சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் மறுசீரமைப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAY 2026 4:55PM by PIB Chennai

புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் (JIPMER) மறுசீரமைப்பு மாற்று அறுவை சிகிச்சை துறை (பிளாஸ்டிக் சர்ஜரி), புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. மறுசீரமைப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ஜிப்மர் பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காயம் மற்றும் தீக்காயங்கள் தடுப்பு மற்றும் மேலாண்மை தேசியத் திட்டத்தின் சிறப்பு மையம் (Centre of Excellence) இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) லலிதா ராமகிருஷ்ணன் மாணவர்களும் பொதுமக்களும் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பெறுவது மிகவும் அவசியம் என வலியுறுத்தினார். நிகழ்ச்சியை உயிர்வேதியியல் துறை உதவி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் (பொறுப்பு) டி. வரலட்சுமி ஒருங்கிணைத்தார்.

டாக்டர் எஸ். தினேஷ் குமார் அவர்கள் தனது உரையில், மறுசீரமைப்பு மாற்று அறுவைச் சிகிச்சை பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்து, உறுப்பு தானம் உயிர்களை காப்பாற்றும் மிக முக்கியமான செயலாகும் என்பதை எடுத்துரைத்தார். மேம்பட்ட அறுவைச் சிகிச்சை முறைகள் மூலம் கடுமையான காயங்கள் மற்றும் வடிவக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடல் செயல்பாடுகளையும் தோற்றத்தையும் மீண்டும் வழங்க முடிகிறது என்றார்.

இந்தியாவில் உறுப்பு தானம் செய்யும் நபர்களின் தேவையான அளவு அதிகரித்து வருவதாகவும், ஒரே ஒரு தானதாரர் எட்டு பேருக்கு உயிர் கொடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதயம், நுரையீரல், அகப்பை (பான்கிரியாஸ்), குடல் பகுதிகள், சிறுநீரகம், தோல், கருப்பை மற்றும் முகம் போன்றவற்றையும் தானமாக வழங்க முடியும் என்றும், இது குறிப்பாக படைவீரர்கள் மற்றும் அமிலத் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், உறுப்பு தானம் குறித்த தவறான நம்பிக்கைகள் மற்றும் வதந்திகளை நீக்குவதன் அவசியத்தை விளக்கி, உடனடி உறுப்பு சேகரிப்பு மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, மாணவர்கள் இந்த உயர்ந்த செயலுக்கு முன்வர வேண்டும் என்று ஊக்குவித்தார்.

ஜிப்மர் நிறுவனம் கைகள் மற்றும் முகம் மாற்று அறுவைச் சிகிச்சைகளில் பெற்றுள்ள அனுபவங்களை பகிர்ந்து, உலகளவில் இதுவரை 148 கைகள் மற்றும் முகம் மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 74 இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன என்பது மருத்துவத் துறையில் ஒரு சாதனையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் போது மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தினேஷ் குமார் விளக்கம் அளித்தார்.

***

TV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2257304) வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க: English