பிரதமர் அலுவலகம்

உகாண்டாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமரின் உரை

प्रविष्टि तिथि: 24 JUL 2018 11:55PM by PIB Chennai

உகாண்டாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திரமோடி உரையாற்றினார்.  கம்பாலாவில் நடந்த இந்நிகழ்ச்சியில் அதிபர் முசவேணி கலந்து கொண்டார்.

பிரதமர் தமது உரையில், உகாண்டாவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் தாம் ஒரு நெருக்கத்தை உணர்வதாக கூறினார்.  அதிபர் முசவேணி நிகழ்ச்சியில் பங்கேற்பது இந்திய மக்கள் மற்றும் உகாண்டாவில் உள்ள இந்திய சமூகத்தினர் மீது அவர் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது என்றார்.  புதன் அன்று உகாண்டா நாடாளுமன்றத்தில் உரையாற்றத் தமக்கு செய்யப்பட்டிருக்கும் கவுரவத்திற்கு அதிபர் முசவேணிக்கும், உகாண்டா மக்களுக்கும் தமது நன்றியை  அவர் தெரிவித்துக் கொண்டார்.

இந்தியாவிற்கும் – உகாண்டாவிற்கும் இடையேயான உறவு நூற்றாண்டுகளை கடந்தது என்றார் பிரதமர். உகாண்டாவில் ரயில் கட்டுமானப் பணி மற்றும்  காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் உட்பட இருநாடுகளுக்கும் இடையே உள்ள வரலாற்று தொடர்புகளை நினைவு கூர்ந்தார் அவர்.   உகாண்டாவின் அரசியலில் பல இந்தியர்கள் முக்கியமான பங்காற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தினர் தங்களது இந்தியத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு வருவதைக் கலாச்சார நிகழ்ச்சிகள் பிரதிபலித்ததற்கு பிரதமர் தமது பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார். 

உகாண்டா உட்பட ஆப்பிரிக்காவின் அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பிரதமர் வலியுறுத்தினார்.  காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம்,  வெளிநாடு வாழ் இந்தியர்களின் அதிக அளவிலான எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி சார்ந்த  பொதுவான சவால்கள் குறித்த பொதுவான வரலாற்றுப் பின்னணியே  இதற்கான காரணமாகும் என்றார் பிரதமர். 

இன்று உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது இந்தியா என்றார் அவர்.  தற்போது இந்தியா கார்கள் மற்றும் நவீன ரக கைப்பேசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக இந்திய மக்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்படுகிறது; தொழில்கள் தொடங்குவதற்கான முக்கியமான மையமாக  இந்தியா உருவாகிவருகிறது. 

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவின் முக்கியத்துவம் பற்றி பேசினார் பிரதமர்.  இந்தச் சூழ்நிலையில் 2015 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடந்த இந்திய – ஆப்பிரிக்க பேரவையின் உச்சிமாநாடு பற்றி குறிப்பிட்டார் அவர்.  இந்தியாவுக்கும், இதர ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே  நடந்த இருதரப்பு பேச்சு வார்த்தைகள் பற்றி அவர் குறிப்பிட்டார். 

மூன்று பில்லியன் டாலர் மதிப்புள்ள கடனுக்கான வழித்தடங்கள், கல்விக்கான நிதியுதவி மற்றும் ஈ-விசா முறை உட்பட இதர முன் முயற்சிகள் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டு பேசினார். 

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவை என்றார் அவர்.

புதிய உலகின் கட்டமைப்பில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் வலுவான பங்களிப்பை வழங்குவதாக பிரதமர் கூறினார்.

********


(रिलीज़ आईडी: 1540094) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Kannada , Malayalam