PIB Backgrounder
azadi ka amrit mahotsav

நீலப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல்: பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்திய மீன்வளத்துறையில் ஆறு ஆண்டு கால வளர்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 12:25PM by PIB Chennai

இந்தியாவின் மீன்வளத்துறை மற்றும் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு 2026 செப்டம்பர் 10-ஆம் தேதியுடன் ஆறு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இத்திட்டம் இந்தியாவின் மீன்வளத் துறையை நவீனமயமாக்குவதிலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.

கடந்த 2019-20 நிதியாண்டில் 141.64 லட்சம் டன்னாக  இருந்த நாட்டின் மீன் உற்பத்தி, 2024-25-ல் 197.75 லட்சம்  டன்னாக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதேபோல், மீன்வள ஏற்றுமதி மதிப்பு 2019-20-ல் ரூ.46,663 கோடியாக இருந்து, 2025-26-ல் ரூ.73,890 கோடியாக கணிசமாக அதிகரித்துள்ளது. இத்துறை சார்ந்த நடவடிக்கைகளில் சுமார் 58 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீன்பிடிக்குப் பிந்தைய மேலாண்மையை மேம்படுத்த குளிர்பதனச் சங்கிலி மற்றும் சந்தை உள்கட்டமைப்புகளுக்காக ரூ.2,797 கோடி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், இயற்கை வளங்களைச் சேமிக்கவும் நவீன தொழில்நுட்பங்களுக்கு இத்திட்டம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. குறைந்த நிலம் மற்றும் நீரைப் பயன்படுத்தி அதிக மீன்களை வளர்க்கும் ஆர்.ஏ.எஸ் மற்றும் பயோஃப்ளாக் போன்ற நவீன முறைகள் நாடு முழுவதும் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மீனவர்களின் கூட்டு அதிகாரத்தை வலுப்படுத்தவும், சந்தை வாய்ப்புகளைப் பெருக்கவும் 2,195 மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள் ரூ.544.86 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் 100 கடலோர மீனவ கிராமங்கள் 'காலநிலை தாங்கும் கிராமங்களாக' மேம்படுத்தப்பட்டு வருவதுடன், ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் கடல் பாசி வளர்ப்புக்கும் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் விவசாய மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் மீன்வளத்துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மக்களின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றுக்கு வலு சேர்க்கிறது. பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், உற்பத்தி, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், வாழ்வாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் மீன்வளத்துறையை மாற்றி அமைத்து வருகிறது.

நவீன உள்கட்டமைப்பு, குளிர்பதனச் சங்கிலி வசதிகள், தொழில்நுட்ப அடிப்படையிலான மீன் வளர்ப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் மீன்வளச் சங்கிலியை மேலும் வலுப்படுத்துகின்றன. மீனவர்கள், மீன் விவசாயிகள் மற்றும் கடலோர சமூகங்களுக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் ஆதரவு, அவர்களுக்கு உயர் வருமானத்த ஈட்டித் தருவதோடு, சிறந்த சந்தை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

இந்த முயற்சிகள், நீர்வாழ் வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் 14வது நீடித்த வளர்ச்சிக்கான இலக்கிற்கும் பங்களிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308602&reg=3&lang=1

***

TV/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2310848) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Malayalam