பிரதமர் அலுவலகம்

பிரதமர் தலைமையில் உதவிச் செயலாளர்கள் பயிற்சி நிறைவு விழா: 2017 தொகுப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமரிடம் செயல் விளக்கம்

Posted On: 01 OCT 2019 3:27PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று (01.10.2019) நடைபெற்ற உதவிச் செயலாளர்கள் (2017 ஐஏஎஸ் தொகுப்பு) பயிற்சி நிறைவு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

விருப்ப மாவட்டங்களை, வெளிப்படையான மற்றும் விரைவான செயல்பாட்டுக்கான ஆளுகை உடையவைகளாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, இளம் அதிகாரிகள் பிரதமருக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

இளம் அதிகாரிகள், புதிய கருத்துகள், புதிய சிந்தனைகள் மற்றும் உள்ளத்தில் தோன்றும் காட்சி அமைவுகளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என பிரதமர் ஊக்குவித்தார். பல்வேறு தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களை திரட்டி, அவற்றை ஆய்வு செய்து, ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார். இளம் அதிகாரிகள் தொடர்ந்து கற்கக் கூடியவர்களாகவும், ஆர்வத்தை ஏற்படுத்துபவர்களாகவும் திகழ வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.  

இளம் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பிரதமர், குடிமைப்பணி அதிகாரிகள் சேவை மனப்பான்மை கொண்டவர்களாகத் திகழ்வதன் மூலமே நடுநிலைடயுடன் செயல்பட முடியும் எனவும் தெரிவித்தார்.

திட்டப்பணிகளை செயல்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்திய அவர், அரசுத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த ஏதுவாக, கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்குமாறும் இளம் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். உதவிச் செயலாளர்கள் பயிற்சி காலத்தில் தங்களுக்கு கிடைத்த சிறந்த அனுபவங்களை மனதிற்கொண்டு பணியாற்றுமாறும் பிரதமர் தெரிவித்தார்.

இளம் அதிகாரிகள் அளித்த செயல்விளக்கத்தை பாராட்டிய பிரதமர், அவர்கள் எதிர்நோக்கியுள்ள பணிகளை சிறப்பான முறையில் செயல்படுத்தவும், வாழ்த்து தெரிவித்தார். “உங்களது வெற்றி நாட்டிற்கு மிக முக்கியம். உங்களது வெற்றி ஏராளமான மக்களின் வாழ்க்கை நிலையை மாற்றியமைக்கும்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

                                                       ****

 



(Release ID: 1586953) Visitor Counter : 89