எரிசக்தி அமைச்சகம்

பத்ராட்டு சூப்பர் அனல் மி்ன் நிலையத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

प्रविष्टि तिथि: 25 MAY 2018 6:27PM by PIB Chennai

ஜார்க்கண்டில் தேசிய அனல் மின் கழகத்தின், பத்ராட்டு சூப்பர் அனல் மின் திட்டத்தின் 2400 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட முதல் பகுதிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் ஜார்க்கண்ட் மாநில அரசு மற்றும் தேசிய அனல் மின் கழகத்தின் துணை நிறுவனமான பத்ராட்டு வித்யுத் உத்பாடன் நிகாம் நிறுவனம் ஆகியவற்றில் 74:26 என்ற கூட்டு முயற்சியில் உருவாகிறது. இத்திட்டம் 4,000 மெகாவாட் உற்பத்தித் திறன் அளவுக்கு விரிவுபடுத்தப்படும்.

மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.ஆர்.கே.சிங் ஜார்க்கண்ட் மாநிலம் மற்றும் மத்திய அரசின் மதிப்புறு பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

இந்தியாவின் 19-வது மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கமாக கொண்டு தேசிய அனல் மின் கழகத்தின் பத்ராட்டு வித்யுத் உத்பாடன் நிகாம் நிறுவனம் இந்தத் திட்டத்தை இரண்டு கட்டங்களாக உருவாக்க உள்ளது. முதல் கட்டத்தில் 2,400 மெகாவாட்டும் (3x800 மெகாவாட்). 2-வது கட்டத்தில் 1600 மெகாவாட் (2x800 மெகாவாட்) உற்பத்தித் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் 85 சதவீத மின்சாரம் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ஒதுக்கப்படும். இதன் மூலம் தொலைநோக்கில் அம் மாநிலம் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி ஏற்படும். பிரதமர் சகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா (சவுபாக்யா) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் வீடுகளுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையற்ற மின்சாரம் கிடைக்க உதவும்.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் உலர் சாம்பல் வெளியேற்றும் முறை (என்.டி.பி.சி. தாத்ரிக்கு அடுத்தபடியாக) திரவக் கழிவு வெளியேற்றாத முறை, காற்று மூலம் குளிரூட்டப்படும் கண்டன்சர் தொழிற்நுட்பம் (வடக்கு கரன்புரா எஸ்.டி.பி.பி.க்கு அடுத்தபடியாக) சாம்பல் ஏற்றிச் செல்வதற்கான ரயில் வசதி ஆகியவையாகும். உயர் திறன் கொண்ட இ.எஸ்.பி., எப்.ஜி.டி. மற்றும் என்.ஓ.எக்ஸ் உமிழ்வு கட்டுப்பாட்டு முறையுடன் புதிய உமிழ்வு விதிமுறைகளை இந்தத் திட்டம் உள்ளடக்கியதாகும்.

இந்தத் திட்டத்தின் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தம் பி.எச்.இ.எல். நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. முதல் அலகு 2022 ஆம் ஆண்டு வாக்கில் அமைக்கப்படும். அதன் பின்னர் வேறு இரண்டு அலகுகள் 6 மாத இடைவெளியில் உருவாக்கப்படும்.

அருகில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதில் சிறப்புக் கவனம், உள்ளீடான வளர்ச்சி, நீடித்த மேம்பாடு ஆகியவற்றில் தேசிய அனல் மின் கழகம் உறுதிபூண்டுள்ளது. இந்த அடிப்படையில் பத்ராட்டு வித்யுத் உத்பாடன் நிகாம் நிறுவனம் ஏற்கனவே அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிப்பதுடன், அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடத்தி, மக்களுக்கு தூய்மையான குடிநீரையும் வழங்கி வருகிறது. வேலைத் திறன், சுகாதாரம், நலவாழ்வு, உள்கட்டமைப்பு வளர்ச்சி, பெண் குழந்தைகள் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தி சமுதாய மேம்பாட்டுக்கு இந்தத் திட்டம் பேருதவி புரியும்.


(रिलीज़ आईडी: 1533615) आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी