பிரதமர் அலுவலகம்

பிரதமரின் சவுபாக்கியா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்; தீனதயாள் உர்ஜா பவனை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Posted On: 25 SEP 2017 9:32PM by PIB Chennai

பிரதமரின் சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா அல்லது சவுபாக்கியா என்ற திட்டத்தை இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார். அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி கிடைக்கச் செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் பிறந்த நாளையொட்டி, தீன்தயாள் உர்ஜா பவன் - என்ற ஓ.என்.ஜி.சி. கட்டிடத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மும்பை அருகே உள்ள பசேயின் எரிவாயு உற்பத்தி வயலில் பூஸ்டர் கம்ப்பிரசர் வசதியையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஜன் தன் யோஜனா, காப்பீட்டுத் திட்டங்கள், முத்ரா யோஜனா, உஜ்வாலா யோஜனா, உடான் திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமைந்துள்ளன என்பதை உதாரணங்களுடன் விளக்கினார். பரம ஏழைகள் பயன்பெறும் வகையில் எந்த அளவுக்கு மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதைக் காட்டுவதற்காக இவற்றை அவர் பட்டியலிட்டார்.

இப்போது மின்சார வசதி இல்லாதவை என கணக்கிடப்பட்டுள்ள சுமார் நான்கு கோடி வீடுகளுக்கும் மின் இணைப்புகள் தருவதை நோக்கமாகக் கொண்டு பிரதமரின் சஹத் பிஜ்லி ஹர் கர் யோஜனா தொடங்கப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.16,000 கோடி. மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தகவல் விளக்க நிகழ்வின் போது பேசிய பிரதமர், மின்சார வசதி இல்லாத 18000 கிராமங்களுக்கு 1000 நாட்களில் மின்சார வசதி அளிக்க வேண்டும் என தாம் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டதை நினைவுகூர்ந்தார். இப்போது 3000 -க்கும் குறைவான கிராமங்கள் மட்டுமே மின்சார வசதி இல்லாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார். நிலக்கரி பற்றாக்குறை என்பது கடந்த காலமாகிவிட்டது, மின் உற்பத்தி அதிகரிப்பு என்பது இலக்குகளை விஞ்சிவிட்டது என்றும் பிரதமர் விளக்கினார்.

2022 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்ட மின் உற்பத்தியை 175 GW ஆக உயர்த்துவது என்ற இலக்கை நோக்கி, மின் உற்பத்தி அதிகரித்து வருவது பற்றியும் பிரதமர் பேசினார். புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணம் எந்த அளவுக்கு கணிசமாகக் குறைந்துள்ளது என்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார். மின்சார பகிர்மான வழித்தடங்களை உருவாக்குவதிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

மின் பகிர்மான நிறுவனங்களின் மின்சார பகிர்மான இழப்பை உதய் திட்டம் எந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது என்பது பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். கூட்டுறவு, கூட்டாட்சிக்குள் போட்டியை சமாளிக்கும் தன்மை ஆகியவற்றின் வெற்றிக்கு இது உதாரணமாக இருக்கிறது என்றும் விவரித்தார்.

உஜாலா திட்டத்தால் பொருளாதார அளவீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்கிய பிரதமர் எல்.இ.டி. பல்புகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

சம அளவு, திறன்மிக்க நிலை மற்றும் நீடித்த காலத்துக்கு கிடைப்பது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் எரிசக்தி தேவை கட்டமைப்பு புதிய இந்தியாவுக்கு தேவைப்படுகிறது என்று பிரதமர் கூறினார். மத்திய அரசின் பணியாற்றும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் எரிசக்தித் துறை வலுப்பெற்றிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இதனால், நாட்டில் ஒட்டுமொத்தமாக பணியாற்றும் நடைமுறையில் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்படும் என்றும் பிரதமர் கூறினார்.



(Release ID: 1504139) Visitor Counter : 159


Read this release in: English