PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவின் எரிசக்திப் பயணம்: திறனை விரிவுபடுத்துதல், பாதுகாப்பை வலுப்படுத்துதல்

प्रविष्टि तिथि: 13 AUG 2026 3:30PM by PIB Chennai

இந்தியாவின் எரிசக்தித் தேவை அதிகரித்து வரும் நிலையில், எரிசக்திப் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன் பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் நாட்டின் எரிசக்தித் துறை மாற்றம் பெற்று வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அணுசக்தி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி, வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவை இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. கொள்கை ஆதரவு, உட்கட்டமைப்பு மேம்பாடு, உள்நாட்டு உற்பத்தி, உற்பத்தித் திறன் விரிவாக்கம், பரவலாக்கப்பட்ட எரிசக்தி அணுகல் ஆகியவற்றின் மூலம் இந்தியா தனது எரிசக்தித் திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. 2026 ஜூலை நிலவரப்படி நாட்டின் மொத்த நிறுவப்பட்ட மின்திறன் சுமார் 552 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. 2014-ம் ஆண்டில் இது 249 ஜிகாவாட்டாக இருந்தது. 2026 ஜூலை 31 நிலவரப்படி புதைபடிவமற்ற எரிசக்தித் திறன் 300.50 ஜிகாவாட்டாக உள்ளது. இது மொத்த நிறுவப்பட்ட திறனில் 54 சதவீதத்துக்கும் அதிகமாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவப்பட்ட திறனில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பிலும் மின்சார உற்பத்தியிலும் நிலக்கரி தொடர்ந்து முக்கியப் பங்காற்றுகிறது. நாட்டின் முதன்மை எரிசக்தித் தேவையில் சுமார் 55 சதவீதத்தையும், மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பையும் நிலக்கரி வழங்குகிறது. 2025-26 நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 1,040.08 மில்லியன் டன்னாக இருந்தது. இதே காலகட்டத்தில் தனிப்பயன், வணிகச் சுரங்கங்களின் உற்பத்தி 210.46 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி இறக்குமதியும் 27.4 சதவீதம் குறைந்துள்ளது. நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கத் திட்டங்களை ஊக்குவிக்க ரூ.37,500 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு 2026 மே மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் 2026 ஜூலை 31 நிலவரப்படி, நிறுவப்பட்ட சூரிய எரிசக்தித் திறன் 164.59 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. 2014-ம் ஆண்டில் இது 2.8 ஜிகாவாட்டாக இருந்தது. பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் 51.58 லட்சம் வீடுகள் சூரிய மின்சக்தியால் பயனடைந்து வருகின்றன. வீடுகளின் மேற்கூரைகளில் இதுவரை, 14.8 ஜிகாவாட் சூரிய மின்சக்தி நிறுவப்பட்டுள்ளது. காற்றாலை மின்திறன் 58.14 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளதுடன், 2025-26 நிதியாண்டில் இதுவரை இல்லாத வகையில் 6.05 ஜிகாவாட் கூடுதல் திறன் சேர்க்கப்பட்டுள்ளது. உயிரி எரிசக்தி, நீர்மின் சக்தி, பசுமை ஹைட்ரஜன் துறைகளிலும் இந்தியா தனது திறனை விரிவுபடுத்தி வருகிறது.

அணுசக்தித் துறையில் 2026 ஜூலை 31 நிலவரப்படி நிறுவப்பட்ட திறன் 8.78 ஜிகாவாட்டாக உள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் அணுமின்சக்தி திறனை 100 ஜிகாவாட்டாக உயர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. சிறிய தொகுதி அணு உலைகளின் வடிவமைப்பு, மேம்பாடு, பயன்பாட்டுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புவிவெப்ப எரிசக்தி, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) பயன்பாடு, எண்ணெய், எரிவாயு ஆய்வு ஆகிய துறைகளிலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பான, நிலைத்தன்மை கொண்ட, புதுமையான எரிசக்தி அமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. உள்நாட்டு வளங்கள், உள்கட்டமைப்பு, உற்பத்தித் திறன், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலம் நம்பகமான மின்சார வசதி, வலுவான எரிசக்திப் பாதுகாப்பு, பசுமையான எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்யும் பாதையில் இந்தியா முன்னேறி வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298869&reg=3&lang=1

***

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2299110) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Gujarati