சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பல்வகை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் சர்வதேச யோகா தின நிகழ்வு
Posted On:
21 JUN 2025 7:48PM by PIB Chennai
சென்னைக்கு அருகே முட்டுக்காட்டில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பல்வகை மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம், சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிறுவனம் “மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய யோகா” என்ற நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேசிய தகவல் மைய முன்னாள் மூத்த இயக்குநர் குப்புசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். யோகாவின் பல்வகை ஆசனங்களையும் செய்முறை விளக்கத்துடன் யோகா பயிற்சியாளர் மருத்துவர் ஜெபாலின் ஜோஸ்கோ, மருத்துவர் ஐஸ்வர்யா, மருத்துவர் பவித்ரா மற்றும் மருத்துவர் யோகப்ரியா செய்துகாட்டினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு யோகா பயிற்சியினால் ஏற்படும் நன்மைகளையும் விரிவாக எடுத்துரைத்தனர்.

நிறுவன இயக்குநர் நசிகேதா ரௌட் யோகாவின் முக்கியத்துவத்தினை பற்றி எடுத்துரைத்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகளை யோகா செய்ய வைப்பதன் மூலம் அவர்களது உடலையும், உள்ளத்தையும் வலிமை பெற செய்ய முடியும் என்று பெற்றோர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், நிறுவனத்தின் சிறப்பு கல்வி துறை தலைவர் மற்றும் விரிவுரையாளர் லீலாவதி, காமராஜ், பல்வகை மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியின் முதல்வர் தன வேந்தன், யோகா பயிற்சியாளர் பிரேமா, அலுவலர்கள், பெற்றோர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
****
AD/ PLM/RJ
(Release ID: 2138598)