சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுவைப் பல்கலைக்கழகத்தில் ‘பாரதிய ஜனனா பரம்பர உப்பானியா மாலா’ – இந்திய அறிவுசார் சொற்பொழிவு தொடரை துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு அவர்கள் துவக்கிவைத்தார்

Posted On: 14 APR 2025 10:46PM by PIB Chennai

புதுவைப் பல்கலைக்கழகத்தின் ஆனந்த ரங்கப்பிள்ளை நூலகம் மற்றும் தமிழ்நாடு வித்யா பாரதி உச்சா சிக்சா சன்ஸ்தான் இணைந்து, இந்திய அறிவு முறை (Indian Institute of Cultural Studies - IICS) சொற்பொழிவு தொடர் ‘பாரதிய ஜனனா பரம்பர உப்பானியா மாலா’ எனும் பெயரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த முயற்சி, இந்தியாவின் பாரம்பரிய அறிவு மரபுகளை நவீன கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கும் முக்கிய ஓர் நகர்வாகும்.

 

தொடக்க விழா, திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பல்கலைக்கழக நூலகர் டாக்டர் எம். விஜயகுமார் அவர்களின் வரவேற்புரை மூலம் ஆரம்பமானது. தனது உரையில், இந்திய அறிவு மரபுகள் இன்றைய நவீன சவால்களுக்கு எப்படி பதிலளிக்கக்கூடும் என்பதையும், அவற்றை புதுப்பித்து கல்வி சூழல்களில் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

 

தொடர்ந்து, பேராசிரியர் தரணிக்கராசு மற்றும் பேராசிரியர் க்ளெமென்ட் லூர்ட்ஸ் இயக்குனர்கள் ஆகியோர் பாராட்டுரைகள் நிகழ்த்தினர். இந்த விழிப்புணர்வு முயற்சி, பல்துறை ஆய்வுகள் மற்றும் சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் என்றும், அறிவார்ந்த கலாச்சார பேச்சுவார்த்தைகளுக்கு பங்களிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

இந்திய தத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICPR) உறுப்பினர் டாக்டர் கே. சம்பத் குமார் சிறப்புரையாற்றினார். இந்திய தத்துவ மரபுகளின் ஆழமும், பன்முகத்தன்மையும் குறித்து பேசிய அவர், இவை கல்வி மற்றும் அறிவியல் சந்திப்புகளில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றார். இந்திய ஞான மரபுகளை ஆய்வு மற்றும் வெளியீடுகளின் மூலமாக மீளுருவாக்கம் செய்வதில் ICPR மேற்கொள்ளும் செயல்களை அவர் விளக்கினார்.

 

துணைவேந்தர் பேராசிரியர் பி. ரகாஷ் பாபு, அவர்கள் தனது தலைமை உரையில், இந்திய அறிவு முறை இன்றைய உலகத்தில் பெறும் இடம் குறித்தும், தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் ஒருங்கிணைத்து பாரம்பரிய ஞானத்தையும், அறிவியல் அணுகுமுறையையும் இணைப்பதின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். “அறுவை சிகிச்சையின் தந்தை” என போற்றப்படும் சுஸ்ருதா அவர்களின் பங்களிப்பை குறிப்பிட்டு, மாணவர்களும், ஆய்வாளர்களும் இந்திய அறிவு மரபுகளின் மீது ஆர்வம் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

நிகழ்வின் முடிவில், டாக்டர் சஞ்சய் பிரதாப் சிங் (தேசிய செயற்குழு உறுப்பினர், VBUS) மற்றும் புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நன்றியுரை நிகழ்த்தினர். விழாவின் வெற்றிக்காக பங்களித்த அனைத்து பிரமுகர்களுக்கும், விருந்தினர்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் இதயப்பூர்வ நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

 

இந்திய ஞான மரபுகளின் மதிப்பீடுகளை இளம் தலைமுறையுடன் பகிர்ந்து, முழுமையான கல்வியை ஊக்குவிக்க இந்த சொற்பொழிவு தொடர் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

***

SV/RJ


(Release ID: 2121676)
Read this release in: English