சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னை ஐஐடி, இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பை இணைய வழியில் வழங்குகிறது.

Posted On: 08 JUL 2024 1:39PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகம், கோவையில் உள்ள கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பை இணைய வழியில் வழங்குகிறது.

இந்த நான்கு மாத காலப் பாடவகுப்பு  அறிவியல், பொறியியல் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கும், நீர் தரத்தில் ஆர்வம்கொண்ட தொழில்நுட்பப் பின்னணி உடையவர்களுக்கும் ஏற்றதாகும்.

இந்திய அளவிலும், உலக அளவிலும் நீர் வரைபடத்தை மாணவர்களைக் கொண்டு உருவாக்கும் பணியில் பாடத்திட்ட அமைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நீரின் தரம் குறித்த அடிப்படை அம்சங்களின் விரிவான அறிமுகத்திற்குப் பின், ஆய்வுகள் உள்பட நடைமுறை சோதனைகளை மாணவர்கள் நடத்துவார்கள். பாடத்திட்ட காலம் நிறைவடைந்ததும் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். கல்வி நிறுவனங்கள்  தங்களது பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக இந்த சான்றிதழையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு 2024, ஜூலை 20 அன்று முடிவடையும். ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்பின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்  https://bit.ly/3zgpkMy பாடவகுப்பு 2024 ஜூலை 29 அன்று தொடங்கும்.

சென்னை ஐஐடி பேராசிரியர்களான டி.பிரதீப், லிகி பிலிப், டெல் அவிவ் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் ஃபிஷ்மேன், கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஜி.வேல்முருகன் ஆகியோர் இப்பாடத்திட்டத்தின் பயிற்றுநர்களாக செயல்படுவார்கள். இவர்கள் தவிர சென்னை ஐஐடி, பிஏஆர்சி, பர்டியூ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விருந்தினர் பேராசிரியர்களும் பணியாற்றுவார்கள்.

நீரின் தரத்தைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ள அனைவரையும் இந்தப் பாடத்திட்டத்தில் சேர வரவேற்றுள்ள, சென்னை ஐஐடி வேதியியல் துறையின் நிறுவனப் பேராசிரியர் தாளப்பில் பிரதீப் கூறும் போது, “ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது, அதற்கான காரணங்களை மக்கள் புரிந்துகொள்ளும்போதுதான் சாத்தியமாகும். அத்தகைய அம்சங்களில் நீரின் தரத்தை அறிந்து கொள்வதும் ஒன்று. மக்களுக்கு நம்பிக்கையான நீர் தரம் குறித்த தரவை இந்தப் பாடநெறி உருவாக்கும் என்றார்.  

நீரின் தரம் பற்றிய இணையவழிப் படிப்பு மக்களின் நீர் தரவுக்கான அணுகுமுறை எனத் தலைப்பிடப்பட்ட இந்தப் பாடவகுப்பு, நீரின் தரம், முக்கிய அளவுருக்கள் பற்றிய பகுப்பாய்வு, மனித ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கம் பற்றிய விரிவான புரிதலை வழங்கும். வீடுகள், ஆறுகள், ஆழ்துளை கிணறுகள், நிலத்தடி நீர் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து நீரின் தரத்தின் தரவுத்தளத்தையும் இதனால் நிறுவ முடியும்.

இப்படிப்பிற்கான விரிவுரை வகுப்புகளைப் பொறுத்தவரை இணைய வழி அல்லது நேரடியாக அல்லது பதிவு செய்யப்பட்ட வடிவில் மாணவர்கள் பங்கேற்கலாம். பாடத்திட்டத்தை எந்த அளவுக்கு புரிந்திருக்கிறார்கள் என்பது இணையவழி தேர்வு முறைகள், கேள்வி - பதில்கள் மூலம் கண்டறியப்பட்டு மதிப்பிடப்படும். செய்முறை அமர்வுக்கு பதிவு செய்பவர்கள் கையடக்க கருவிகள் மற்றும் கள சோதனைக் கருவிகள் போன்றவற்றுடன் களத்திலும் ஆய்வகத்திலும் அளவீடுகளை மேற்கொள்வார்கள். ஆய்வு செய்யப்பட்ட நீரின் தர அளவுருக்களில் குளோரின் இன்மை, மொத்த குளோரின், காரத்தன்மை, ஆக்சிஜனேற்றம் - குறைப்பு திறன், கடத்துத்திறன், மொத்தம் கரைந்த திடப்பொருள்கள், வெப்பநிலை போன்ற விவரங்களை அறிய முடியும்.

கடந்த கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் (சென்னை மற்றும் ஈரோடு போன்றவை) கல்லூரி மாணவர்களை உள்ளடக்கிய ஒரு முன்னோடி ஆய்வின் அடிப்படையில் இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் தரவு, இடம் சார்ந்த ஒருங்கிணைப்புகள், கணக்கெடுப்புகளின் உள்ளீடுகளுடன் நீரின் தரம் குறித்த இணையத தரவை உருவாக்குவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டதாகும்.

பல்வேறு நகரங்களிலும், கிராமங்களிலும் செய்முறை அமர்வுகள் நடைபெறுவதால், குறிப்பிட்ட இடத்திலிருந்து பல்வேறு பங்கேற்பாளர்கள்  பதிவுசெய்து, மக்களின் நீர் தரவை உருவாக்குவதில் பங்களிப்பது அவசியமாகிறது. செய்முறை அமர்வுக்கான மையமாக மாறுவதற்கு பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் கைகோர்க்க ஊக்குவிக்கப்படுகின்றன.

பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர்களான டாக்டர் ரம்யா திவேதி, மின்னஞ்சல் - ramya_coe@icsrpis.iitm.ac.in (IITM) அல்லது செல்வி சூசன் ககன், மின்னஞ்சல் - suzankagan[at]gmail[dot]com (டெல் அவிவ் பல்கலைக்கழகம்) ஆகியோரிடம் இருந்து மேலும் விவரங்களை கேட்டுப் பெறலாம்.

***

SMB/KPG/KR



(Release ID: 2031507) Visitor Counter : 26


Read this release in: English