சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஈரோடு மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கான அறிவியல் அடிப்படையிலான ஊட்டச்சத்து மற்றும் இடுபொருள் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 6:38PM by PIB Chennai
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் பிரிவான கரும்பு உற்பத்தி நிறுவனம், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையுடன் இணைந்து, ஈரோடு மாவட்டம் ஆலத்துக்கோம்பையில், கரும்பு விவசாயிகளுக்காக “அறிவியல் அடிப்படையிலான ஊட்டச்சத்து மற்றும் இடுபொருள் மேலாண்மை” என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு முகாமை 2026 மே 20 அன்று நடத்தியது. இந்த நிகழ்ச்சி, எனது கிராமம், எனது பெருமை என்ற முன்முயற்சியின் கீழ் நடைபெற்றது.

இம்முகாமில் உரையாற்றிய கரும்பு உற்பத்தி நிறுவன முதன்மை விஞ்ஞானி முனைவர் டி புத்திர பிரதாப், இரசாயன உரப் பயன்பாட்டில் நாட்டின் மாநில அளவில், தமிழ்நாடு 13-வது இடத்திலும், மாநில அளவிலான உரப் பயன்பாட்டில் ஈரோடு மாவட்டம் ஐந்தாவது இடத்திலும் உள்ளது என்று குறிப்பிட்டார். உயிரி உரங்களைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஊட்டச்சத்து பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், மண் வளத்தை அதிகரிக்கவும், உயிரி உரங்கள், மண்புழு உரம் மற்றும் தொழு உரம் போன்ற மாற்று இடுபொருட்களை இயன்றவரை பயன்படுத்துமாறு விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.

தொழில்நுட்ப அமர்வில் உரையாற்றிய கரும்பு உற்பத்தி நிறுவன விஞ்ஞானி முனைவர் எஸ் அனுஷா, என்பிகே (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்) உரங்களை சமநிலையற்ற முறையில் இடுவது மண் வளத்தைப் பாதிப்பதோடு, கரும்பு உற்பத்தித் திறனையும் குறைக்கிறது என்று விளக்கினார். தொடர்ந்து, பசுவின் சாணம், கோமியம், வெல்லம், பயறு மாவு, மண், தண்ணீர் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இயற்கை உயிரி உரம் மற்றும் நுண்ணுயிர் வளர்ச்சி ஊக்கியான, “ஜீவாம்ருதம்” தயாரிப்பு குறித்த நேரடி செயல்விளக்கமும் நடத்தப்பட்டது.

பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் துணைப் பொது மேலாளர் திரு கே பி குப்புசாமி உரையாற்றியபோது, சுமார் 14.5 சதவிகித பொட்டாஷ் கொண்ட சர்க்கரைத் ஆலையின் உபபொருளான “மொலாசஸிலிருந்து பெறப்பட்ட பொட்டாசியமை, ஒரு நிலையான மற்றும் உள்நாட்டு மாற்று ஊட்டச்சத்து இடுபொருட்களாக பயன்படுத்துவதன் நன்மைகளை எடுத்துரைத்தார்.
***
SS/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265076)
வருகையாளர் எண்ணிக்கை : 8