பாதுகாப்பு அமைச்சகம்

தமிழ்நாட்டின் சேலத்தில் பாதுகாப்புத் தொழில் வழித்தடம் அமைக்க நடவடிக்கை

प्रविष्टि तिथि: 15 JUL 2019 2:43PM by PIB Chennai

நாட்டின் இரண்டு இடங்களில் பாதுகாப்புத் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் தனது பட்ஜெட் (2018-19) உரையில் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு தொழில் வழித்தடமும். உத்தரப்பிரதேசத்தில் ஒரு தொழில் வழித்தடமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள தொழில் வழித்தடத்திற்கு, அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து இடங்களில், சேலமும் அடங்கியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், ஓசூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியவை இத்தொழில் வழித்தடத்திற்கு அடையாளம் காணப்பட்ட மற்ற இடங்களாகும்.

தமிழ்நாட்டில் அமைய உள்ள தொழில் வழித்தடங்கள் குறித்து,  சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இதுவரை ஆறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளியில் 20 ஜனவரி, 2019 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தின்போது, படைக்கலத் தொழில் வாரியம்/ராணுவ பொதுத்துறை நிறுவனங்கள் & தனியார் தொழில்துறையினர், தமிழக பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தில் ரூ.3,100 கோடிக்கு மேல் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும், பாதுகாப்பு தொழில் வழித்தடம் தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, ஆலோசகர் ஒருவரையும் அரசு நியமித்துள்ளது.

மாநிலங்களவையில், டாக்டர் வி மைத்ரேயன் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், இன்று (15.07.2019) எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(रिलीज़ आईडी: 1578752) आगंतुक पटल : 447
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu