் வல்லமையைப் பெறுவது அவசியம். மானுடவியல் மற்றும் கலைகள் நன்கு ஒருங்கிணைந்த பாடங்களுக்கான பல்வேறுபட்ட மதிப்பீடுகள், மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு, உயர்ந்த சமூக மற்றும் தார்மீக விழிப்புணர்வு, மேம்பட்ட தீவிர சிந்தனை, குழுவாக பணியாற்றும் பண்பு, தொடர்பு போன்ற திறன்களை மேம்படுத்தும்.
பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள், இந்த திசையை நோக்கிச் செல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பம்பாய் ஐஐடி, சமீபத்தில், பரவலான கலைகள், அறிவியல் மற்றும் பொறியியல் ஆகியவற்றை ஒரே பிரிவில் பயிற்றுவிக்கும் இளநிலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிகிறேன். க்ரியா பல்கலைகழகமும், அதுபோன்ற படிப்புகளை வழங்குவதாக என்னிடம் தெரிவித்தனர். இது, புதிய வேலைகளை தேடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
நண்பர்களே,
இதுபோன்ற, பலதரப்பட்ட கல்வியை வழங்கும் பாடப்பிரிவுகளை தொடங்குவது குறித்து மற்ற கல்வி நிறுவனங்களும் ஆராய வேண்டும். வருங்காலத்தில் உருவாகும் எண்ணற்ற வேலை வாய்ப்புகளுக்கு, தொழிலாளர்கள், பன்முகத்திறன் வாய்ந்தவர்களாகத் திகழ்வது அவசியம். இளைஞர்கள், தாங்கள் பயின்ற பாடப்பிரிவுகளில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர்களாக மட்டுமின்றி, பிற துறைகளில் இனி உருவாகக் கூடியவற்றையும் உட்கிரகித்து செயல்படும் திறன் பெற்றவர்களாகவும் இருப்பதோடு, சிறந்த முறையில் தொடர்புகொள்ளும் திறன், வாதம் மற்றும் விவாதங்களில் சிறப்பாக ஈடுபடும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பது அவசியம். குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பதோடு, பல்வேறு துறைகளிலும் சிறந்த ஞானம் பெற்றிருப்பது, நமது புவியியல் ரீதியான முழு ஆற்றலையும் பெற உதவும்.
சகோதர, சகோதரிகளே,
குழந்தைகளிடம், அவர்களது இளமைப் பருவத்திலிருந்தே, கலை, இலக்கியம் மற்றும் சமுக அறிவியல் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தி, ஊக்குவிக்குமாறு பெற்றோர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாட்டிலுள்ள தலைசிறந்த அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, மொழிப்பாடங்கள் மற்றும் சமூக அறிவியல் போன்ற அத்தியாவசியப் பாடங்களைப் படிப்பதை நாம் புறக்கணித்துவிடுகிறோம்.
இவை தவிர, குருட்டுப்பாடமாக படிப்பது, குழந்தைகளின் படைப்பாற்றலை சிதைத்துவிடும். மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகாணக்கூடிய பொறியாளர், மருத்துவர் மற்றும் விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும்.
பரவலான கலைகளைப் பயிற்றுவிக்கும் உயர்கல்வி நிறுவனங்களும், தங்களது வளாகங்களில் இதுபோன்ற விசாரணை மற்றும் படைப்பாற்றல் திறனை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். சமூக அறிவியல் ஆராய்ச்சித் துறையில், மேலும் பல மாறுபட்ட கருத்துக்களை ஊக்குவிப்பதோடு, பல்கலைகழகங்களை, விலக்கு பெற்ற மற்றும் எதிரொலிக்கும் இடங்களாக மாற்றிவிடக்கூடாது. சமூக அறிவியல் அறிஞர்கள், கொள்கை உருவாக்குவோர் மற்றும் அதனை செயல்படுத்துவோருடன் நெருங்கிப் பணியாற்ற வேண்டும் என்பது எனது கருத்து. யதார்த்த வாழக்கையில் பிடிமானம் உடைய பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அதனை பகுத்தாய்வு செய்யும் திறன் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
நிறைவாக, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், கலையையும் தங்களது பாடத்திட்டத்தில் ஒருங்கிணைந்த அம்சமாக சேர்ப்பதுடன், கலை மற்றும் மானுடவியல் பின்னணி கொண்ட மாணவர்கள், கணிப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் அதுபோன்ற முன்னணிப் பிரிவுகளிலும் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவர்கள், தங்களது ஆராய்ச்சிப் பணிகளில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இந்த நவீன முறைகளைப் பயன்படுத்த வல்லமை பெற்றவர்களாகத் திகழ வேண்டும்.
ஆசிரியர்களைப் பொறுத்தவரை, கற்றல், அங்கீகரித்தல் மற்றும் கூட்டு கல்விச் சூழலில் அதிகாரமளிக்கப்பட்டவர்களாக இருப்பதோடு, வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கான அடித்தளத்தையும் உருவாக்க வேண்டும். கற்போரை, தற்காலத்திற்கேற்ப, பரந்துபட்ட வேலைவாய்ப்புகளை நோக்கிச் செல்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அந்த வகையில், இந்த மையம் புதுமையான ஆராய்ச்சியை ஊக்குவிப்பதோடு, புதிய தலைமுறையைச் சேர்ந்த சமூக அறிவியலாளர்களை உருவாக்கி, அவர்கள் பயிலும் பாடப்பிரிவிலும், பிற துறைகளைப் பற்றியும் கேட்டறியும் திறனை வலுப்படுத்துவதோடு, முக்கியமான பொதுப் பிரச்சினைகளைல் ஆழ்ந்த ஞானத்தையும் ஏற்படுத்த வேண்டும். இந்த மையத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்ட, இந்தப் பல்கலைகழகத்தின் நிறுவனர்கள், நிர்வாகிகள் மற்றும் துணைவேந்தரை நான் பாராட்டுகிறேன். இந்த மையம் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுவதற்காக, இந்தத் திட்டத்திற்கு தாராளமாக நிதியுதவி அளிக்க முன்வந்த, காலஞ்சென்ற திரு.மோட்டூரி சத்யநாராயணாவின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மையத்தை திறந்து வைத்ததில் மீண்டும் ஒருமுறை நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற முயற்சிகளால், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுடன், மற்ற பாடங்களையும் கற்கும் மையமாக இந்தியா உருவெடுப்பதுடன், உலக அரங்கில் விஸ்வகுருவாகவும் உருவெடுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, வலிமையான, உள்ளடக்கிய, பன்முகத்தன்மை கொண்ட கற்றல் முறையை உருவாக்கப் பாடுபடுவோம்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.
ஜெய் ஹிந்த்!”
***
(Release ID: 1753254)
Visitor Counter : 243