பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் 2018 மார்ச் 12 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

प्रविष्टि तिथि: 12 MAR 2018 9:20PM by PIB Chennai

தாய்மார்களே,  சகோதரிகளே, சகோதரர்களே, பெருமளவில் இங்குக் குழுமியுள்ள எனதருமை இளம் நண்பர்களே,

வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன். முதலில், வாரணாசி மக்களுக்கு நன்றி கூறுவதுடன் அவர்களை பாராட்டவும் செய்கிறேன். இன்றைய தினம் வாரணாசி மிகச் சிறப்பான பணியைச் செய்துள்ளது. பிரெஞ்ச் அதிபருக்கு வாரணாசி மக்கள் அளித்த உற்சாக வரவேற்பு, அந்நாட்டு மக்களை வாரணாசியைப் பற்றி அறியத் தூண்டுவதாக அமையும்.

     நாம் வேகமாகச் செல்லாவிட்டால் , நமது கார் சாலையின் நடுவே சிக்கிக்கொள்ளும் அளவுக்கு, சாலையில் மக்கள் திரண்டு நின்று இன்னமும் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்துவருகின்றனர்; அவ்வளவு கூட்டம்! வாரணாசியும், கங்கைக்கரையின் எழிலும் காண்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. வாரணாசி மக்களின் அன்பும், வாழ்த்துக்களும் இந்தோ-பிரெஞ்ச் நட்புறவை வலுப்படுத்தியுள்ளது. வாரணாசி மக்களின் இந்த மாபெரும் வரவேற்புக்கு நான் நன்றி கூறினால் மட்டும் போதாது.

     அன்னை விந்தியாவாசினியைத் தரிசிப்பதற்கும் இன்று ஒரு நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் சூரியச்சக்தி பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்வதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. சூரியச் சக்தி மின்உற்பத்தியில் பிரான்சும் இந்தியாவும் ஒருங்கிணைந்து அரிய பணிகளை ஆற்றிவருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் நேற்று தில்லி வந்த விருந்தினர்கள், சூரியச்சக்தி மின்உற்பத்தி மேம்பாட்டிற்காகப் பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொண்டுள்ளனர். நானும், மிர்சாபூரில் சூரியச்சக்தி மின்உற்பத்தி நிலையத்தைத் தொடங்கிவைக்கும் வாய்ப்பைப் பெற்றேன். இது இந்தியாவில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பிரச்சார இயக்கமாக அமைவதுடன், வீடுகளின் மேற்கூரைகளில் சூரியச்சக்தி மின்உற்பத்தித் தகடுகள் பொருத்தப்பட்டிருப்பதன் மூலம், வீடுகளில் மக்கள் ஸ்டவ் அடுப்புகளில் சமைக்க வேண்டிய அவசியமில்லை. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏதுமின்றி, நிதிச்சுமையை ஏற்படுத்தாமல் இனி எளிதாக உணவு சமைக்கலாம். தூய்மையான சமையலுக்கு இது ஒரு மாபெரும் பிரச்சார இயக்கமாக அமைந்துள்ளது.

     இந்தியாவில் 25 கோடி குடும்பங்கள் உள்ளன. எனவே ஏராளமான சந்தைவாய்ப்புகளும் உள்ளன. இதனைப் பயன்படுத்தி எனதருமை இளம் நண்பர்களும், ஐ ஐ டி மாணவர்களும் போட்டிபோட்டு, நமது தாய்மார்களும் சகோதரிகளும் உணவு சமைக்க உதவக்கூடிய பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் எரிபொருளுக்காகச் செலவு செய்வதைக் கைவிட்டு, சூரியபகவானின் ஆசியுடன் எளிதில் உணவு சமைக்க வகை செய்ய வேண்டும். இதுவே ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்குச் செய்யும் சிறந்த சேவையாக இருக்கும்.

மேலும் இன்று எனக்குக் காசியையும், பாட்னாவையும் புதிய ரயில்வே சேவையின் மூலம் இணைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. காசிக்கும், பாட்னாவுக்கும் இடையே விரைவு ரயில் சேவை தேவை என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்தப் புதிய ரயில் காலை 6 மணிக்கு, காசியில் இருந்து புறப்பட்டு, பாட்னாவுக்குக் காலை 10 மணி அல்லது 10.15 நிமிடங்களுக்குச் சென்றடையும். மாலையில் இந்த ரயில் 5 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 அல்லது 9.30 மணிக்கு அல்லது 10 மணிக்குக் காசிக்குத் திரும்பிவந்து சேரும். இந்தக் காசி-பாட்னா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலைத் தொடக்கிவைக்கும் வாய்ப்பினை மிக குறுகிய காலத்தில் பெற்றேன். ரயில்வே அமைச்சருக்கு எனது பாராட்டுதலைகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு.மனோஜ் சர்மா தலைமையில் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் ஏராளமான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

காசி இப்போது எனது இரண்டாவது வீடாகிவிட்டது. காசியின் அடையாளம் ஆன்மிகம் என்ற நிலையில் அந்த நகரம் ஹர ஹர மகாதேவ் என்ற கோஷத்துடன் தொடர்பு கொண்டது: தொழில் ரீதியில் காசி டி.எல்.டபிள்யு நிறுவனத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. எனவே, மத்திய அரசு டி.எல்.டபிள்யு நிறுவனத்துக்கு வசதி ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏனெனில், அதன் விரிவாக்கம், மேம்பாடு, நவீனமயமாக்கல் மூலம் மேலும் மேலும் பலருக்குச் சிறந்த வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும்.

ஹோலி பண்டிகை மிகச் சமீபத்தில்தான் கொண்டாடப்பட்டது. 800 கோடி ரூபாய் செலவிலான மேம்பாட்டுப் பணிகள் ஹோலி பண்டிகைக்குப் புதிய வண்ணங்கள், புதிய நறுமணங்கள், புதிய நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளது. இன்று ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களுக்கான சொந்த வீடுகளுக்குச் சாவிகளை வழங்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. நான் அவர்களிடம் கேட்டேன், இதற்கு முன் நீங்கள் எங்கே வசித்தீர்கள் என்று. கூரை வீடுகளில் என்று சிலர் பதிலளித்தனர், வேறு சிலர் குடிசைப்பகுதிகளில் வசித்ததாகக் கூறினார்கள். வேறு சிலர் ஒரு படுக்கையை மட்டும் அவ்வப்போது வெவ்வேறு இடங்களுக்கு மாற்றிக்கொண்டு வாழ்ந்ததாகக் கூறினர். அப்படியான நிலையில் அவர்களது வாழ்க்கை இருந்தது. நான் அவர்களிடம் புதிய வீடு கிடைத்த பிறகு மகிழ்ச்சியாக உணர்கிறீர்களா ஏதாவது தவறாக நடந்ததா போன்ற பல கேள்விகளைக் கேட்டேன். பின்னர் அவர்கள் தங்களது குழந்தைகளைப் படிக்கவைப்பார்களா என்று கேட்டேன். இந்தக் கேள்விக்கு அவர்கள் வேறு திசையில் திரும்பிப் பார்த்ததுதான் பதிலாக வந்தது. தற்போது அவர்களுக்கு நல்ல வீடு உள்ளது. எனவே அவர்கள் தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டியது கடமை என்று வலியுறுத்திக் கூறினேன்.

யோகி அவர்கள் வீட்டு வசதித் திட்டத்தை மக்கள் இயக்க அடிப்படையில் அமல்படுத்தினார் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது மத்திய அரசின் புதிய திட்டமல்ல. பழைய அரசு ஆட்சியில் இருந்தபோதும் இந்தத் திட்டம் இருந்தது. அப்போது நான் காசியில் சொன்னது என்னவெனில், இத் திட்டத்திற்கு ஒரு பெயரைக் கூட அவர்களால் முடிவு செய்யவில்லை என்பதுதான். ஆனால் யோகி அவர்கள் திட்டப் பயனாளிகளின் பட்டியலைத் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தார். மத்திய அரசு நிதிஒதுக்கீடு செய்தது. அடுத்த 5 மாதங்களில் 5000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குவது எங்களது கனவு. யோகி அவர்களின் தலைமையில் இது சாத்தியமாகும் என்றே நம்புகிறேன். இந்தத் திட்டம் காலக்கெடுவுடன் நிறைவேற்றப்படும் என்றும் நம்புகிறேன்.

தற்போதைய உலகில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் வளர்ச்சியை ஏற்படுத்துவது சாத்தியமற்றது. தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவது மிக முக்கியமானதாகும். ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து வசதிகளும் முக்கியமானவை. ஷிவ்புரி – புல்வாரியா இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுவருகிறது. இதில் உள்ள இரண்டு ரயில்வே கடவுகளில், இரண்டு புதிய மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன. வாரணாசி ரயில்நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.

கழிவுகளை அகற்றும் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்துள்ளது. கழிவுகளை அகற்றுவதற்குக்கூட தற்போது விழாக்கள் கொண்டாடப்படுவது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். மோடியை விரும்பாதவர்கள், குப்பை அகற்றும் விழாவை ஏற்பாடு செய்ததற்காக விமர்சிக்கத்தான் செய்வார்கள். எனினும், தூய்மை இயக்கத்தை நாம் முன்னெடுத்துச்செல்வோம். கழிவுகளைச் சொத்தாக மாற்றுவோம். கழிவுப்பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களைத் தயாரிப்பதன் மூலம் இது ஒரு மக்கள் இயக்கமாக மாறும். குப்பையில் வீசப்பட்ட பாட்டில்கள் மற்றும் பத்திரிக்கைக் காகிதங்களைக் கொண்டு குழந்தைகள் உருவாக்கிய பல்வேறு பயனுள்ள பொருட்கள் இடம் பெற்றுள்ள கண்காட்சியைக் காண வேண்டும் என்ற நோக்கத்தில் வந்துள்ள மக்களையும் இதுபோன்று செய்யுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்று தயாரிக்கப்பட்ட பொருட்களை வீடுகளில் வைத்து அலங்கரிக்கும்போது அவை நம்மைக் கவருவதாக இருக்கும். அத்துடன் அந்தப் பொருட்கள் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படக்கூடியவையாகவும் இருக்கும்.

இங்கு நடைபெற்ற இசைக்கச்சேரியை நான் கேட்டு ரசித்தேன். இது மிகச் சிறந்த இசைக்கச்சேரி. காலி பொருட்களால் உருவாக்கப்பட்ட இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, தூய்மையின் அவசியத்தை விளக்கும் பாடல்கள் பாடப்பட்டன. காலிப்பாத்திரங்களைப் பயன்படுத்தி சிறப்பான இசையை உருவாக்கியுள்ளனர். எதற்கும் பயன்படாத பொருட்கள் கூட இந்தக் குப்பைத் திருவிழாவில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருப்பதை இன்று நான் காண்கிறேன்.

வாரணாசி நகரம் தூய்மைப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உலகெங்கிலும் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்விதமாக வாரணாசியை மாற்ற வேண்டும். வாரணாசியில் அனைத்தும் கிடைக்கிறது பல நூற்றாண்டுகளாக இந்த நகரம் உள்ளது. தற்போது நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வாரணாசியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது.

ஒட்டுமொத்த உலகில் உள்ளவர்களையும் வாரணாசிக்கு வரும் வகையில் ஈர்க்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு ரூ.600 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்தச் சுத்திகரிப்பு அமைப்பு மூலம் மக்கள் ஏராளமான பயன்களைப் பெறவுள்ளனர் என்பதை எளிதில் உணரலாம்.

காசியில் ஏராளமான வயர்கள் தொங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். இதுபோன்ற வயர்கள் தொங்குவதிலிருந்து காசியை விடுவிப்பதற்கான இயக்கம் ஒன்றை நான் தொடங்கியுள்ளேன். நாடு முழுவதும் நிலத்தடிக் கம்பிவடங்கள் புதைக்கும் பணியை வாரணாசியிலிருந்து தொடங்கியிருக்கிறோம். வாரணாசியில் இந்தப்பணி மிக துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அதேவேளையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தார். அப்போது இங்குப் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில்வளாகம் அமைக்கப்படும் என நான் அறிவித்தேன். இந்தப் பாதுகாப்பு உற்பத்தித் தொழில் வளாகம் சுமார் இரண்டரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடியதாக அமையும். இந்தப்பணிகளை விரைவாக நிறைவேற்றி முடிக்கும் நோக்கில் யோகி ஆதித்யநாத் அரசும் மத்திய அரசும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.

விவசாயிகளின் நலனில் சிறப்புக் கவனம் செலுத்துவதற்காக திரு.யோகியைப் பாராட்ட விரும்புகிறேன். முன்பு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் உத்தரபிரதேசத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை. திரு.யோகியின் முயற்சிகளால் நெல் கொள்முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்பதை அறிய மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களுக்குச் சரியான விலையைப் பெற்றுவருகிறார்கள்.

மேலும் கரும்பு விவசாயிகளுக்குச் செலுத்தப்படும் தொகையின் அளவும், வேகமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, காசியின் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு இந்தத் திட்டங்கள் எவ்வாறு உதவும் என்பதை நீங்கள் சிந்தித்துத் தெரிந்துகொள்ளலாம். இன்று வேளாண்மை, மின்சாரம், ரயில்வே ஆகிய துறைகளில் பல திட்டங்களைத் தொடங்கிவைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

காசியைப் புதிய மேம்பாட்டு உச்சநிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை. காசியிலும், கிழக்கு உத்தரபிரதேசத்திலும் பல்வேறு திட்டங்களை மாநில அரசும், மத்திய அரசும் செயல்படுத்திவருகின்றன. வரும் நாட்களில் குடிமக்களுக்கு மிக முக்கியமான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தஉள்ளோம். “ஆயுஷ்மான் பாரத்” என்ற ஏழைக் குடும்பங்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் மொத்த குடும்பமுமே இன்னலுக்கு ஆளாகிறது. நோய்வாய்ப்பட்ட அந்த நபர் குடும்பத்தின் மொத்த சேமிப்பும் செலவழிந்து விடுமே என்ற அச்சம் காரணமாக  சிகிச்சை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க முயற்சி செய்கிறார். குடும்பத்தின் மொத்த கனவுகளும், அனைத்துத் திட்டங்களும் தகர்ந்து தவிடுபொடியாகி விடுகின்றன. அவருக்குச் செலவு செய்வதற்குப் பணம் பெற அடமானம் வைப்பதற்கு ஏதும் இல்லாமல் அவதிப்படுகிறார். எனது நாட்டின் குடிமக்கள் இவ்வாறு இன்னலுக்கு உள்ளாகலாமா?

சகோதரர்களே, சகோதரிகளே, நான் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு அதாவது சுமார் 50 கோடி தனிநபர்களுக்கு என ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளோம். சிகிச்சைக்குப் பணம் செலவிட முடியாத இவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசும், காப்பீட்டு நிறுவனமும் சேர்ந்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான நோய்ச் சிகிச்சை செலவினத்தை இத்தகைய குடும்பங்களுக்கு வழங்குகின்றன. இதனையடுத்து மருத்துவமனைக்குச் செல்வதை தவிர்த்துவரும் ஏழைகள் தற்போது சிறுசிறு நோய்களுக்குக் கூடச் சிகிச்சை பெற மருத்துவமனை செல்வார்கள். ஏனெனில், இந்தச் சிகிச்சைக்கான செலவினத்தை மோடி அரசு ஏற்றுக் கொள்ளும் என்று அவர்கள் அறிவார்கள்.

தனியார் துறையினர் சிறிய நகரங்களில் மக்கள் பணம் செலுத்தி சிகிச்சை பெற வர மாட்டார்கள் என்ற காரணத்திற்காக மருத்துவமனைகளை அமைக்க முன்வருவதில்லை. ஆனால் இப்போது கிராமப் பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள் அமைக்கப்படும். ஆரோக்கியப் பராமரிப்பு சம்பந்தமான சேவைகள் வழங்குவோர் இப்போது தயாராகஉள்ளனர். ஆரோக்கியப் பராமரிப்புத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும் நாட்டை ஆரோக்கியமானதாகச் செய்யவும் இயலும்.

நாட்டில் ஊட்டச்சத்துக் குறைவு ஒரு பெரிய பிரச்சனை. எனவே, நாம் ஊட்டச்சத்து இயக்கத்தைத்  தொடங்கியுள்ளோம். வரும் ஆண்டுகளில் நமது குழந்தைகள் தங்களது வயதுக்கேற்ற உயரம் மற்றும் உடல் எடை கொண்டவர்களாக இருப்பதை உறுதி செய்ய ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. நமது குழந்தைகள் ஆரோக்கியமாக, ஊட்டச்சத்துக் குறைவின்றி இருக்க எவையெல்லாம் உறுதி செய்யப்பட வேண்டும்? பயிற்சி அளிப்பதற்கு என்ன வகை ஏற்பாடுகள் உள்ளன? மக்களுக்கு, குறிப்பாகத் தாய்மார்களுக்குப் பயிற்சி அளிப்பது எவ்வாறு?

பிரதமர் போஷன் இயக்கத் திட்டம், அதாவது பி.எம்.பி.எம்.-ன் கீழ் இந்த அனைத்து கேள்விகளும் விடைகளைப் பெறுகின்றன. வரும் நாட்களில் போஷன் இயக்கம் மிகவும் ஏழைகளாக உள்ள குடும்பங்களுக்கு, நடுத்தர வகுப்புக் குடும்பங்களுக்கு, 12 முதல் 16 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு என இத்திட்டம் செயல்படுத்தப்படும். 12 முதல் 16 வயது வரையிலான பெண் குழந்தைகள் ஆரோக்கியமாக இல்லையெனில் அவர்களது உடல் வளர்ச்சி வயதுக்கு ஏற்றாற்போல அமையாது. மேலும் சில ஆண்டுகள் கழித்து, அப்பெண் தாயாகும் போது அந்தப் பெண்ணோ அல்லது குழந்தையோ இறந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் பிறந்த குழந்தை  நோய்க் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு இருப்பதால் தாயின் வாழ்க்கை இந்தக் குழந்தைக்குச் சேவை செய்வதிலேயே கழிந்துவிடும். இத்தகைய பிரச்சனைகளிலிருந்து ஏழைமக்களை மீட்பதற்காகப் பிரதமரின் போஷன் இயக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

காசியில் உள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே,

மேம்பாட்டின் அனைத்து நன்மைகளையும் காசி நகரம் பெறும் என நம்புகிறேன். கங்கை தொடர்பான அனைத்துத் திட்டங்களும் விரைவாக செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இதன் பயன்கள் வருங்காலத்தில் கிடைக்க உள்ளன.

பல்வேறு திட்டங்களை விரைவாக அமல்படுத்திய திரு.யோகி அரசுக்கு எனது பாராட்டுக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசின் திட்டங்களை விரைவுப்படுத்தியதற்காகவும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுதல்களை உரித்தாக்குகிறேன். எனக்குக் காசி மக்கள் அளித்த அன்பான வரவேற்புக்காகத் தலை வணங்குகிறேன்.

அனைவருக்கும் நன்றி.


(रिलीज़ आईडी: 1530098) आगंतुक पटल : 246
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Marathi