சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ஐஐடி மெட்ராஸ், ஸ்பிக் மெக்கேவின் 9-வது சர்வதேச மாநாட்டை 2024 மே 20 முதல் 26-ந் தேதி வரை நடத்துகிறது

Posted On: 16 MAY 2024 3:43PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்தியப் பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் (ஸ்பிக் மெக்கே) 9-வது சர்வதேச மாநாட்டை 2024 மே 20 முதல் 26-ந் தேதி வரை நடத்துகிறது. இம்மாநாட்டை 1996, 2014 ஆகிய இரு ஆண்டுகளில் இக்கல்வி நிறுவனம் ஏற்கனவே நடத்தியுள்ளது.

ஒரு வார காலம் நடைபெறும் இம்மாநாட்டில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் 1,500-க்கும் அதிகமான மாணவர்கள், தன்னார்வலர்கள் ஒன்று திரள்கின்றனர். இதில் பங்கேற்போர் இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியம், நெறிமுறைகள் ஆகியவற்றின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் சிறந்த கலைஞர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பாக அமையும்.

இந்நிகழ்ச்சிக்காக பதிவு செய்துள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ-மாணவிகள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். மிகச்சிறந்த பாரம்பரியக் கலைகளை அதன் முழு சிறப்போடு ஒருவார காலம் நேரில் பார்வையிட வசதியாக இதில் பங்கேற்போருக்கு தங்குமிடம், உணவு வசதிகள் அனைத்தும் கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியை நடத்த ஆவலுடன் காத்திருக்கும் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், "கலாச்சாரம் என்பது ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு. ஒரு நாடு என்ற வகையில், பாரதம் முழுவதும் நிகழ்த்தப்படும் பல்வேறு கலாச்சார நடவடிக்கைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஸ்பிக் மெக்கே அவர்கள் அனைவரையும் எங்கள் ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்கு கொண்டு வரும் நிகழ்வுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 

9வது சர்வதேச மாநாட்டை மையமாகக் கொண்ட ஸ்பிக் மெக்கே செய்திமடல் மே 2024 இதழை பின்வரும் இணைப்பிலிருந்து காணலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம் - https://drive.google.com/file/d/1SYuB1lRjWOdBFOoQ3fE_Re8dFp5alznm/view?usp=sharing

இந்த நிகழ்வு குறித்து டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்யநாராயணா என்.கும்மாடி கூறுகையில், "சென்னை ஐஐடி இந்த நிகழ்வை ஸ்பிக் மாக்கே இணைந்து ஏற்பாடு செய்வது இது மூன்றாவது முறையாகும். சுமார் 150 மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வியாளர்கள், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் குழுவினர் இந்த நிகழ்வை சுமூகமாக நடத்துவதில் தீவிரமாக பங்கேற்கின்றனர்” என்ரார்.

பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நிகழ்ச்சிகள், கைவினைப் பயிலரங்குகள், திரைப்படங்கள் திரையிடுதல், பாரம்பரியங்களைப் பார்வையிடுதல், உழைப்பு தானம், அதிகாலை யோகாப் பயிற்சி, முழுமையான ஊட்டச்சத்து உணவுகளை உண்ணுதல் போன்றவை மாநாட்டின் அங்கங்களாக இடம்பெற உள்ளன.

இம்மாநாட்டின் தனித்துவமான அம்சங்களை எடுத்துரைத்த ஸ்பிக் மெக்கே அமைப்பின் தேசியத் தலைவரான திரு ராதா மோகன் திவாரி கூறும்போது, “இளைஞர்களின் இயக்கமாகத் தொடங்கிய ஸ்பிக் மெக்கே தனது 47 ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்துள்ளது. இதில் சென்னை ஐஐடி மிகச் சிறந்த முறையில் பங்களிப்பை வழங்கி வருகிறது. சென்னை ஐஐடி மற்றும் இதர ஆதரவாளர்களின் உதவியால்தான் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தங்குமிடம் முதல் உணவு, வரை அனைத்தையும் இலவசமாக வழங்க முடிகிறது. இந்தியா முழுவதும் இருந்து கலந்துகொள்ளும் ஏறத்தாழ 1,300 பேருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு கலை வடிவத்தைக் கற்றுக் கொள்ளவும், இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கவும் வாய்ப்பை வழங்குகிறோம். மாநாடு தனது நோக்கத்தை அடையும் வகையிலும், இளைஞர்களின் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாகவும் அமையும் என நம்புகிறேன்” என்றார்.

ஸ்பிக் மெக்கேவின் துணைத் தலைவரான திருமதி சுமன் டூங்கா கூறும்போது, “கலைஞர்கள், கல்வி நிறுவனங்கள், ஆதரவாளர்கள், தன்னார்வலர்கள் என்ற நான்கு முக்கிய தூண்களைக் கொண்டு ஸ்பிக் மெக்கே செயல்பட்டு வருகிறது. புகழ்பெற்ற கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி மெட்ராஸ் எங்களின் இயக்கத்திற்கு மிகப்பெரிய தூணாக உள்ளது. துடிப்பான கலாச்சாரக் காட்சிகளையும், பல்வேறு பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது” எனக் குறிப்பிட்டார்.

புதிய தலைமுறையினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆசிரமம் போன்ற தனித்துவமான சூழலில் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஒவ்வொரு குழந்தையும் இந்திய மற்றும் உலகப் பாரம்பரியத்தில் பொதிந்துள்ள உத்வேகத்தையும் ஆன்மிகத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஸ்பிக் மெக்கேவின் முக்கிய நோக்கத்தை பிரதிபலிப்பதாகவே இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 2030-க்குள் ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைய வைப்பது இதன் குறிக்கோளாகும்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இம்மாநாட்டின் முக்கிய ஆதரவாளராக செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஸ்பிக் மெக்கே அமைப்பு முதன்மையான இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டையும் போல இந்த ஆண்டு மாநாட்டிலும் மிகச் சிறந்த புகழ்பெற்ற கலைஞர்கள் இடம்பெற உள்ளனர். பண்டிட் ஹரி பிரசாத் சவுராசியா (இந்துஸ்தானி புல்லாங்குழல்), உஸ்தாத் அம்ஜத் அலிகான் (சரோட்), பத்மா சுப்ரமணியம் (பரதநாட்டியம்), சுதா ரகுநாதன் (கர்நாடக இசை வாய்ப்பாட்டு), வித்வான் சேஷம்பட்டி டி.சிவலிங்கம் (நாதஸ்வரம்), அ.கன்னியாகுமாரி (கர்நாடக இசை வயலின்), பண்டிட் உல்லாஸ் கஷல்கர் (இந்துஸ்தானி வாய்ப்பாட்டு), பண்டிட் எம்.வெங்கடேஷ் குமார் (இந்துஸ்தானி வாய்ப்பாட்டு), உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ்கான் (சித்தார்), சுனய்னா ஹசாரிலால் (கதக்), உஸ்தாத் வாசிபுதீன் (த்ருபத்), ஜெயந்தி குமரேஷ் (சரஸ்வதி வீணை), அஸ்வினி பிடே தேஷ்பாண்டே (இந்துஸ்தானி வாய்ப்பாட்டு), மார்கி மது சாக்யார் (கூடியாட்டம்), வித்வான் லால்குடி ஜிஜெஆர் கிருஷ்ணன் (கர்நாடக வயலின் இசை) உள்ளிட்ட கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளை வழங்குவார்கள்.

மாநாட்டையொட்டி தலைசிறந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் பங்குபெறும் ஐந்துநாள் பயிலரங்கு நடைபெற உள்ளது. வித்வான் நெய்வேலி சந்தானகோபாலனின் கர்நாடக வாய்ப்பாட்டு, டாக்டர் அலங்கார் சிங்கின் குர்பானி, குரு கோபிராம் புர்ஹா பகத்தின் சத்ரியா, சுனய்னா ஹசாரிலாலின் கதக், டாக்டர் நீனா பிரசாத்தின் மோகினியாட்டம், விதூஷி மாதவி முட்கலின் ஒடிசி நடனம், குமுச்சம் ரொமேந்திர சிங்கின் சோலோம், திரு தாராபத ரஜக்கின் புருலியா சாவ், சுவாமி தியாகராஜன் அண்ட் சரஸ்வதியின் ஹத யோக், சுதீப் குப்தாவின் பொம்மலாட்டம், உஸ்தாத் வாசிபுதீனின் த்ரூபத் ஆகியவை நடைபெற உள்ளது. திரு அசோக் குமார் பிஸ்வாசின் திக்குலி ஓவியம் (பீகார்), திரு பஜ்ஜு ஷியாமின் கோண்ட் பழங்குடியின ஓவியம் (மத்தியப் பிரதேசம்), ஜனாப் ஷாகிர் அலியின் முகலாய மினியேச்சர் ஓவியம் (ராஜஸ்தான்), ஜனாப் அப்துல் கஃபூர் கத்ரியின் ரோகன் கலை (குஜராத்), முகமூடி தயாரித்தல் (மஜுலி அசாம்), திரு வி.கே.முனுசாமியின் டெரகோட்டா (தமிழ்நாடு) போன்ற பல்வேறு வகையான கைவினைக் கலைகள் பயிலரங்கமும் நடைபெறும்.

***

SMB/KV



(Release ID: 2020786) Visitor Counter : 27


Read this release in: English