சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
प्रविष्टि तिथि:
20 AUG 2025 4:24PM by PIB Chennai

புதுச்சேரி பல்கலைக்கழகம் ஐரோப்பாவில் உள்ள பல சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது. மாணவர் பரிமாற்றத் திட்டம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் சிறப்பம்சம் ஆகும். இது வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் படித்து, பின்னர் பெற்ற தரநிலைகளை உள்நாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றும் வசதியை வழங்குகிறது. இத்தகைய பரிமாற்றத் திட்டம் உயர்கல்வியில் சர்வதேச நடைமுறைகள், அதிவேக பன்முக கலாச்சார அனுபவங்கள் மற்றும் சர்வதேச வாழ்க்கையை உருவாக்குவதற்கான தயார்நிலையையும் வாய்ப்புகளையும் வழங்குகிறது.
இந்த கலந்துரையாடல் அமர்வில் உரையாற்றிய புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு, "இன்று நீங்கள் பரிமாற்ற மாணவர்களாகவும், நாளை எங்கள் முன்னாள் மாணவர்களாகவும் இருப்பதால் எப்போதும் நீங்கள் வரவேற்கப்படுவீர்கள்," என்று அவர் சர்வதேச மாணவர்களிடம் கூறினார். அவர்கள் தங்கியிருக்கும் போது வளாகத்தில் இணை மற்றும் பாடத்திட்டம் சாராத பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்கவும் அவர்களை அவர் ஊக்குவித்தார்.
புதிதாக வந்த பரிமாற்ற மாணவர்கள் தங்கள் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டனர். வளாகத்தில் காணப்படும் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சக மாணவர்களின் வரவேற்பு நடத்தை ஆகியவை அவர்களால் பாராட்டப்பட்டன. பல்கலைக்கழக ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்வதைத் தவிர, இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை அறியவும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
வெளியேறும் மாணவர்களிடம் பேசிய துணைவேந்தர், இந்த அரிய வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்த அவர்களை ஊக்குவித்தார். மேலாண்மை ஆய்வுகள், சட்டம் மற்றும் காரைக்கால் வளாகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் பரிமாற்ற செமஸ்டரைத் தொடர பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். கல்வி ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார புரிதலை வலுப்படுத்தும் சர்வதேச பரிமாற்றத் திட்டங்களை ஊக்குவிப்பதில் பல்வேறு துறைத் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் துணைவேந்தர் பாராட்டினார்.
பேராசிரியர் விக்டர் ஆனந்த்குமார், டீன் (சர்வதேச உறவுகள்) ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், பாவியா பல்கலைக்கழகம் (இத்தாலி), டூர்ஸ் பல்கலைக்கழகம் (பிரான்ஸ்), பாந்தியன் சோர்போன் பல்கலைக்கழகம் (பாரிஸ்) உள்ளிட்ட ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் பங்கேற்றனர். பிரெஞ்சு, ஆங்கிலம், அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் துறைகளில் தங்கள் பரிமாற்ற செமஸ்டரைத் தொடரவும், இரட்டைப் பட்டப்படிப்பு திட்டத்தின் மூன்றாம் ஆண்டு - எம்.ஏ. (சீல்- சமூகம், பொருளாதார நிர்வாகம் மற்றும் சட்டம்) படிப்பைத் தொடரவும் அவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ளனர்.
கலந்துரையாடல் அமர்வின் நிறைவில் சர்வதேச உறவுகள்- துணை டீன் பேராசிரியர் சாரதா, நன்றி கூறினார். இந்த பரிமாற்றத் திட்டம், சர்வதேசமயமாக்கல் மற்றும் உலகளாவிய கல்வி ஒத்துழைப்புக்கான புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
***
AD/SMB/AG/KR
(रिलीज़ आईडी: 2158394)
आगंतुक पटल : 39
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English