சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னையில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் 11-வது சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு"ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்துக்கு யோகா" என்ற கருப்பொருளின் கீழ் யோகா சங்கம் நடத்தப்பட்டது
Posted On:
22 JUN 2025 3:16PM by PIB Chennai
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் பேராசிரியர் என்.ஜே. முத்துக்குமார் ஆணையின்படி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிறுவனத்தில் (SCRI), "உலக நலத்திற்கு யோகா" என்ற கருப்பொருளின் கீழ் தொடர்ச்சியான யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

யோகா சங்கம் என்பது சர்வதேச யோகா தினம்- 2025ன் முக்கிய அம்சமாகும். மேலும் இந்தியா முழுவதும் 1,00,000 இடங்களில் பொதுவான யோகா நெறிமுறை (CYP) அடிப்படையில் பொதுமக்களுக்கான யோகா அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

திட்டமிட்டபடி, இந்த நிறுவனம் நேற்று (ஜூன் 21, 2025) காலை 7:00 மணி முதல் காலை 7:45 மணி வரை சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் பெரும்பாக்கத்தில் உள்ள பிவிஎம் குளோபல் பள்ளியுடன் இணைந்து 2 யோகா சங்கம நிகழ்வுகளை நடத்தியது. இந்த நிகழ்வுகள் யோகா அடிப்படையிலான வாழ்க்கை முறைகளை வலியுறுத்தும் விதமாக அமைந்திருந்தன.

அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை: சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் ஒரு யோகா சங்கம நிகழ்வை அரசு சித்த மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து நடத்தியது. சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள், வெளிநோயாளிகள், அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 350-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த துவக்க விழாவினை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர், பேரா மரு. எம்.டி. சரவணதேவி, மற்றும் பேரா. ஜி. உஜ்ஜீவனம் ஆகியோர் துவக்கி வைத்து உரையாற்றினர். மரு. அன்பரசி, ஆராய்ச்சி அலுவலர் (சித்தா), நிகழ்வை ஒருங்கிணைத்து, யோகாவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து உரையாற்றினார். மரு. பி. இளங்கனி, ஆராய்ச்சி அலுவலர் (சித்தா), நன்றியுரை ஆற்றினார்.
பிவிஎம் குளோபல் பள்ளி: மற்றொரு யோகா சங்கம நிகழ்வை, சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் பிவிஎம் குளோபல் பள்ளியுடன் இணைந்து நடத்தியது. இந்த நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்பள்ளியின் முதல்வர் திருமதி. அனுராதா ராமகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றினார். மேலும் உதவி இயக்குனர், உயிர் வேதியியல் துறை
முனைவர் ஆர் கணேசன் , இவ்வருட யோகா தினத்தின் உட்கருத்தை கூறி, ஆயுஷ் அமைச்சகம் யோகாவிற்கு வழங்கி வரும் நன்மைகளையும் உத்வேகத்தையும் பகிர்ந்து கொண்டார். அடுத்து பேசிய மரு. எல். ஜூலியட், ஆராய்ச்சி அலுவலர் (சித்தா), சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியாகிய யோகம், எட்டு நிலைகளைக் கொண்டது என்றும் யோகாவால் உடலும் மனமும் நன்னிலை அடையும் என்றும் கூறினார். மரு. ஆர் .ஷகிலா, ஆராய்ச்சி அலுவலர் (வேதியியல்), நன்றியுரை கூறினார்.
இந்த நிகழ்வுகள் யோகா அடிப்படையிலான வாழ்க்கை முறை தலையீடுகளை மேலும் ஊக்குவிக்கும், இதில் பொதுவான யோகா நெறிமுறை மற்றும் எளிய யோகாசனங்கள், ஆகியவை அடங்கும். கூடுதலாக, நிகழ்வுகளில் சுவாசப் பயிற்சிகள் குறித்த அறிவுறுத்தல்கள் மற்றும் நோய் தடுப்பு ஆரோக்கியத்திற்கான தினசரி பழக்க வழக்கங்களில் யோகாவைச் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் முக்கிய யோகா தின நிகழ்வோடு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தனிநபர்கள் இந்த இணக்கமான யோகா அமர்வுகளில் ஒன்றுபடுவார்கள். மாண்புமிகு பிரதமர் தலைமையில் இது நடத்தப்பட்டது.
யோகா தினத்திற்கு முன்னணி நிகழ்வுகளாக, சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பாளர் டாக்டர் ஏ.கனகராஜனின் வழிகாட்டுதலின் கீழ் மூத்த குடிமக்கள் உட்பட பொதுமக்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான கருப்பொருள் சொற்பொழிவுகள் மற்றும் யோகா செயல்விளக்கங்களுடன் யோகா சமவேஷை இந்நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. பொது மக்களிடையே தினசரி யோகா கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக நிறுவனத்தின் ஊழியர்கள் 21.06.2025 அன்று தங்கள் குடியிருப்பு இடத்தில் யோகா அமர்வுகளை ஏற்பாடு செய்தனர்.
சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிறுவனம் என்பது இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் சித்த மருத்துவ மற்றும் மருந்து ஆராய்ச்சிக்கான ஒரு முதன்மை நிறுவனமாகும். இது சித்த மருத்துவத்தில் உள்நாட்டு ஞானத்தையும் நவீன சரிபார்ப்பு உத்திகளையும் இணைக்கும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது.
****
AD/TS/RJ
(Release ID: 2138682)