சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள் ஊரக வாழ்வாதாரத்துக்குப் புத்துயிரூட்டியுள்ளது
திருச்சி மாவட்டத்தில் மியாவாக்கி பெருந்திரள் மரம் நடும் இயக்கம்
Posted On:
18 NOV 2020 3:49PM by PIB Chennai
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்- எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டம் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஊரகப் பகுதி வாழ்வாதாரத்துக்கு புத்துயிரூட்டியுள்ளது. எம்ஜிஎன்ஆர்இஜிஏ பணிகள், கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று பரவுவதைத் தடுக்க, தொழிலாளர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்படுவதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.73,504 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 251 கோடி மனித வேலை நாட்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார். 2020-21 பட்ஜெட்டில் இந்தப் பணிகளுக்காக ரூ.61,500 கோடி ஒதுக்கப்பட்டது. தற்சார்பு இந்தியா 1.0 திட்டத்தின் கீழ், ரூ.40,000 கோடி கூடுதலாக வழங்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை, 22.20 கோடி மனித வேலை நாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரவித்துள்ளனர். வழங்கப்பட்ட 88 லட்சம் வேலை அட்டைகளில் 73 லட்சம் அட்டைதாரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றர். தமிழகத்தில் 90 லட்சம் அட்டைதாரர்கள் இந்தப் பணிகளைச் செய்து வருகின்றனர். தமிழகத்தில் பெருந்தொற்றால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து, இந்தத் திட்டத்தின் ஊதியம் ரூ.254 –ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சியில், எம்ஜிஎன்ஆர்இஜிஏ பணிகள் பாசனத் திட்டங்களுக்கும், கால்வாய்கள் தூர்வாரும் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. திருச்சி மணிகண்டம் வட்டாரத்தில் உள்ள மாயனூர் பஞ்சாயத்தில் தூர் வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தநல்லூர் வட்டாரத்தின் முருங்கப்பேட்டை கிராமத்தில் மேற்பார்வையாளரின் கண்காணிப்புடன், பணியாளர்கள் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர். அனைத்து பணியாளர்களும், முகக்கவசங்கள் அணிந்து, பாதுகாப்பான இடைவெளியுடன் வேலை பார்த்து வந்தனர்.
எம்ஜிஎன்ஆர்இஜிஏ பணியாளர்களைப் பயன்படுத்தி, மியாவாக்கி முறையிலான பெருந்திரள் மரம் நடும் திட்டத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு சிவராசு, மணச்சநல்லூர் வட்டாரம், பூனம்பாளையம் கிராமத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், 50,000-க்கும் அதிகமான மா, கொய்யா, புளி, வேம்பு, சப்போட்டா, எலுமிச்சை, வாகை, பூவரசு மரக்கன்றுகள், பூனம்பாளையம் கிராமத்தில், 4.26 ஏக்கரில் மியாவாக்கி முறையின் கீழ், நடப்பட்டன. இது பசுமையைப் பராமரிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும். ஜப்பானிய முறையான மியாவாக்கி மரம் நடும் இயக்கம், திருச்சியில் முதன்முறையாக முயற்சிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஎன்ஆர்இஜிஏ பணியாளர்கள் இந்த பெருந்திரள் மரம் நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பூனம்பாளையத்தின் தோற்றம் மாறுபடும்.
திருச்சி மாவட்ட நிர்வாகம், ரயில்வே, வருவாய் துறை, இந்து அறநிலையத் துறை, பேரூராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒத்துழைத்து, மியாவாக்கி மரம் நடும் இயக்கத்தை அரசுக்கு சொந்தமான காலி இடங்களில் மேற்கொண்டுள்ளது. ஶ்ரீரங்கம் தெற்கு, தேவி தெரு, பெருமாள்புரம், சஞ்சீவ் நகர், பாலாஜி நகர், திருவானைக்கோவில், வடக்கு சீனிவாசா நகர் பகுதிகளில் 35,000 மரக்கன்றுகள் இத்திட்டத்தின் கீழ் நடப்பட்டுள்ளன. லால்குடி ரயில்வே பகுதியில், 15000 மரக்கன்றுகள் 1.75 ஏக்கரிலும், கல்லக்குடியில் 20,000 மரக்கன்றுகள் 1.30 ஏக்கரிலும் நடப்பட்டுள்ளன. சமயபுரம், மாகாளிக்குடி கிராமம் அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் ஆலய வளாகத்தில் 10,000 மரக்கன்றுகள் 0.85 ஏக்கரில் நடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எம்ஜிஎன்ஆர்இஜிஏ பணிகள் ஊரகப்பகுதி பணியாளர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்கி வருவதுடன், நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது. நீர் ஆதாரங்களை வலுப்படுத்துதல், கால்வாய் குளங்களை தூர்வாருதல், இப்போது மியாவாக்கி மரக்கன்றுகள் நடுதல் ஆகிய பணிகள் கிராமப்புற பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதுடன், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் செய்கிறது.
முருங்கப்பேட்டையில் எம்ஜிஎன்ஆர்இஜிஏ பணிகள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, மியாவாக்கி பெருந்திரள் மரம் நடும் திட்டத்தை பூனம்பாளையத்தில் தொடங்கி வைக்கிறார்
(Release ID: 1673736)
Visitor Counter : 66