சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
2025-26 கல்வியாண்டில் பல்வேறு புதிய பாடத்திட்டங்களை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது
Posted On:
26 MAY 2025 4:41PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களுக்கு மாணவர்களை தயார்படுத்தவும், தொழில் மற்றும் கல்வித்துறையில் தலைவர்களாக மாற்றவும் புதிய பாடத்திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலையில் இந்த பாடத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
விளையாட்டு மற்றும் நுண்கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு தனித்தனி பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை அறிவித்த முதல் கல்வி நிறுவனம் நாட்டிலேயே சென்னை ஐஐடிதான்.
2025–26 கல்வியாண்டில் இருந்து இளநிலைப் படிப்புகளில் நுண்கலை மற்றும் கலாச்சார சிறப்புப் பாடத்திட்டத்திற்கு இக்கல்வி நிறுவனம் மாணவர் சேர்க்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. நுண்கலை மற்றும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வெகுமதி அளித்து ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.
கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையத்தின் போர்டல் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை. மாறாக ஃபேஸ் மூலம் மாணவர் சேர்க்கைக்கான செயல்முறை தனி போர்ட்டல் மூலம் நடைபெறும். (https://ugadmissions.iitm.ac.in/face/)
‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’ கடந்த 2024-2025 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். தகுதியான மாணவர்கள் தங்கள் விளையாட்டுகளில் தொடர்ந்து சிறந்து விளங்கும் அதேநேரத்தில் உயர்கல்வியைத் தொடர இப்பாடத்திட்டம் ஊக்குவிக்கிறது.
இத்திட்டத்தின்படி சென்னை ஐஐடியின் அனைத்து பி.டெக். மற்றும் பி.எஸ். பாடத்திட்டங்களிலும் தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு பாடத்திட்டத்தில் உள்ள இரு இடங்களில், ஒரு இடம் பெண்களுக்கென ஒதுக்கப்படும். மற்றொன்று பொதுவானதாக இருக்கும்.
நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதை வரவேற்ற சென்னை ஐஐடி கல்விப் படிப்புகளுக்கான டீன் பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறுகையில், “தொழில்துறை, கல்வித்துறை ஆகியவற்றின் தேவைகளையும் மாணவர்களின் விருப்பங்களையும் கருத்தில் கொண்டு இப்பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
இந்த ஆண்டு தொடங்கப்படும் புதிய படிப்புகள்:
1. பி.எஸ். (வேதியியல்) - ஐஐஎஸ்இஆர் திறனறித் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்
2. மின்சார வாகனங்களில் எம்.டெக். – கேட் (GATE) மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்
3. பயன்பாட்டு இயந்திரவியல் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல் துறையில் 2 புதிய பி.டெக். பாடத்திட்டங்கள் - இரண்டு படிப்புகளுக்கும் ஜேஇஇ மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்
- கணினி பொறியியல் மற்றும் இயக்கவியலில் பி.டெக். (CEM)
- கருவி மற்றும் உயிரி மருத்துவப் பொறியியலில் பி.டெக். (iBME)
பி.எஸ். (வேதியியல்):
பி.எஸ்.(வேதியியல்) என்பது 4 ஆண்டு இளங்கலைப் படிப்பாகும், வேதியியலில் எம்.எஸ்.ஆக மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. மாணவர்களுக்கு வேதியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் பாடங்களில் உறுதியான அடித்தளத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, கோட்பாட்டு அறிவை நடைமுறை ஆய்வக அனுபவத்துடன் கலந்து ஆராய்ச்சி, தொழில், கல்வி ஆகிய துறைகளில் அவர்களைத் தயார்படுத்துகிறது. அத்துடன் ஏராளமான தேர்வு அடிப்படையிலான கற்றல் வாய்ப்புகளை இந்த படிப்பு வழங்குகிறது.
சென்னை ஐஐடி பி.எஸ். (வேதியியல்) படிப்பில் இடம்பெற்றுள்ள தனித்துவ அம்சங்கள்:
பி.எஸ். அல்லது எம்.எஸ்.உடன் இளங்கலைப் பட்டம் பெறும் வாய்ப்பு (எ.கா: தரவு அறிவியலுடன் பி.எஸ். வேதியியல்)
நிறுவனத்தின் தொடர்புடைய அறிவியல்- பொறியியல் துறைகளில் ப்ராஜக்ட்களை மேற்கொள்ளுதல்
எம்.எஸ். திட்டத்தின் போது பிற பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைக்கும் வாய்ப்பு
முழு வசதியுடன் கூடிய கற்பித்தல், ஆராய்ச்சி ஆய்வகங்கள்
மின்சார வாகனத் துறையில் எம்.டெக்:
கல்வி மற்றும் மோட்டார் வாகனத் துறையில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்ப்பதில் தலைமைப் பதவிக்குத் தயார்படுத்தும் வகையில் எம்.டெக். பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர்.
போக்குவரத்துத் துறை நிலையான எதிர்காலத்தை நோக்கி முன்னுதாரணமான மாற்றத்தை சந்தித்து வருகிறது, இதற்கு மின்-இயக்கம் ஒரு முக்கிய காரணமாகும். இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், வணிக வாகனங்கள் ஆகியவற்றின் விரைவான மின்மயமாக்கல் நடைபெறுகின்றன. இந்த மாற்றத்தை இயக்குவதற்கு நன்கு பயிற்சி பெற்ற மனிதவளத்தின் நல்ல அளவு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்கு, இந்தத் துறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதும், மின்சார வாகனத் துறையில் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்வதும் அவசியம்.
இந்தப் புதிய எம்.டெக். திட்டம் பல்துறை மற்றும் தொழில்துறையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இடைநிலை பாடத்திட்டத்துடன், தொழில்துறையுடன் இணைக்கப்பட்ட படிப்புகள், நடைமுறை ஆய்வகப் பணிகள், தொழில்துறை தொடர்புடன் கூடிய பயிற்சிகள், மின்சார வாகனங்களின் துணை அமைப்புகளில் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்துதல் போன்ற முக்கிய அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பி.டெக். கணக்கீட்டுப் பொறியியல் மற்றும் இயக்கவியல்
இந்த தனித்துவமான திட்டம், எதிர்கால டிஜிட்டல் பொறியியல் வாழ்க்கைக்கு மாணவர்களை தயார்படுத்தும், இதில் இயற்பியல் அமைப்புகள் கணக்கீடு மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் ஒன்றிணைகின்றன. இது நவீன கணக்கீட்டுக் கருவிகளுடன் பாரம்பரிய பொறியியல் அறிவைக் கற்றுக்கொள்வதை இணைக்கிறது. அத்துடன் எதிர்காலத்தில் சிக்கலான, நடைமுறையில் உள்ள பொறியியல் சவால்களை எதிர்கொள்ள பட்டதாரிகளைத் தயார்படுத்தும்.
பி.டெக். கணக்கீடுகள் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல்
இதன் பட்டதாரிகள் உலகளாவிய சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் மருத்துவ ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட, நெறிமுறை ரீதியாக உணர்திறன் வாய்ந்த தீர்வுகளை வடிவமைக்க முடியும். மருத்துவ சாதனத் துறை, மறுவாழ்வு தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் சுகாதார அமைப்புகள் ஆகியவற்றில் தலைமை வகிக்கவும், தொழில்முனைவோராகவும் செயல்பட இப்பாடத்திட்டம் பட்டதாரிகளை தயார்படுத்துகிறது, அதே நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சையில் புதுமைகளையும் வளர்க்கச் செய்கிறது.
இரு பாடத்திட்டங்களும் இடைநிலை இரட்டைப் பட்ட பாடத்திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு ஐந்தாண்டு இரட்டைப் பட்டப்படிப்பை (பி.டெக். + எம்.டெக்.) மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றன. இதற்காக கணக்கீட்டுப் பொறியியல், உயிரி மருத்துவப் பொறியியல், சிக்கலான அமைப்புகள் மற்றும் இயக்கவியல்–ஆகிய 3 படிப்புகளும் பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவ பொறியியல் துறையின் ஆசிரியர்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
***
AD/SMB/AG/DL
(Release ID: 2131403)