சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பெடி செமினேர் சிபிஎஸ்இ பள்ளியின் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடத் திறப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஆற்றிய உரை
प्रविष्टि तिथि:
29 DEC 2025 7:25PM by PIB Chennai
புதுச்சேரியில் உள்ள பெடி செமினேர் சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேல்நிலைப் பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த பள்ளியின் புதிய கட்டிடம் நீண்ட கல்விப் பயணத்தின் முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுக்கான தொடர் நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார். 1844 - ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளி, கடந்த 181 ஆண்டுகளாக ஒழுக்கம், அறநெறி, பண்புள்ள மனிதர்களை சமூகத்துக்கு அளித்தல் போன்ற இலக்குடன் செயல்பட்டு புதுச்சேரிக்கும், நாட்டிற்கும் சிறந்த குடிமக்களை உருவாக்கி வருகிறது என்பதை அறிந்து பெருமிதம் அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பள்ளி நிர்வாகத்தின் தன்னலமற்ற சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தமிழ் சமூகம் கல்வியைப் போற்றும் சமூகமாக இருந்து வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். “கேடில் விழும் செல்வம் கல்வி ஒருவருக்கு, மாடல்ல மற்றயவை என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய அவர், கல்வி மட்டுமே ஒரு மனிதனுக்கு அழியாத செல்வம் என்றும், மற்ற அனைத்து செல்வங்களும் நிலையானவை அல்ல என்பது திருவள்ளுவரின் வாக்கு என்று அவர் தெரிவித்தார்.
வெள்ளத்தால் போகாது,
வெந்தழலால் வேகாது,
வேந்தராலும் கொள்ள முடியாது,
கொடுத்தாலும் குறையாது,
கள்ளர்க்கு அரிது,
காவலோ எளிது—
உள்ளத்தில் பொருள் இருக்க
உலகெல்லாம் பொருள் தேடி
உழல்வதென்ன?
பணம் போகலாம்.
பதவி போகலாம்.
ஆனால் கல்வி
ஒருபோதும் போகாது
என்ற மற்றொரு தமிழ்ப் பாடல் மிக அழகாக கல்வியின் பெருமை குறித்து விளக்குவதாக அவர் தெரிவித்தார்.
கல்வியின் வலிமை குறித்து மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், மனிதனின் உயர்வுக்கு கல்வி இன்றியமையாதது என்பதை “வெள்ளத்தனைய மலர்நீட்டம் - மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு” என்ற மற்றொரு திருக்குறளை மேற்கோள் காட்டி, தாமரை மலர் நீரின் ஆழத்துக்கு ஏற்ப வளர்வது போல, மனிதனின் உயர்வு அவனது எண்ணத்தின் உயர்விற்கு ஏற்ப அறிவின் ஆழத்துக்கு ஏற்பவே அமையும் என்ற அதன் விளக்கத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
எனவே, மாணவர்கள் கல்வியை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், கல்வி உங்களை உயர்த்துவதுடன், அதுவே நீங்கள் தேசத்திற்கு ஆற்றும் சிறந்த பணியாகும் என்றார்.
நன்மையை தவிர எதுவும் பெரிதல்ல என்ற உங்கள் பள்ளியின் குறிக்கோள் தான் உண்மையான கல்வியின் அடையாளம் என்று அவர் விளக்கினார்.
பெடி செமினேர் சிபிஎஸ்இ பள்ளி, 2025 - ம் ஆண்டு முதல், மழலையர் கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை இருபாலர் கல்வியை போதித்து வருவதை அறிந்து மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார்.
இன்று திறக்கப்பட்ட மேல்நிலைப் பள்ளிக் கட்டிடம்,நவீன வகுப்பறைகள், மேம்பட்ட இயற்பியல், இரசாயனம், உயிரியல்,கணினி பாடங்களுக்கான ஆய்வகங்களுடன், மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், தேசிய கல்விக் கொள்கை - 2020, மனப்பாடம் செய்யும் கல்வி முறையிலிருந்து, சிந்திக்கும் கல்விக்கான பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.
2047 – ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்பது கட்டிடங்களால் மட்டும் உருவாகாது என்றும், அறிவு ,ஒழுக்கம்,சமூகப் பொறுப்பு ஆகிய மூன்றின் இணைப்பால் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கல்வி குறித்து மகாகவி பாரதியாரின், “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற பாடல் வரிகளை அவர் மேற்கோள் காட்டினார்.
ஒரு ஏழை குழந்தைக்கு கல்வி அழிப்பது அனைத்து தர்மங்களைக் காட்டிலும் உயர்ந்தது என்று சான்றோர் கூற்றை சுட்டிக்காட்டிய அவர், அதுவே ஒரு பள்ளியின் மிகப் பெரிய பணியாகும் என்று கூறினார்.
இத்தகைய பெருமை வாய்ந்த அரும் கல்வி சேவையில் ஈடுபட்டுள்ள பெடி செமினேர் பள்ளிக்கும், அதன் நிர்வாகிகள் ,ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
மாணவர்கள் பெருமைமிகு பாரம்பரியம் கொண்ட நாட்டின் தொடர்ச்சி என்றும், சிறந்த மனிதர்களாக வளர்ந்து, நேர்மையுடன் போட்டியிட்டு, தேசத்திற்கு பயனுள்ளவர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளாக கல்விச் சேவை வழங்கி வருகிற பெடி செமினேர் பள்ளி இன்னும் பல தலைமுறைகளுக்கு அறிவையும் அறத்தையும் வழங்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
நன்றி! வணக்கம்
ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!
***
TV/VS/SE
(रिलीज़ आईडी: 2209554)
आगंतुक पटल : 9