உள்துறை அமைச்சகம்

கேரளாவின் வெள்ள நிலைமைகளை ஆய்வு செய்ய இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு கூடியது

முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முடிவு

இடுகை இடப்பட்ட நாள்: 17 AUG 2018 1:28PM by PIB Chennai

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் வெள்ள நிலைமைகளைப் பரிசீலிக்க இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாகத் தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு புது தில்லியில் இன்று (17.08.2018) கூடியது. அமைச்சரவைச் செயலாளர் திரு. பி.கே. சின்கா தலைமை வகித்த இந்தக் கூடுகையின்போது கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களோடு அவர் காணொளிக் கலந்துரையாடலை நிகழ்த்தினார். இராணுவம், கடற்படை, வான்படை, கடலோரக் காவல்படை, தேசியப் பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றை ஒன்று திரட்டிக் கேரளாவுக்குத் தேவையான உதவிகளை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

படகுகள், ஹெலிகாப்டர்கள், உயிர் காக்கும் அங்கிகள், உயிர் காப்பு மிதவைகள், மழை கோட்டுகள், பூட்ஸுகள், முகப்பு விளக்குகள் போன்றவற்றை வழங்கும்படி இந்த அமைப்புகளுக்கு அமைச்சரவைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களைச் சென்றடைவதற்காக மோட்டார் படகுகளை வழங்குமாறு கேரள மாநிலத் தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டார்.

இதுவரை, மத்திய அரசு 339 மோட்டார் படகுகள், 2,800 உயிர் காக்கும் அங்கிகள், 1,400 உயிர் காப்பு மிதவைகள், 27 முகப்பு விளக்குகள், 1,000 மழை கோட்டுகள் ஆகியவற்றைத் திரட்டியளித்துள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1543393) வருகையாளர் எண்ணிக்கை : 149
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , Malayalam