PIB Headquarters
சீனப்பட்டாசுகளை சட்ட விரோதமாக இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை – சுங்கத்துறை முதன்மை ஆணையர் எச்சரிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2019 12:09PM by PIB Chennai
சீனவிலிருந்து பட்டாசுகளை கடத்தி, அவற்றை சட்டவிரோதமாக இந்திய சந்தையில் விற்பது, மோசமான நடவடிக்கையாகும். சீனப் பட்டாசு இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை வைத்திருப்பதோ, எடுத்துச் செல்வதோ, சேர்த்து வைப்பதோ, கடத்திச் செல்வதோ, பதுக்கிவைப்பதோ, விற்பனை செய்வதோ அல்லது வாங்குவதோ, சுங்கச்சட்டம் 1962-ன்படி, தண்டனைக்குரிய குற்றமாகும்.
சீனப் பட்டாசுகளைப் பயன்படுத்துவது, வெடிமருந்துகள் விதிகள் 2008-க்கு, முரண்பாடான செயலாகும். சீனப் பட்டாசுகளில், சிவப்பு காரீயம், தாமிர ஆக்ஸைடு, லித்தியம் போன்ற தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் உள்ளதால், அவை கேடுவிளைவிப்பதாகும். இந்த வேதிப்பொருட்கள் மிகவும் ஆபத்தானதும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவையாகும். சீனப் பட்டாசுகளை வாங்குவதால், நமது பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன், உள்நாட்டு தொழிலுக்கு அபாயத்தையும் விளைவிக்கிறது.
எனவே, மக்கள் இத்தகைய கேடு விளைவிக்கும் சீனப் பட்டாசுகளின் அட்டைகளில் உள்ள விவரங்களைப் பார்த்து, அவற்றைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். சீனப்பட்டாசுகளை யாரேனும் இருப்பு வைத்திருப்பதோ, விற்பனை செய்வதோ தெரியவந்தால், பொதுமக்கள் சென்னை சுங்கத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 044-2524 6800 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சட்டவிரோத சீனப் பட்டாசு இறக்குமதி செய்வோர், விற்பவர் மற்றும் வாங்குபவர் மீது 1962 ஆம் ஆண்டின் சுங்கச் சட்டத்தின்கீழ், சுங்கத்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் எனறு சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
*******
(வெளியீட்டு அடையாள எண்: 1589014)
வருகையாளர் எண்ணிக்கை : 211