சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஜிப்மர் குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறை 500 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது

प्रविष्टि तिथि: 20 JUN 2026 3:48PM by PIB Chennai

புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் குழந்தைகள் அறுவைச் சிகிச்சைத் துறை, குழந்தைகளுக்கான 500 ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களை குழந்தைகளின் நலனுக்காகப் பயன்படுத்துவதோடு, அனைத்து தரப்பினருக்கும் சமமான சிகிச்சை வாய்ப்புகளை வழங்கும் ஜிப்மரின் உறுதிப்பாட்டை இந்தச் சாதனை வெளிப்படுத்துகிறது.

ஜிப்மரில் குழந்தைகளுக்கான ரோபோடிக் அறுவைச் சிகிச்சைத் திட்டம் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அரசுத் துறையின் கீழ் செயல்படும் உயர்நிலை மருத்துவ நிறுவனங்களில் குழந்தைகளுக்கான ரோபோடிக் அறுவைச் சிகிச்சையை அறிமுகப்படுத்திய முன்னோடி நிறுவனங்களில் ஜிப்மரும் ஒன்றாகும். இத்திட்டத்தை முதன்முதலில் டாக்டர் எஸ். குமரவேல் மற்றும் டாக்டர் பிபேகானந்த் ஜிண்டால் ஆகியோர் தொடங்கினர். பின்னர் டாக்டர் பிகாஷ் குமார் நரேடி மற்றும் டாக்டர் கிருஷ்ணகுமார் ஜி. ஆகியோரும் இத்துறையில் சான்றிதழ் பெற்று இணைந்ததன் மூலம், துறையின் நிபுணத்துவமும் சேவை விரிவாக்கமும் மேலும் வலுவடைந்தது.

கடந்த சில ஆண்டுகளில், சிறுநீரக மற்றும் சிறுநீர்ப் பாதை குறைபாடுகள், குடலியல் மற்றும் செரிமான மண்டல நோய்கள், கல்லீரல் மற்றும் பித்தநாள நோய்கள், மார்பு தொடர்பான நோய்கள் மற்றும் மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கலான குழந்தைகள் அறுவைச் சிகிச்சைகள் ரோபோடிக் முறையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில்  பல்வேறு சிக்கலான அறுவைச் சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளன. 500 ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் என்ற இந்தச் சாதனை, துறையின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்திற்கும், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் ஜிப்மர் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் சான்றாக திகழ்கிறது.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த குழந்தைகள் அறுவைச் சிகிச்சைத் துறையின் பேராசிரியரும் துறைத் தலைவருமான மருத்துவர் கிருஷ்ணகுமார், 500 ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் என்ற மைல்கல்லை எட்டியது பல ஆண்டுகளாக நடைபெற்ற அர்ப்பணிப்பு மிகுந்த குழு முயற்சி, தொடர்ச்சியான திறன் மேம்பாடு மற்றும் நிறுவனத்தின் உறுதியான ஆதரவு ஆகியவற்றின் விளைவு எனக் குறிப்பிட்டார். ரோபோடிக் தொழில்நுட்பம் அறுவைச் சிகிச்சைகளில் அதிக துல்லியத்தையும், குழந்தைகளுக்கான சிகிச்சை முடிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரோபோடிக் அறுவைச் சிகிச்சை முறைகள் குழந்தைகளுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. சிறிய வெட்டுக்காயங்கள், குறைந்த இரத்த இழப்பு, அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய வலி குறைவு, குறுகிய கால மருத்துவமனை தங்கல், விரைவான குணமடைதல் மற்றும் சிறந்த உடல் தோற்ற முடிவுகள் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. குழந்தைகளின் உடலமைப்பு மிகவும் நுட்பமானதாக இருப்பதால், துல்லியமான மற்றும் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் அறுவைச் சிகிச்சைகள் அவர்களின் நீண்டகால ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

 

இந்தச் சாதனையின் மிக முக்கியமான அம்சம், உயர்தர ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகளை சாதாரண மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கும் கிடைக்கச் செய்திருப்பதே ஆகும். தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவாகக்கூடிய இத்தகைய நவீன சிகிச்சைகள், ஜிப்மரின் பொதுச் சுகாதார சேவை அமைப்பின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கிடைக்கின்றன. நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் பலன்கள் பொருளாதார வசதியுள்ளவர்களுக்கு மட்டுமன்றி, அனைத்து குழந்தைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற ஜிப்மரின் உயரிய நோக்கத்தை இது பிரதிபலிக்கிறது.

இந்த மைல்கல்லை எட்டுவதற்கு பங்களித்த அனைவருக்கும் குழந்தைகள் அறுவைச் சிகிச்சைத் துறை தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. மயக்கவியல் துறை, செவிலியர்கள், ரோபோடிக் அறுவைச் சிகிச்சை அறை தொழில்நுட்ப நிபுணர்கள், துணை சேவைப் பிரிவுகள் மற்றும் துறையின் ஆசிரியர்கள், மருத்துவப் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பான பங்களிப்பு இந்த வெற்றியின் அடித்தளமாக அமைந்துள்ளது.

இச்சாதனைக்காக குழுவினரை பாராட்டிய ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, குழந்தைகளுக்கான 500 ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் என்பது ஜிப்மரின் மருத்துவச் சிறப்புமிக்க சேவை, புதுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும் என்று தெரிவித்தார். நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களை சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதில் ஜிப்மர் தொடர்ந்து முன்னோடியாக செயல்பட்டு வருவதாகவும், பொருளாதார நிலை எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தையும் உயர்தர சிகிச்சையைப் பெற வேண்டும் என்ற இலக்கை நிறுவனம் உறுதியாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். இந்தச் சாதனையை உருவாக்கிய குழந்தைகள் அறுவைச் சிகிச்சைத் துறையினருக்கும், இதற்குத் துணைநின்ற அனைத்து துறைகள் மற்றும் பணியாளர்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான 500 ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் என்ற இந்த வரலாற்றுச் சாதனை, மருத்துவப் புதுமை, உயர்தர சிகிச்சை மற்றும் அனைவருக்கும் சமமான சுகாதார சேவையை வழங்கும் ஜிப்மரின் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய அத்தியாயமாக அமைந்துள்ளது.

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2275649) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English