உள்துறை அமைச்சகம்

நிலநடுக்கத்தைச் சமாளிப்பது குறித்து வடகிழக்கு மாநிலங்களில் ஒத்திகை

Posted On: 26 APR 2018 2:28PM by PIB Chennai

நிலநடுக்கம் ஏற்பட்டால், அதைச் சமாளிப்பது குறித்த பரிசோதனை ஒத்திகை ஒன்று பேரிடர் மேலாண்மை தேசிய ஆணையகம்  சார்பில் நடத்தப்பட்டது. திரிபுரா, நாகாலாந்து, மிஜோரம் ஆகிய மாநிலங்களில் இந்தப் பரிசோதனை இன்று (26.04.2018) நடத்தப்பட்டது. மாநில அரசுகள் இத்தகைய சூழலில் எப்படி நடந்துகொள்கின்றன, எப்படித் தயார்நிலையில் இருக்கின்றன என்பதைக் கண்டறியும் வகையிலும் இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது. இந்த ஒத்திகை சம்பந்தப்பட்ட மாநில பேரிடர் மேலாண்மை ஆணையகங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

1897ம் ஆண்டு ஷில்லாங்கில் நேர்ந்த நிலநடுக்கத்தைப் போன்ற ஒரு நிகழ்வு நடத்திக் காட்டப்பட்டது. அந்த நிலநடுக்கம் 8.7 ரிக்டர் அளவு பதிவானது. அப்போது நடந்த பேரிடரில் ஷில்லாங் நகரமே சிதைந்து, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதுமே பாதிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட மூன்று மாநிலங்களிலும் மருத்துவமனைகள், அங்காடி வளாகங்கள்,  பள்ளிகள், உயர்ந்த கட்டடங்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் போன்ற தோற்றம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அத்துடன், சம்பவம் குறித்த தகவலை அறிந்து, விரைந்து சென்று நிலைமையைச் சமாளிக்கும் முறையை மேம்படுத்துவது, பாதிக்கப்பட்டோரை உடனடியாகக் காப்பாற்றி உதவுவது தொடர்பான பயிற்சியும் தரப்பட்டது.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ள இணையதளம் காணவும்: http://pib.nic.in/


(Release ID: 1530394)
Read this release in: English , Hindi