அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இணைய அடிப்படையிலான உணரி பலகையைப் பயன்படுத்தி தீர்வுகளை மேற்கொள்வதற்கான தேசிய ஹேக்கத்தான்: சென்னை ஐஐடி, சோனி இந்தியா நிறுவனம் ஏற்பாடு

Posted On: 10 JUL 2021 8:59AM by PIB Chennai

சம்வேதன் 2021- இந்தியாவிற்கான தீர்வுகளை உணர்தல்' என்று அழைக்கப்படும் ஓர் தேசிய ஹேக்கத்தான் மூலம் இணைய அடிப்படையிலான உணரி பலகையைப் பயன்படுத்தி சமூக நலன் சார்ந்த இந்தியா குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் தற்போது பங்கு பெறலாம்.

இந்த பிரம்மாண்ட போட்டிக்கான முன்பதிவு கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. இந்தியா முழுவதும் உள்ள குடிமக்கள் இதில் பங்கேற்கலாம். சோனி இந்தியா மென்பொருள் மையத்துடன் இணைந்து சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம்-பிரவார்தக் தொழில்நுட்பங்கள் அமைப்பு (ஐஐடிஎம்-பிடிஎஃப்) நடத்தும் இந்த போட்டியில் சோனி நிறுவனத்தின் ஸ்ப்ரெசன்ஸ் (SPRESENSE) பலகையை பங்கேற்பாளர்கள் பயன்படுத்தலாம். ஐஐடிஎம்-பிடிஎஃப் என்பது ஒருங்கிணைந்த சைபர்- இயற்பிய அமைப்பு முறைகளுக்கான தேசிய இயக்கத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் ஆதரவளிக்கப்படும் உணரி, இணைப்பு, ஊக்கிகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புமுறை  ஆகிய துறைகளுக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையமாகும்.

இந்த ஹேக்கத்தானில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா, “எதிர்காலம் என்பது தகவல் தொடர்பு, கணினி, தகவல் மற்றும் தரவு சேகரிப்பு, இயந்திர உணர்திறன், தன்னாட்சி முடிவுகள் மற்றும் செயல்கள் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் இயற்பியல் அமைப்புகளின் நெருக்கமான ஒருங்கிணைப்பு பற்றியதாகும். எனவே சைபர் இயற்பிய அமைப்புமுறைகளில் அனைத்து விதமான உணரிகளும் மிக முக்கிய பங்கு வகிக்கும்”, என்று கூறினார்.

காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதியென மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த மாபெரும் சவாலில் அதிகபட்சமாக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு, பதிவு செய்யலாம். கால் இறுதிச்சுற்றுக்கு மொத்தம் 75 புதிய யோசனைகள் தேர்வு செய்யப்படும். அவற்றிலிருந்து 25 மிகச்சிறந்த யோசனைகள் அரையிறுதிக்கு தேர்ந்தெடுக்கப்படும்.

இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்படும் ஏழு பேருக்கும் பரிசுகள் வழங்கப்படும். சிறந்த குழுக்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும். பரிசுத்தொகை தவிர வெற்றி பெறுபவர்கள்ஐஐடிஎம்-பிடிஎஃப் அமைப்பின் தொழில்முனைவு ஆதரவு‌ திட்டத்தில் சேர்வதற்கும் தகுதி பெறுவார்கள். மேலும், காலிறுதி நிலையில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் ஸ்ப்ரெசன்ஸ் பலகையை ஐஐடிஎம்-பிடிஎஃப் அமைப்பு இலவசமாக அளிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734357

----



(Release ID: 1734402) Visitor Counter : 241


Read this release in: English , Urdu , Hindi