சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பட்டுப்புழு மரபணு வளங்களைப் பாதுகாப்பது குறித்த தேசிய கருத்தரங்கு ஓசூரில் இன்று நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
06 MAR 2026 3:55PM by PIB Chennai
பட்டுப்புழு மரபணு சார்ந்த ஆதார வளங்களைப் பாதுகாப்பது குறித்த தேசியக் கருத்தரங்கு ஓசூரில் இன்று நடைபெற்றது. மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ், மத்திய பட்டு வாரியத்தின் சார்பில் மத்திய பட்டுப் புழு மரபணு ஆதார வள மையம் இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

பட்டுத்துறையில் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் வளர்ந்து வரும் புதிய கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் நீடித்த பட்டுப் புழு மரபணு ஆதார வளங்களைப் பாதுகாப்பது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய பட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் திரு பி சிவக்குமார், பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். பட்டுப் புழுவின் மரபணு சார்ந்த ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு நடைமுறைகள் குறித்தும் இந்தக் கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய பட்டு வாரியத்தின் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலர் டாக்டர் நரேஷ் பாபு, பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பான தேசிய மற்றும் சர்வேதச சட்டங்கள், கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தார். இவை வனங்கள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பிற்கு உதவிடும் என்று அவர் கூறினார்.
***
TV/SV/RJ/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2236044)
வருகையாளர் எண்ணிக்கை : 18