சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் 2027 இறுதிக்குள் நிறைவடையும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 MAR 2026 8:34PM by PIB Chennai

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான புதிய 4 வழித்தட ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இத்திட்டம் 2027 ஆம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) மண்டல அலுவலர் திரு. வீரேந்தர் சாம்பியால் தெரிவித்தார். சுமார் 20.9 கி.மீ நீளம் கொண்ட இந்த பாலம் இரண்டு அடுக்குகளாக கட்டப்படுகிறது.
இதில் முதல் அடுக்கு உள்ளூர் நகரப் போக்குவரத்துக்காகவும், இரண்டாம் அடுக்கு சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் கனரக சரக்கு வாகனங்களுக்காகவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் பயன்பாட்டிற்காக, நகரின் முக்கிய பகுதிகளில் வாகனங்கள் பாலத்தில் ஏறவும் இறங்கவும் வசதியாக 13 சாய்தளங்கள் அமைக்கப்படுகின்றன மேலும், நேப்பியர் பாலம் பகுதியில் அதிநவீன கேபிள் பாலம் அமைக்கப்படுகிறது
இத்திட்டம் நிறைவடையும் போது, சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் தற்போதைய 53 மில்லியன் டன்னில் இருந்து 130 மில்லியன் டன்னாக கணிசமாக அதிகரிக்கும்.
திட்ட மதிப்பீடு அதிகரித்தது குறித்து திரு. வீரேந்தர் சாம்பியால் கூறுகையில், தொடக்கத்தில் ஒற்றை அடுக்காக திட்டமிடப்பட்ட இப்பாலம், மாநில அரசின் கோரிக்கைக்கு இணங்க தற்போது ஈரடுக்கு பாலமாக மாற்றப்பட்டுள்ளது என்றார். நகர மக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக 13 சாய்தளங்கள் சேர்க்கப்பட்டதாலும், கடற்படைக்கு சொந்தமான இரண்டு கட்டிடங்களுக்கு அருகிலான வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட கேபிள் பாலம் ஆகிய கூடுதல் சிறப்பம்சங்களாலேயே திட்ட மதிப்பீடு அதிகரித்துள்ளது என்று அவர் விளக்கினார்.
கட்டுமானப் பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை திட்ட இயக்குனர் திரு. சிவம் சர்மா கூறுகையில், பருவமழை காலங்களில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, பிரம்மாண்டமான வார்ப்புத் தளங்களில் பாலத்தின் கான்கிரீட் பாகங்கள் முன்கூட்டியே முழுவீச்சில் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இவற்றை நேரடியாக கட்டுமான இடத்தில் பொருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறும் என்பதால், மழைக்காலங்களிலும் எவ்வித இடையூறுமின்றி பாலம் அமைக்கும் பணிகள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் உறுதியளித்தார்.

தற்போது போக்குவரத்து காவல்துறையின் அனுமதியுடன் பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என நாள் ஒன்றுக்கு 11 மணி நேரம் மட்டுமே கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன இதனை 16 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசு மற்றும் காவல்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 262 கி.மீ நீளமுள்ள சென்னை - பெங்களூர் விரைவுச்சாலைத் திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள 106 கி.மீ தொலைவில், மூன்று தொகுப்புகளின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த, கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரூ.60,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதுடன், தற்போது ரூ.40,000 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், வருங்காலத் திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கைகள் தயாராக உள்ளதாகவும் திரு. சாம்பியால் தெரிவித்தார்
****
TV/EA/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2237881)
வருகையாளர் எண்ணிக்கை : 80