சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க தகவல் பலகையை ஐஐடி மெட்ராஸ் அறிமுகப்படுத்தியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2025 7:59PM by PIB Chennai
சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம் நாட்டிலேயே முதல் முறையாக மாநில அளவில் புத்தொழில் மற்றும் புத்தாக்கத்திற்கான தகவல் பலகையை உருவாக்க தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இன்னோவேஷன்-டிஎன் என்ற பெயரிலான இணையதளம் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழல் அமைப்பின் விரிவான செயல்பாடுகள் குறித்த விவரங்களை வழங்குவதுடன் முதலீட்டாளர்கள், தொழில்நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் தொடர்புடைய பல்வேறு தரப்பினருக்கு இங்குள்ள கண்டுபிடிப்புத் திறனை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான மாநில அரசின் நிறுவனமாகும்.
நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய தயாரிப்புகள்- மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கும் திறன் மேம்பாட்டுக்கும் இது வகை செய்கிறது.
புதிய கண்டுபிடிப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தொழில் முனைவோருக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கு இந்த புத்தாக்க தகவல் பலகை உதவிடும் என்று தமிழக தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை அமைச்சர் திரு டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
பெருநகரப் பகுதிகள் மட்டுமின்றி, மாவட்டந் தோறும் வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், புத்தாக்கம், மேம்பட்ட உற்பத்தி, உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் தேசிய அளவில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக நிலைநிறுத்துவதற்கான மாநில அரசின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்துள்ளது என்று அவர் கூறினார். இது தமிழ்நாடு புத்தாக்க தளத்தின் தொடக்கமாகும் என்று அமைச்சர் கூறினார்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழில்துறை பொருளாதார மாநிலமாக உள்ள தமிழ்நாடு, நாட்டிலேயே தொழில்மயமாக்கப்பட்ட மாநிலமாகவும் திகழ்கிறது. அண்மை ஆண்டுகளில், இந்த மாநிலம் புத்தொழில் நிறுவனங்களுக்கான மையமாக உருவெடுத்துள்ளதுடன் நாட்டின் புத்தாக்க மையமாகவும் நிலைநிறுத்தி கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 2025 நிலவரப்படி, தமிழ்நாட்டில் ஏறத்தாழ 19,000 புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த புத்தொழில் நிறுவனங்கள் 2.2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதுடன் ரூ.1,20,000 கோடிக்கும் அதிகமாக முதலீடுகளையும் ஈர்த்துள்ளன. 45 புத்தொழில் நிறுவனங்கள் தலா ரூ.200 கோடி அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன. மாநிலத்தில் 228 செயல்பாட்டில் உள்ள தொழில் ஊக்குவிப்பு நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன, இது நாட்டின் எந்தவொரு மாநிலத்திற்கும் இல்லாத சாதனை அளவிலான எண்ணிக்கையாகும்.
தமிழ்நாட்டில் புத்தாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கு தகவல்பலகை எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி விரிவாக எடுத்துரைத்தார். "கொள்கை வகுப்பாளர்கள் வெவ்வேறு மாவட்டங்களின் துறை சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தவும் பொருத்தமான கொள்கைகளை வகுப்பதற்கும், திட்டங்களை உருவாக்குவதற்கும் இந்த தகவல்பலகை பெரிதும் உதவிடும் என்று அவர் கூறினார். தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு புத்தொழில் நிறுவனங்களின் தொகுப்பையும் இந்த தகவல்பலகை காட்சிப்படுத்துகிறது, இதன் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து, அனுபவம் வாய்ந்த மற்றும் தொழில் சார்ந்த முதலீட்டாளர்களிடமிருந்தும் பெருமளவிலான முதலீடுகளை ஈர்க்க உதவிடும் என்றும் திரு காமகோடி கூறினார்.
***
AD/SV/AG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2165809)
வருகையாளர் எண்ணிக்கை : 41