மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

சுயசார்பு இந்தியா செயலி உருவாக்கத்துக்கான போட்டி-யில் வெற்றிபெற்றவர்களை அறிவித்தது மைகவ்; சுயசார்பு மற்றும் புத்தாக்கத்துக்கான முயற்சிகளை ஊக்குவிக்கிறது.

Posted On: 07 AUG 2020 8:59PM by PIB Chennai

சுயசார்பு இந்தியா செயலி உருவாக்கத்துக்கான போட்டிக்கு பட்டியலிடப்பட்ட செயலிகள் அனைத்தும், இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு ஆகஸ்ட் 7-இல் நேரலை செய்யப்பட்டது. இந்த நேரலையின் இறுதியில், செயலி உருவாக்கத்துக்கான போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன (இந்தச் செய்தி அறிக்கையின் இறுதியில் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது).

இந்திய அரசின் குடிமக்கள் பங்கேற்புத் தளமான மைகவ் புத்தாக்கத் தளத்தில் செயலிக்கான போட்டி அறிவிக்கப்பட்டது. இதில் பதிவு செய்வதற்கு இறுதி நாளான ஜூலை 26 வரை, நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பத் தொழில் முனைவோர் மற்றும் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து 6,940 பதிவுகள் பெறப்பட்டன. செயலி உருவாக்கத்துக்கான போட்டியில் முதல் முறையாக 9 வகையான பிரிவுகளில் பதிவுகள் பெறப்பட்டன. அதாவது, வர்த்தகம், மின்னணு கற்றல், பொழுது போக்கு, விளையாட்டு, சுகாதாரம், செய்தி, அலுவலகம் மற்றும் வீடுகளிலிருந்து பணியாற்றுதல், மற்றவை, சமூகம் ஆகிய பிரிவுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா கழகத்தின் கீழ் செயல்படும் தேசிய மின்னணு ஆளுமைப் பிரிவு, மெய்ட்டி ஸ்டார்ட்அப் ஹப் (MeityStartup Hub) ஆகியவற்றுடன் மைகவ் தளம் நடத்திய இந்த போட்டிக்கு அடல் புத்தாக்க இயக்கம், நிதிஆயோக் ஆகியவை ஒருங்கிணைந்து ஆதரவை தெரிவித்தன.  

போட்டியில் இடம்பெற்ற செயலிகளைக் குழுவினர் பார்வையிட்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முன்னணி இடம் பிடித்த செயலிகளை, நடுவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. நடுவர்கள் குழுவில், தொழில்துறை, புதிய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசைச் சேர்ந்த சிறந்த வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இடம்பெற்றனர்.

ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரையான 5 நாட்களுக்கு நடுவர்கள் முன்னிலையில் செயலிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வலுவான திறன், அளவீடு, பாதுகாப்பு மற்றும் எளிதாக பயன்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் செயலிகளை நடுவர்கள் மதிப்பீடு செய்தனர். அனைத்துப் பிரிவுகளிலும் ஆர்வமுள்ள மற்றும் புத்தாக்கச் செயலிகள் பெறப்பட்டன. செயல் விளக்கத்துக்குப் பிறகு, 24 செயலிகளை நடுவர்கள் அடையாளம் கண்டனர். இவற்றுக்குப் பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், எதிர்காலத்தில் செயலிகளாக இருப்பதற்கு மிகப்பெரும் வாய்ப்புள்ளதாக சிறப்புப் பிரிவாக 20 செயலிகள் அடையாளம் காணப்பட்டன. செயலிகள் உருவாக்கத்தில் பல்வேறு மட்டங்களில் உள்ள மேலும் பல்வேறு செயலிகளும், விருது பெறும் செயலிகளுடன் எதிர்காலத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக நடுவர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் செயலிகளை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்காக அடல் புத்தாக்க இயக்கத்தின் ஊக்குவிப்பு மையம் மற்றும் பிற அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும், அமைப்பு ரீதியான ஆதரவு அளிக்கவும், அறிவிப்புப் பலகைகளில் அடிக்கடி தெரிவிக்கும் வகையில் வழக்கமான முறையில் இது போன்ற போட்டிகளை நடத்துவதற்கான கொள்கையை வகுக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. உலகில் செயலிகளை வெளியிடும் மிகப்பெரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் செயலிகளை உருவாக்குவோருக்கு, உலகின் தலைசிறந்த செயலிகளை உருவாக்கும் திறன் உள்ளது. செயலிகளை உருவாக்குவதில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் பெண்களாக உள்ளனர். மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எதிர்காலத்துக்கான செயலிகளை உருவாக்கும் திறனாளர்களை இந்தியா பெற்றிருப்பதை இந்தப் போட்டி உறுதிப்படுத்தியுள்ளது.

வெற்றிபெற்றவர்களுக்கு கீழ்வருமாறு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது:

முதல் பரிசு – 20 லட்சம்

இரண்டாவது பரிசு – 15 லட்சம்

மூன்றாவது பரிசு – 10 லட்சம்

சிறப்புப் பிரிவு

அதோடு, சிறப்புப்பிரிவின் கீழ் செயலிகளை நடுவர்கள் வெளியிட்டனர். இவை எதிர்காலத்தில் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு பிரிவுகளின் கீழ், அறிவிப்புப் பட்டியலில் இந்தச் செயலிகள் இடம்பெறும்.

விருதுபெறும் செயலிகளைத் தேர்வு செய்வதற்காக, தங்களுக்குப் பிடித்தமான செயலிகளுக்கு பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில், வாக்கெடுப்பை மைகவ் வலைதளம் நடத்தியது.

செயலி உருவாக்கத்துக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்கள், சிறப்புப் பிரிவில் இடம்பெற்றவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மைகவ் வலைதளம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.



(Release ID: 1644646) Visitor Counter : 273


Read this release in: English , Hindi , Manipuri