சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted On: 14 MAR 2025 2:32PM by PIB Chennai

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. ராணுவத்தின் ஆட்சேர்ப்பு அலுவலக சென்னை தலைமையகம் சார்பில் இந்த அறிவிக்கை www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், புதுவை யூனியன் பிரதேசத்திலிருந்து புதுச்சேரி மாவட்டம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோர், தங்கள் விண்ணப்பங்களை இந்த இணைய தளத்தின்மூலமாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

அக்னிவீர் பொதுப் பணி, அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் எழுத்தர்/ஸ்டோர்கீப்பர் தொழில்நுட்பம், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (8 ஆம் வகுப்பு தேர்ச்சி), சிப்பாய் நிலையிலான தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிப்பாய் நிலையிலான பார்மா, அக்னிவீர் பொதுப் பணி (ராணுவ மகளிர் காவல்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வர்கள், அக்னிவீர் பணியிடத்துக்கு தங்கள் தகுதியின் அடிப்படையில் ஒரேநேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுத்தகுதித்தேர்வு ஆன்லைன் முறையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ, டிப்ளமோ மு டித்தவர்கள் மற்றும் என்சிசி தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இதில் போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

 

விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு மார்ச் 12, 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 10, 2025 அன்று முடிவடையும். ஜூன் 2025-ல் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும். அவற்றைப்பெற விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தையும், அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சளையும் தொடர்ந்து பார்த்துவருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) (அஞ்சல் குறியீடு- 600009) மற்றும் தொலைபேசி எண் 044-25674924 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.

ஆட்சேர்ப்பு நடைமுறை முழுமையாக தானியங்கி முறையில், நியாயமான மற்றும் வெளிப்படையான வகையில் நடைபெறுகிறது. ஏதேனும் நபர்கள் விண்ணப்பதாரர்களை அணுகி அவர்களை தேர்ச்சி பெற அல்லது பணியில் சேர உதவ முடியுமென்று கூறினால், அது மோசடியாகும். அத்தகைய நபர்களிடமிருந்து விண்ணப்பதாரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. சொந்த கடின உழைப்பு மற்றும் போட்டி தேர்வுக்கு முறையாக தயாராதல் மட்டுமே அவர்களின் தேர்வை உறுதி செய்யும். இதில் இடைத்தரகர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அத்தகைய இடைத்தரகர்கள், முகவர்கள் அல்லது முகமைகளால் பணிநாடுநர்கள் ஈர்க்கப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MJS/SM/07/03/2025

 

 

***

 


(Release ID: 2111386) Visitor Counter : 62
Read this release in: English