சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை ஐஐடியின் அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்கள் ஜனவரி 3,4-ம் தேதிகளில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி
இடுகை இடப்பட்ட நாள்:
19 DEC 2024 12:47PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), தனது அதிநவீன ஆராய்ச்சி மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றை வரும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
‘அனைவருக்கும் ஐஐடி என்ற தொலைநோக்குப் பார்வையின் சிறப்பு முன்னெடுப்பாக கல்வி நிறுவனத் திறந்தவெளி அரங்கு 2025 நடத்தப்படுகிறது. இதில் இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடியில் அதிநவீன ஆராய்ச்சி, முன்னோடித் தொழில்நுட்பங்கள், துடிப்பான கல்விச் சூழலை பொதுமக்கள் நேரில் காணலாம். புத்தாக்க ஆராய்ச்சி, ஆய்வுத் திட்டங்கள், செயல்விளக்கங்கள் ஆகியவற்றை 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பார்வையிடலாம்.

நான்கு தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 கல்வி நிறுவன ஆராய்ச்சி மையங்கள், 15 உயர் சிறப்பு மையங்களில் நடைபெற்று வரும் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள், 90-க்கும் மேற்பட்ட ஆய்வங்களை பொதுமக்கள் வருகையின்போது நேரில் காண முடியும்.
இதற்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் 25 டிசம்பர் 2024. விருப்பமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம். - shaastra.org/open-house.
சென்னை ஐஐடியின் வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழாவான சாஸ்த்ரா 2025 ஜனவரி 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை வழக்கம்போல் நான்கு பகல்- நான்கு இரவுகளாக நடைபெற உள்ளது. சாஸ்த்ரா-வின் முதல் இரண்டு நாட்கள் நடைபெறும் திறந்தவெளி அரங்கை, இணையதளம் வாயிலாக 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிடுவதுடன், 60,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நேரடியாகக் கண்டு பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
***
PLM/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2085945)
வருகையாளர் எண்ணிக்கை : 119