சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
காசி தமிழ் சங்கமம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உன்னத இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது - எந்த சக்தியாலும் நம்மைப் பிரிக்க முடியாது: குடியரசுத் துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
प्रविष्टि तिथि:
30 DEC 2025 7:09PM by PIB Chennai
காசி தமிழ் சங்கமம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உன்னத இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது என்றும் எந்த சக்தியாலும் நம்மை பிரிக்க முடியாது என்றும் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் இன்று (30 டிசம்பர் 2025) நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அவர் தலைமை உரையாற்றினார்.
இந்திய நாகரிகத்தின் இரண்டு ஒளி விளக்குகள்—காசியும், தமிழ்நாடும் என்று அவர் கூறினார். ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஆன்மீக உறவின் பந்தமாக இது திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். இவை இன்று மீண்டும் ஒன்றாக சங்கமிப்பதாக அவர் கூறினார்.
கடந்த நவம்பர் 30-ஆம் தேதி ஒலிபரப்பான “மனதின் குரல்” நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி, காசி–தமிழ் சங்கமத்தைப் பற்றி மிக அழகாகப் பேசியதை நினைவுகூர்ந்த அவர், “தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி மேன்மையானது, தமிழ் இந்தியாவின் பெருமை” என்றும் பிரதமர் தமிழை போற்றி உரைத்ததை குடியரசுத் துணைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.

“காசி–தமிழ் சங்கமம் உலகின் மிகத் தொன்மையான மொழியான தமிழும், உலகின் மிகத் தொன்மையான நகரங்களில் ஒன்றான காசியும் ஒன்றாக சங்கமிப்பதாகும்” என்றும் அவர் கூறினார்.
மகாகவி பாரதியார் கூறியபடி,
“கங்கை நதிப் புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்,
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்…”
என்ற ஒருங்கிணைந்த, ஒற்றுமையான, உறுதியான இந்தியாவை உருவாக்க வழிவகுக்கும் விழாவாக காசி தமிழ் சங்கமம் அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
பாரதியார் கண்ட கனவு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாலும், கூர்மையான திட்டங்களாலும் இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது என்றும் குடியரசுத் துணைத்தலைவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் திரு தரமேந்திர பிரதான், காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகள் மூலம், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கு வாய்ப்பு ஏற்படுவதாக கூறினார். நமது அறிவுசார் பாரம்பரியம், ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மீது இதுபோன்ற நிகழ்வுகள் பெருமிதத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி தனது தொலைநோக்கு சிந்தனையுடன் நடத்தி வருகிறார் என்று அவர் கூறினார்.
அந்தப் பாரம்பரியத்தைத் தொடரும் வகையில், காசியின் கங்கைக் கரையில் தொடங்கி ராமேஸ்வரத்தின் கடற்கரையில் நிறைவடைந்த காசி தமிழ் சங்கமம், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுப்படுத்துவதுடன், நமது மக்களையும், கலாச்சாரத்தையும், பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகளையும் ஒன்றிணைத்துள்ளது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் நாகரிகத் தொடர்புக்கு பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் புத்துயிர் அளித்துள்ளதாகக் கூறினார்.
காசிக்கும் தமிழகத்துக்கும், காசிக்கும் தென்காசிக்கும், காசிக்கும் மயிலாப்பூருக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விழா நடைபெறுகிறது என்று அமைச்சர் கூறினார்.
மகாபாரதம் வாராணாசிக்கும் தமிழகத்துக்கும் இடையிலான தொடர்பை விளக்குகிறது என்றும், சங்க இலக்கியத்திலும் காசியின் சிறப்புகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர் தர்மர், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் திரு நயினார் நாகேந்திரன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அஜித் குமார் சதுர்வேதி, சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் காமக்கோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
***
SG/AD/SE
(रिलीज़ आईडी: 2209908)
आगंतुक पटल : 29