சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ், மனிதக் கரு மூளையின் மிக விரிவான 3டி உயர் தெளிவுத்திறன் படங்களை வெளியிட்டுள்ளது
Posted On:
10 DEC 2024 2:02PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), மனிதக் கரு மூளையின் மிக விரிவான 3டி உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை வெளியிட்ட உலகின் முதலாவது ஆராய்ச்சி நிறுவனமாகும்.
ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் இந்த முன்னோடிப் பணியின் மூலம், மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தின் எல்லைகளைக் கடந்து, இந்தியாவை மூளை வரைபடமாக்கும் அறிவியலின் உலகளாவிய மையமாகத் திகழச் செய்துள்ளது.
உலகெங்கும் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் வகையில், இதன் தரவுத் தொகுப்பான ‘தரணி’யை (DHARANI) ஓபன் சோர்ஸ் முறையில் பின்வரும் இணைப்பில் காணலாம் (https://brainportal.humanbrain.in/publicview/index.html)
உலகிலேயே முதன்முறையாக சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தால் உருவாக்கப்பட்ட அதிநவீன மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 5,132 மூளைப் பிரிவுகள் டிஜிட்டல் முறையில் பெறப்பட்டுள்ளன. இந்தப் பணியால் நரம்பியல் துறை மேம்படுத்தப்படுவதுடன், மூளையைப் பாதிக்கும் உடல்நிலைக்கான சிகிச்சையின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
இத்தகைய மேம்பட்ட மனித நரம்பியல் தரவுகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட தொகையைப் பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்குதான் செலவிடப்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ருமேனியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, சென்னையைச் சேர்ந்த மெடிஸ்கேன் சிஸ்டம்ஸ், சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவையும் இணைந்து இந்த ஆராய்ச்சிப் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஐஐடி மெட்ராஸ்-ன் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் தலைவர் பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் தலைமையிலான இந்த ஆராய்ச்சி இந்தியாவிற்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் உலகில் பிறக்கும் 25 மில்லியன் குழந்தைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் பிறக்கிறது. (ஆதாரம்: https://www.unicef.org/india/key-data#:~:text=With%20the%20birth%20of%2025,the%20world's%20annual%20child%20births)
கருவில் இருந்து குழந்தைப் பருவம், வளரிளம் பருவம், இளமைப் பருவம் வரை மூளை வளர்ச்சியையும், கற்றல் குறைபாடுகள், மனஇறுக்கம் போன்ற வளர்ச்சிக் குறைபாடுகளையும் புரிந்து கொள்வது நாட்டிற்கு மிகவும் அவசியமாகிறது.
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தைச் சேர்ந்தவரும் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரும் இன்போசிஸ் இணை நிறுவனருமான திரு. கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பிரேம்ஜி இன்வெஸ்ட் (Premji Invest), ஃபோர்ட்டிஸ் ஹெல்த்கேர் (Fortis Healthcare), அஜிலஸ் டயக்னாஸ்டிக்ஸ் (Agilus Diagnostics) நிறுவனங்களும் இப்பணிக்கு ஆதரவு அளித்தன. முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான என்விடியா (NVIDEA) பெட்டாபைட் மூளைத் தரவைச் செயலாக்க உதவும் பணிக்காக இம்மையத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.
தற்போதைய கரு இமேஜிங் தொழில்நுட்பங்கள், ஆரம்பகால நோயறிதல், வளர்ச்சிக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளித்தல் போன்றவை இத்தகைய உயர் தெளிவுத்திறன் கொண்ட மூளைப் படங்களை உருவாக்குவதன் முக்கிய பயன்பாடுகளாகும்.
சிறப்பிதழ் வெளியீடு
நூறாண்டுகள் பழமை வாய்ந்த நரம்பியல் அறிவியல் இதழான ஜர்னல் ஆஃப் கம்பேரிட்டிவ் நியூராலஜி (Journal of Comparative Neurology), இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை சிறப்பு இதழாக வெளியிட்டது. இதழ் முழுவதும் ஐஐடி மெட்ராஸின் ஆராய்ச்சியைப் பற்றி மட்டுமே இடம்பெற்றிருப்பதால் உண்மையிலேயே தனித்துவமிக்கதாகும்.
இந்த ஆராய்ச்சியின் முக்கியத்தை விவரித்த ஜர்னல் ஆஃப் கம்பேரேட்டிவ் நியூராலஜி இதழின் ஆசிரியர் குழுத் தலைவரான சுசானா ஹெர்குலானோ-ஹவுசல் கூறுகையில், “மனிதக்கரு மூளை பற்றி பொதுவில் அணுகக்கூடிய மிகப்பெரிய டிஜிட்டல் தரவுத்தொகுப்புதான் பரணி. 2020-2022 ஆண்டுகளில் கோவிட் தொற்றுக் காலத்தில் இந்தியாவிற்கான தனிப்பயனாக்கப்பட்ட தொழில்நுட்பத் தளத்துடன் இது உருவாக்கப்பட்டது. ஆலன் பிரைன் அட்லஸ்-க்கு செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்குதான் செலவிடப்பட்டுள்ளது. எனவே, ஆலன் பிரைன் இன்ஸ்டிடியூட் உடன் ஐஐடி மெட்ராஸ் இணைந்து செயல்பட்டு, அமெரிக்காவுடன் மனித மூளை வரைபட அட்டவணையில் இந்தியா இணைகிறது. அங்கு மனித மூளையை உருவாக்கும் கட்டமைப்புகள் பற்றி கிடைக்கக்கூடிய அறிவை மனிதகுலத்திற்கு இலவசமாகக் கிடைக்கக்கூடிய அட்லஸ்களை வழங்க பெரிய தொகை முதலீடு செய்யப்படுகிறது" என்றார்.
அறிவியல், தொழில்நுட்பம், கணினி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் பெரிய அளவிலான பல்துறை முயற்சியை ஆற்றுவதற்கும், மனித மூளையை செல்லுலார் அளவில் வரைபடமாக்குவதற்கும் 2022 இல் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம், அதிநவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டது.
அதிநவீனப் பணியை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களைப் பாராட்டிப் பேசிய இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் கூறுகையில், “ஐஐடிஎம்-மின் மூளை மையத்தில் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய கரு மூளை வரைபடத்தை உருவாக்கி அகில இந்திய அளவில் முன்னணியில் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மூளை அறிவியல் துறையில் அறிவியல் அறிவை மேம்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தொடக்க நிதியை எமது அலுவலகம் வழங்கியிருப்பதுடன், உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உலகளாவிய வளத்தையும் உருவாக்கியதில் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ்-ன் மதிப்புமிகு முன்னாள் மாணவரும் இன்போசிஸ் இணை நிறுவனருமான திரு. கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, “இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என்பதை இந்த சாதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தனித்துவமான பொது-கொடை-தனியார் பங்களிப்பின் (Public- private -philanthrophy- partnership) வெற்றியும் இதனால் நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு நாம் பெரியளவில் கனவுகாண வேண்டும். லட்சிய ஆராய்ச்சி திட்டங்கள் பலகட்டங்களையும், பல ஆண்டுகளையும் உள்ளடக்கியவை. இந்தியாவில் இதுபோன்ற பல்வேறு திட்டங்களை உருவாக்கவும், தனியார் மற்றும் பொது ஆதரவைப் பெறவும் இத்திட்டம் ஊக்குவிக்கும் என்பது உறுதி” என்றார்.
'உலகளாவிய ஆராய்ச்சியில் முக்கிய ஆதாரம்'
கருத்தரித்த இரண்டாவது மூன்று மாதங்களில் மனிதக் கரு மூளையின் விரிவான செல் தீர்மான அடலசை சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம் உருவாக்கியுள்ளது. இந்த விரிவான அட்லசில் ஆராய்ச்சியாளர்கள் 500-க்கும் மேற்பட்ட மூளைப் பகுதிகளைக் கண்டறிந்து குறித்துள்ளனர். இம்முயற்சி பல ஆண்டுளாக மனித நரம்பியல் ஆராய்ச்சியை மேலும் முன்னேற்றுவதற்கான உலகளாவிய குறிப்பேடாக செயல்படும்.
இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை மேலும் விவரித்த ஐஐடி மெட்ராஸ்-ன் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் தலைவர் பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் கூறுகையில், “புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இந்த ஆய்வு வழிவகுக்கும், நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகள் மற்றும் கருவின் மருத்துவத்தில் முன்னேற்றங்களை அளவிடவும் ஏதுவாக இருக்கும். மனிதக் கரு மூளையானது பொதுவாக அணுகக்கூடிய மிகப்பெரிய டிஜிட்டல் தரவுத்தொகுப்பாகும், தற்போதைய அறிவை 20 மடங்கு மேம்படுத்துகிறது. இதுபோன்ற மேம்பட்ட மனித நரம்பியல் தரவுகள் இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு உலகளாவிய வளமாக இலவசமாகக் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்” என்று குறிப்பிட்டார்.
சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம்
இந்தியாவின் முதன்மையான தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் (ஐஐடிஎம்), அறிவியல், தொழில்நுட்பம், கம்ப்யூட்டிங், மருத்துவம் ஆகிய துறைகளில் பெரிய அளவிலான பல்துறை முயற்சியை மேற்கொள்ளும் வகையில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம் என்ற அதிநவீன மையத்தை 2022-இல் தொடங்கியது. மனித மூளைகள் செல்லுலார் மட்டத்தில் இம்மையத்தில் வரைபடமாக்கப்படுகின்றன. நரம்பியல் மற்றும் நரம்பியல் தொழில்நுட்பங்களில் மாற்றத்தக்க தாக்கத்துடன் மனித மூளை ஆராய்ச்சிக்கான உலகளாவிய முன்னணி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
உலகத் தரம் வாய்ந்த உயர்-செயல்திறன் ஹிஸ்டாலஜி பைப்லைனை இம்மையம் உருவாக்கியுள்ளது, இது முழு மனித மூளையையும் பெட்டாபைட் அளவில் உயர் தெளிவுத்திறன் கொண்ட டிஜிட்டல் படங்களாக மாற்றி வழங்குகிறது. பல்வேறு வகையான மற்றும் வயதுடைய மனித மூளையின் இந்த தனித்துவமான முதல்-வகுப்பு தரவுத் தொகுப்புகள் மனித மூளையின் முன்னோடியில்லாத உயர்-தெளிவு பார்வையை வழங்குகின்றன, அவை முழு மூளை முழுவதும் செல்லுலார் நிலை விவரங்களை வெளிப்படுத்துகின்றன.
கடந்த இரு ஆண்டுகளில், நாட்டிலுள்ள பல்வேறு மருத்துவ நிறுவனங்களிடமிருந்து வெவ்வேறு வகையான, வயதுடைய (கரு, பிறந்த குழந்தைகள், வளரிளம் குழந்தைகள், வயது வந்தோர், முதியோர்) மற்றும் நோய்வாய்ப்பட்டோர் (பக்கவாதம், டிமென்ஷியா) என 200-க்கும் மேற்பட்ட மூளைகளை இம்மையம் கையகப்படுத்தி அவற்றை செல்லுலார் அளவில் மாற்றுகிறது. அதனைத் தொடர்ந்து மையத்தின் உயர்-செயல்திறன் இமேஜிங் தளத்தின் மூலம் செல்லுலார் தெளிவுத்திறன் டிஜிட்டல் தொகுதிகளாக அவற்றை செயலாக்குகிறது
பல்வேறு வகையான உலகில் மனித மூளைத் தரவுகளின் மிகப்பெரிய களஞ்சியத்தை உருவாக்குவதன் மூலம், இம்மையம் உலகளாவிய தலைமையை அடைவதற்கான தனித்துவமிக்க நிலையில் உள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் இது உலகளாவிய ஆதார மையமாகச் செயல்படும்.
***
AD/ KR
(Release ID: 2082654)