பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு கண்காட்சி 2020 வலைதளத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்

Posted On: 30 SEP 2019 11:42AM by PIB Chennai

லக்னோவில் 2020 பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 11-வது பாதுகாப்பு கண்காட்சியின் வலைதளத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் புதுதில்லியில் இன்று (30.09.2019) தொடங்கிவைத்தார். www.defexpo.gov.in என்ற இந்த வலைதளம் காட்சிப்படுத்துவோருக்கு ஆன்லைன் சேவைகளை வழங்கும்.  மேலும் பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தளவாடத் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்கள் பற்றிய தகவல்களும் இந்த வலைதளத்தில் இடம்பெற்றிருக்கும்.

இந்த வலைதளம் காட்சிப்படுத்துவோருக்கு தங்களுக்குத் தேவையான இடத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளவும் உதவுகிறது.  பதிவுகள் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நடைபெறும்.  ஆன்லைன் பணம் செலுத்துதல், மாநாட்டுக் கூடங்களுக்கான தேவையை பதிவு செய்தல் மற்றும் வர்த்தகர்களுக்கு இடையிலான பேச்சுகளுக்கு இடம் வழங்குதல் போன்ற சேவைகளும் இந்த வலைதளத்தின் மூலம் நடைபெறும். 2019 அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக, இந்த வலைதளத்தில் இடங்களை முன்பதிவு செய்வோருக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படும்.

இந்த 2020 பாதுகாப்பு கண்காட்சி பற்றிய செய்தி சேகரிப்பதற்காக ஊடகத்தினர் ஆன்லைன் மூலம் இந்த வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

 *****



(Release ID: 1586748) Visitor Counter : 108


Read this release in: English , Urdu , Hindi , Bengali