• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ஒரே பாரதம் உன்னத பாரதம் கொள்கைக்கு வலுசேர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு

Posted On: 12 DEC 2023 1:07PM by PIB Chennai

அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (ஏ) ரத்து செய்யப்பட்டது குறித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம்  டிசம்பர் 11 அன்று  வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும் இந்தியாவில்  இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நீதிமன்றம் நிலைநாட்டியுள்ளது.  2019 ஆகஸ்ட் 5 அன்று மேற்கொள்ளப்பட்ட முடிவு அரசியல் சட்டப்படியான ஒருமைப்பாட்டை  விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டதே அல்லாமல், ஒருமைப்பாட்டை  சிதைக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று உச்சநீதிமன்றம் தெளிவாகவே  கூறியுள்ளது. 370-வது பிரிவு, நிரந்தர தன்மை கொண்டதல்ல என்ற உண்மையையும் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கின் பரந்த நிலப்பரப்பும், அமைதியான பள்ளத்தாக்குகளும், கம்பீரமான மலைகளும், கவிஞர்கள், கலைஞர்கள், சாகச வீரர்கள் ஆகியோரின் இதயங்களில் பல தலைமுறைகளாக இடம்பெற்றுள்ளன. இந்த பூமி அசாதாரணமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள இமயமலை வானத்தைத் தொட்டு நிற்கிறது. இங்குள்ள ஏரிகள் மற்றும் நதிகளின் நீர்ப்பரப்பு சொர்க்கத்தைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், கடந்த 70 ஆண்டுகளாக இந்த இடங்கள்,  சிறப்புமிக்க மக்களுக்கு சற்றும் பொருத்தமில்லாத மோசமான வன்முறை மற்றும் நிலையற்ற  தன்மையைக் கொண்டிருந்தன.

துரதிர்ஷ்டவசமாக நூற்றாண்டு கால காலனி மயம், பொருளாதார மற்றும் மனம் சார்ந்த அடிமைத்தனம் காரணமாக இது பலவகையான குழப்பம் மிக்க சமூகமாக மாறியது. மிக அடிப்படையான விஷயங்களில் தெளிவான நிலையை எடுப்பதற்கு மாறாக, இரட்டை நிலையை நாம் அனுமதித்தது குழப்பத்திற்கு வழிவகுத்தது. இத்தகைய மனநிலைக்கு  மிகப்பெரிய பலியிடமாக ஜம்மு, காஷ்மீர் மாறியது சோகமாகும். நாடு சுதந்திரமடைந்த காலத்தில்  தேசிய ஒருமைப்பாட்டுக்கான புதிய தொடக்கத்தை ஏற்படுத்த  நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.  இதற்கு பதிலாக குழப்பமான சமூக அணுகுமுறை என்பதை தொடர நாம் முடிவு செய்ததால், நீண்ட கால தேசிய நலன்கள் புறக்கணிக்கப்பட்டன.

எனது வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் இருந்து ஜம்மு, காஷ்மீர்  மக்கள் இயக்கத்துடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். ஜம்மு, காஷ்மீர் கட்டமைப்பு குறித்து நான் சார்ந்திருக்கும் சித்தாந்தம் என்பது வெறுமனே ஓர் அரசியல் விஷயம் அல்ல. அது சமூகத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவது பற்றியது. நேரு அமைச்சரவையில் முக்கியமான பொறுப்பு வகித்த டாக்டர் ஷியாமா பிரசாத்  முகர்ஜி, நீண்ட காலத்திற்கு அரசில் நீடித்திருக்க முடியும். இருப்பினும், காஷ்மீர் பிரச்சனையில் அவர் அமைச்சரவையில் இருந்து விலகினார். தனது வாழ்க்கையை இழக்க நேரிடும் என்றபோதும்,  கடுமையான பாதையை அவர் தெரிவு செய்தார். அவரது முயற்சிகளும், தியாகமும், காஷ்மீர் பிரச்சனையுடன் கோடிக்கணக்கான இந்தியர்களை உணர்வு பூர்வமாக இணைப்பதற்கு வழிவகுத்தன.  சில ஆண்டுகளுக்குப் பின், ஸ்ரீநகரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில்  அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், சக்திமிக்க முழக்கத்தை முன்வைத்தார். ‘மனிதநேயம்,’ ‘ஜனநாயகம்’, ‘காஷ்மீரியம்,’ என்ற அந்த முழக்கம்  மகத்தான ஊக்கசக்தியாக  இருக்கிறது.

ஜம்மு, காஷ்மீரில் நடந்தது நமது தேசத்திற்கும், அங்கு வாழும் மக்களுக்கும் மிகப்பெரிய துரோகம் என்பது எப்போதும்  எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.  இந்த கரையை, மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை அகற்ற, என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பது எனது வலுவான  விருப்பமாக இருந்தது. ஜம்மு, காஷ்மீர் மக்களின் துயரங்களைப் போக்க பாடுபடவேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன்.

பிரிவுகள் 370, 35 (ஏ) ஆகிய சொற்கள் இதற்கு மிகப்பெரும் தடைகளாக இருந்தன. இது தகர்க்க முடியாத சுவர் போல தோன்றியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளும், அடித்தள மக்களும் தான். இந்தியாவில் உள்ள மற்ற குடிமக்கள் பெறுகின்ற உரிமைகளையும், வளர்ச்சியையும் ஜம்மு, காஷ்மீர் மக்கள் பெறமுடியதாக நிலையை பிரிவுகள் 370, 35 (ஏ) ஆகியவை ஏற்படுத்தின. இந்தப் பிரிவுகள் காரணமாக ஒரே தேசத்தின் மக்களிடையே பாகுபாடுகள் ஏற்பட்டன. இதன் காரணமாக, அங்குள்ள மக்களின் வலிகளைத் தெளிவாக தெரிந்திருந்தாலும், பிரச்சனைகளுக்கு தீர்வு காண பணியாற்ற விரும்பினாலும், தேசத்தின் மக்கள் அதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 

பல பத்தாண்டுகளாக  இந்தப்பிரச்சனை குறித்து நெருக்கமாக அறிந்திருக்கும் ஒரு செயற்பாட்டாளன் என்ற முறையில், இதன் தனித்தன்மைகளையும், சிக்கல்களையும் நுணுக்கமாக அறிந்திருந்தேன். மேலும் ஜம்மு, காஷ்மீர் மக்கள்   வளர்ச்சியை விரும்புகிறார்கள்,  தங்களின் வலிமை மற்றும் திறன்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்களிக்க விரும்புகிறார்கள் என்பதில் நான் மிகத் தெளிவாக இருந்தேன். இவர்கள் தங்கள் குழந்தைகளின் தரமான வாழ்க்கையை விரும்புவதோடு,  வன்முறை மற்றும் நிலையற்ற  தன்மையில் இருந்து விடுபடவும், விரும்புகிறார்கள்.

இந்த அடிப்படையில், ஜம்மு, காஷ்மீர் மக்களுக்கான சேவையில், மக்களின் கவலைகளைப் புரிந்துகொள்வது, ஆதரவான செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்துவது, வளர்ச்சிக்கு முன்னுரிமை, கூடுதல் வளர்ச்சி என்ற மூன்று அம்சங்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்தோம்.

2014-ம் ஆண்டில் நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சிறிது காலத்திலேயே ஜம்மு, காஷ்மீரைத் தாக்கிய பெருவெள்ளம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையான சேதத்தை விளைவித்தது. 2014, செப்டம்பரில் நிலமையை மதிப்பீடு செய்ய நான் ஸ்ரீநகர் சென்ற போது, மறுவாழ்வுக்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதியுதவி அறிவிக்கப்பட்டது. இது நெருக்கடியான காலத்தில் மக்களுக்கு உதவுகின்ற அரசின் உறுதிப்பாட்டுக்கு அடையாளமாக விளங்கியது.  இந்த சமயத்தில், பலதரப்பு மக்களை சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். இவர்களுடனான கலந்துரையாடலில் ஒரு பொதுத்தன்மை இருப்பதை நான் கவனித்தேன். இந்த மக்கள், வளர்ச்சியை மட்டும் விரும்பவில்லை. கடந்த பல பத்தாண்டுகளாக பரவலாக நிலவுகின்ற ஊழலில் இருந்தும் விடுபட வேண்டும் என்று விரும்பினார்கள். ஜம்மு, காஷ்மீரில் ஏற்பட்ட இழப்பை நினைவுகூரும் வகையில், அந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாடுவதில்லை என்று நான் முடிவு செய்தேன். தீபாவளி தினத்தன்று காஷ்மீரில் இருப்பது என்றும் முடிவு செய்தேன். 

ஜம்மு, காஷ்மீரின் வளர்ச்சிப் பயணத்தை மேலும் வலுப்படுத்த எங்கள் அரசின் அமைச்சர்கள் அங்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்வது என்றும் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடுவது என்றும் நாங்கள் முடிவு செய்தோம். இத்தகையை பயணங்களும் ஜம்மு, காஷ்மீரில் நல்லெண்ணத்தை கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தன. 2014 மே மாதம் தொடங்கி 2019 மார்ச் மாதம் வரை 150 முறை அமைச்சர்களின் பயணம் அமைந்திருந்தது. இது ஒரு சாதனை அளவாகும். ஜம்மு, காஷ்மீரின் வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்றும்  முக்கிய நடவடிக்கையாக 2015-ல் சிறப்புத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இது அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, வேலை உருவாக்கம், சுற்றுலா மேம்பாடு, கைவினை தொழில் துறைக்கு ஆதரவு என்ற முன்முயற்சிகளைக் கொண்டிருந்தது.

ஜம்மு, காஷ்மீரில்  விளையாட்டுத் திறனின் வலிமையை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தோம். ஏன்னென்றால், இளைஞர்களின் கனவுகளை தூண்டுவதற்கான ஆற்றலை அதில் இருப்பதை   நாங்கள் உணர்ந்தோம்.. விளையாட்டு முன்முயற்சிகள் மூலம் விளையாட்டு வீரர்களின் விருப்பங்களிலும், எதிர்காலத்திலும் ஒரு மாற்றத்தை நாங்கள் கண்டோம். விளையாட்டுத் தளங்கள் மேம்படுத்தப்பட்டன. பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பயிற்சியாளர்கள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டது. உள்ளூர் கால்பந்து மன்றங்களை அமைப்பதை ஊக்குவித்தது மிகவும் தனித்துவமான விஷயங்களில் ஒன்றாக இருந்தது. இதன் விளைவு, அசாதாரமானது. திறமைமிக்க கால்பந்து வீராங்கனை அஃப்ஷன் ஆஷிக் பெயர்  எனது நினைவுக்கு வருகிறது. 2014, டிசம்பரில் இவர் ஸ்ரீ நகரில்  கல்லெறியும் கும்பலில் ஒருவராக இருந்தார். சரியான ஊக்குவிப்பு காரணமாக கால்பந்து விளையாட்டில் கவனத்தை திருப்பினார். பயிற்சிக்கு அனுப்பப்பட்ட இவர், அந்த விளையாட்டில் அதீத திறமைப் பெற்றார். உடல் தகுதி இந்தியா, உரையாடல்கள் ஒன்றில் அவருடன் நான் உரையாடியதை நினைவுகூர்கிறேன். அப்போது புகழ்பெற்ற  காலபந்து வீரர்  பெக்காமைப் போல வளைத்து ஆடு என்ற  சொற்றொபாலிருந்து இனி ஆஃப்ஷான் போல பந்தைக் கடத்து என்ற சொற்றொடருக்கு  மாற வேண்டிய தருணம்  வந்து விட்டது என்று கூறினேன்.

மற்ற சில இளைஞர்களும் குத்துச்சண்டை, கராத்தே மற்றும் பலவற்றில் மிளிரத் தொடங்கினார்கள்.

இந்தப் பிராந்தியத்தின் அனைத்து வகையான வளர்ச்சித் தேடலுக்கு திருப்பு முனையாக உள்ளாட்சித் தேர்தல்கள் அமைந்தன. மீண்டும் ஒரு முறை எதைத் தெரிவு செய்வது என்ற இக்கட்டான நிலையை நாங்கள் எதிர்கொண்டோம். அது அதிகாரத்தில் நீடிப்பதா அல்லது கொள்கைளில் இறுதியாக நிற்பதா என்பது தான். இதற்கானத் தெரிவு கடுமையானதாக இல்லை.  அரசில்  இருந்து வெளியேறினாலும், ஜம்மு, காஷ்மீர் மக்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கோட்பாட்டை உறுதியாக பற்றி நிற்பது என்பதைத் தெரிவு செய்தோம். பஞ்சாயத்து தேர்தல்களின் வெற்றி ஜம்மு, காஷ்மீர மக்களின்  ஜனநாயகத் தன்மையை  வெளிப்படுத்தியது. ஊராட்சித் தலைவர்களுடன் நான்  கலந்துரையாடியது எனது நினைவுக்கு வருகிறது. அப்போது, எந்த  இடத்திலும் பள்ளிகள் எரிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்களிடம் நான் முன் வைத்தேன். இது ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து நான் பெருமகிழ்ச்சியடைந்தேன்.  பள்ளிகள் எரிக்கப்பட்டால், மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாவோர் சிறு குழந்தைகள் தான்.

வரலாற்று சிறப்புமிக்க ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியர் ஒவ்வொருவர் மனதிலும் பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது.  சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த முடிவை நமது நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதிலிருந்து ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் பல வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.  நீதிமன்றத்தின் தீர்ப்பு 2023 டிசம்பரில் வந்துள்ளது. ஆனால் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் அணிவகுப்பைக் கண்டுள்ளன. 4 வருடத்திற்கு முன்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35(A) ஆகிய பிரிவுகளை நாடாளுமன்றத்தில் ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்ட போது மக்கள் மன்றம் மிகப்பெரிய வரவேற்பை அளித்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில் அரசியல் நிலைப்பாட்டில் ஜனநாயகத்தின் வேர்களில் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்  மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கான பலன்களைப் பெறவில்லை. அதே போல லடாக் மக்களின் விருப்பங்களும் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டன. இவை அனைத்தையும் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மாற்றியது. அனைத்து மத்திய சட்டங்களும் இப்போது எந்தவித தயக்கமும், பாரபட்சமும் இன்றி    அமல்படுத்தப்படுகின்றன. பிரதிநிதித்துவமும் பரவலாக்கப்பட்டுள்ளது - மூன்றடுக்கு பஞ்சாயத்துராஜ் முறை அமலில் இருக்கிறது. வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.  அனைவராலும் மறக்கப்பட்ட அகதி சமூகத்தினர் வளர்ச்சியின் பலனை அனுபவிக்க தொடங்கியிருக்கின்றனர்.

முக்கியமான மத்திய அரசின் திட்டங்கள் கிட்டதட்ட முழுமையடையும் கட்டத்தில் உள்ளதால். சமூகத்தின் அனைத்துப்பிரிவு மக்களும் இவற்றால் பயனடைந்துள்ளனர்.  இவற்றில் கிராமங்களில்  100 சதவீத மின்வசதியை உறுதி செய்யும் சௌபாக்யா, இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்கும் உஜ்வாலா மற்றும் எல்இடி மின்விளக்குகளை சலுகை விலையில் வழங்கும் உஜாலா திட்டங்கள் அடங்கும். வீட்டுவசதி திட்டங்கள், குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டது.  மக்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்த சுகாதார வசதிக்கான அடிப்படைக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களும் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை அடைந்தன. அரசுப் பணியிடங்களை நிரப்புவதில் ஊழலும் ஒரு தலைப்பட்சமும் இருந்த நிலையிலிருந்து மாறுபட்டு வெளிப்படைத்தன்மையோடும் முறையான நடைமுறைகளோடும் நிரப்பப்பட்டன. சிசு இறப்பு விகிதம் போன்ற இதர விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டது. அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அனைவருக்கும் கண்கூடானது. இதற்கான பெருமை இயல்பாகவே ஜம்மு காஷ்மீர் மக்களின் மனஉறுதிக்கு உரியது. இவர்கள் வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள் என்பதையும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தின் சக்திகளாக இருக்கவே  விரும்புகிறார்கள் என்பதையும் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.  ஏற்கனவே  ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவற்றின் அந்தஸ்து ஒரு கேள்விக்குறியாக இருந்தது. இப்போது வளர்ச்சி, முன்னேற்றம் சுற்றுலாப்பயணிகளின் வருகை ஆகியவற்றில் வியத்தகு சாதனை நிகழ்ந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் டிசம்பர் 11-ந் தேதி தீர்ப்பு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை வலுப்படுத்தியுள்ளது. ஒற்றுமையின் பிணைப்புகள், நல்லாட்சிக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை இது வரையறுத்துள்ளது. இப்போது  ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், ஓவியம் தீட்டுவதற்கான  தூய்மையான சித்திர துணியைப் போல பிறக்கின்றன. அப்படிப் பிறக்கும் ஆண் அல்லது பெண் குழந்தைகள் தான் தங்களின் துடிப்பான எதிர்கால விருப்பங்களை அதில் வண்ண ஓவியங்களாக தீட்ட இயலும். இப்போது மக்களின் கனவுகள் கடந்த காலத்தின் சிறைகளாக இல்லாமல் எதிர்காலத்தின் சாத்தியங்களாக இருக்கின்றன. அனைத்துக்கும் மேலாக அதிருப்தி, ஏமாற்றம், விரக்தி ஆகியவற்றிற்கு மாற்றாக வளர்ச்சி, ஜனநாயகம், கண்ணியம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

-----



(Release ID: 1985339) Visitor Counter : 74


Link mygov.in