சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

“அந்தமான் நிகோபார் , காரைக்காலில் இந்த கல்வியாண்டு முதல் புதிய எம்.பி ஏ படிப்புகள் ” - துணைவேந்தர் குர்மீத்சிங் தகவல்

Posted On: 14 JUL 2021 3:48PM by PIB Chennai

புதுவைப் பல்கலைக்கழக ஆளுகைக்குக் கீழ் வரும் அந்தமான் நிகோபார் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயங்கிவரும் பல்கலைக்கழக மையங்கள் சார்பாக இந்த கல்வியாண்டு முதல் எம் பி படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் 2021 மற்றும் 2022 கல்வி ஆண்டிற்கான முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் குறித்த மாணவர்களுக்கான விவரக்குறிப்பேடு அறிமுக விழா   பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக துணைவேந்தர் பேராசிரியர்  குர்மீத்சிங் கலந்து கொண்டு வெளியிட்டார்முதல் பிரதியை அந்தமான் நிகோபார் தீவு பல்கலைக்கழக மையத்தின்  பொறுப்பு அதிகாரி திரு ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்

அப்போது பேசிய துணைவேந்தர் திரு குர்மீத் சிங், உலகளவிலான தர வரிசைப் பட்டியலில் முன்னணியிலுள்ள 1000 பல்கலைக்கழகங்களில் சிறந்த உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனமாகப் புதுவைப் பல்கலைக்கழகம்  இருந்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, உலகத்தரத்திலான  உயிர்தொழில் நுட்பம், வேதியியல், நுண்ணுயிரியல் மற்றும் பன்னாட்டு அளவிலான அறிவியல்  ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகத்தில் நடந்து வருகின்றன. இதில்  பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் உழைப்பால் புதுவைப் பல்கலைக்கழகம் உலகளவில் ஆய்வுத்துறையில் எதிர்காலத்தில் முன்னேறி இந்தியாவிற்குப் பெருமைச் சேர்க்கும்.

பல்கலைக்கழகப் படிப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும், பழங்குடியின மாணவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காக, இந்த கல்வியாண்டு முதல் அந்தமான் நிகோபார் பல்கலைக்கழக மையம் சார்பில் முதுநிலை வணிக மேலாண்மை  மற்றும் பல்லுயிர் பிராணிகள்  குறித்த பட்டயப் படிப்பும் புதியதாக  தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு  காரைக்கால் பல்கலைக்கழக கல்வி மையம் சார்பில் முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.) வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாணவர்களின் திறன்களையும், அறிவாற்றலையும், வேலைவாய்ப்புகளையும், பன்னாட்டு உறவுகளையும் மேம்படுத்துகின்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழக நவீன  பாடப்பிரிவுகளில் சேர்ந்து மாணவர்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். விழாவில் பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் திரு கே மகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

***



(Release ID: 1735368) Visitor Counter : 98


Read this release in: English