சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம் இனைந்து “கர்மயோகி திட்டம்” மூன்று நாள் முதன்மை பயிற்சியாளர் பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 02 AUG 2025 8:52PM by PIB Chennai

இந்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம் மற்றும் புதுவைப் பல்கலைக்கழகம் இணைந்து, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2, 2025 வரை, மூன்று நாள் முதன்மை பயிற்சியாளர் பயிலரங்கத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்த பயிலரங்கு, கர்மயோகி திட்டம் என்ற தேசிய அளவிலான திறன் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்திய நெறிமுறைகளில் வேரூன்றிய, திறமையான மற்றும் பொறுப்பான பொது நிர்வாக சேவையை உருவாக்குதல் ஆகும். இது, நாடு முழுவதும் சுமார் 1.5 கோடி அரசு ஊழியர்களை திறன் மேம்பாட்டின் மூலமாக மாற்றும் பன்முகக் குறிக்கோளை கொண்டுள்ளது.

   

பயிலரங்கின் தொடக்க நிகழ்வில், பல்கலைக்கழக மானியக் குழு இணைச் செயலாளர் டாக்டர் ஜிதேந்திர குமார் திரிபாதி கலந்துகொண்டு, திறன் மேம்பாட்டு இயக்கங்களில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு குறித்த முக்கிய உரையை நிகழ்த்தினார்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு தனது தலைமை உரையின் போது, பொறுப்புணர்வுடன் செயல்படும் மற்றும் சீர்திருத்தங்களை முன்னிலைப்படுத்தும் நிர்வாகத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாக, திறன் மேம்பாட்டின் கட்டமைக்கப்பட்ட அடித்தளம் மிக முக்கியம் என்பதை வலியுறுத்தினார். அவர் தொடர்ந்து, இந்தியாவின் பொது நிர்வாகத்தை நவீனமயமாக்கும் முயற்சியில், திறமையான, பொறுப்புணர்வுள்ள மற்றும் குடிமக்கள் மையமுள்ள பணியாளர்களை உருவாக்கும் நோக்கில் புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம் எடுத்துள்ள உறுதியான பங்களிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய, திறன் மேம்பாட்டு ஆணையத்தின் இணைச் செயலாளர் டாக்டர் தீக்ஷா ராஜ்புத், முதன்மை பயிற்சியாளர் பயிற்சியின் நோக்கங்கள் மற்றும் அதன் நீண்டகால தாக்கங்களை விளக்கினார். இது, உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு திடமான அடித்தளமாக அமையும் எனக் கூறினார்.

பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர், மாளவியா ஆசிரியர் பயிற்சி திட்டம் மையத்தின் இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் பி. ஜி. அருள், பங்கேற்பாளர்களை வரவேற்றார். நிகழ்வின் தொகுப்பாளராக மாளவியா ஆசிரியர் பயிற்சி திட்டம் மையத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் கே. சிருஜானா பணியாற்றினார்.

இந்நிகழ்வில், நிதி அலுவலர் பேராசிரியர் டி. லாசர், பல்கலைக்கழக நூலகர் டாக்டர் எம். விஜயகுமார், மேலாண்மைப் பள்ளியின் டீன் பேராசிரியர் பி. நடராஜன், மற்றும் மின்னணு ஊடகம் மற்றும் வெகுஜன தொடர்பு ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் எம். சுஹைப் முகமது ஹனீப் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

மூன்று நாட்கள் நடந்த பயிற்சி அமர்வுகள் மூலம், மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் பயிற்சி முடித்தவுடன் முதன்மை பயிற்சியாளர்கள் என்ற பட்டத்துடன் தங்கள் சொந்த நிறுவனங்களில் பயிற்சி வழங்கும் பொறுப்பையும் ஏற்கின்றனர்.

இந்த பயிலரங்கம், இந்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தும் முக்கியக் கட்டமாகவும், தொழில்முறை பொது சேவை வழங்கலை நிறுவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.

***

 

AD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2151877) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English