வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் குறு,சிறு, நடுத்தர தொழில் துறை முக்கியப் பங்கு வகிக்கும்-சுரேஷ் பிரபு

Posted On: 23 APR 2018 3:28PM by PIB Chennai

முதலாவது சர்வதேச சிறு மற்றும் நடுத்தரத் தொழில் மாநாடு 2018- புதுதில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய வர்த்தகம் & தொழில் துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு, 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற சர்வதேச சிறு, நடுத்தரத் தொழில் மாநாட்டை இந்தியாவில் முதன்முறையாக பொறுப்பேற்று நடத்தியதற்காக, மத்திய அமைச்சர் திரு.கிரிராஜ் சிங்கைப் பாராட்டினார். உலகளாவிய வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி உலக நாடுகள் விவாதித்துவரும் வேளையில், ஒரு நாட்டிற்குள்ளேயே பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பது மற்றும் ஏழை நாடுகள், பருவநிலை மாற்றம், வேலையின்மை அதிகரிப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

உள்ளார்ந்த வளர்ச்சிக்கான முகவர்களாகத் திகழும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பசுமை வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார். சந்தைக்கு நெருக்கமான இந்தத் தொழில் நிறுவனங்கள் கார்பன் பயன்பாட்டைக் குறைக்கவும் வழிவகுக்கும். வேலையின்மை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்திப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெரும் தொழில் நிறுவனங்களுக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் இடையே பாராட்டத்தக்க அளவிற்கு நட்புறவு உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சிறு தொழில் நிறுவனங்கள் நீடிப்பதுதான் பெரும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும். பெரும் தொழில் நிறுவனங்களுக்கும், சர்வதேச நிறுவனங்களுக்கும் சர்வதேச மதிப்பு மற்றும் வினியோகத் தொடர் தேவைப்படும் நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இல்லாமல் அது சாத்தியமாகாது என்றும் அவர் கூறினார். தற்போதைய தருணத்தில், பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள், சர்வதேசப் பொருளாதார நிலையை உயர்த்தக் கூடும் என்பதால், இவற்றுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



(Release ID: 1529969) Visitor Counter : 157


Read this release in: English , Urdu , Marathi , Malayalam