சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி என்ஐடி “காரை காவலன்” என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 12 APR 2024 5:14PM by PIB Chennai

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரியின் மாணவர்களான திரு விக்ரம் மற்றும் திரு பிரியதர்ஷன் இவர்களால் உருவாக்கப்பட்ட காரை காவலன் என்ற புதிய செயலியின் அறிமுகவிழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கி ரா ஆடிட்டோரியத்தில் இன்று காலை (12.04.2024) நடைபெற்றது.

இவ்விழாவில் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் (பொறுப்பு) முனைவர். உஷா நடேசன், சிறப்பு விருந்தினர் காரைக்கால் எஸ்எஸ்பி திரு மணீஷ், கழகத்தின் பதிவாளர் முனைவர். சீ. சுந்தரவரதன், கௌரவ விருந்தினர்கள் தெற்கு  காவல் துறை கண்காணிப்பாளர் திரு ஏ சுப்பிரமணியன், காரைக்கால் வடக்கு  கண்காணிப்பாளர் திரு பாலச்சந்தர், காரைக்கால் சைபர் கிரைம் பிரிவு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் முனைவர். அன்சுமன் மஹாபத்ரா, ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    

இச்செயலியானது வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் குடிமக்கள் இச்செயலியின் வாயிலாக எந்தவொரு தவறான நடத்தையையும் புகைப்படத்துடன் உடனடியாக தங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு பெயர் தெரியாமல் தெரிவிக்கலாம். மேலும், புகாரளிப்பவர் புகாரளிக்கப்பட்ட வழக்கின் நிலையை நிகழ்நேரத்தில் செயலியில் பார்க்கலாம்.

கழகத்தின் இயக்குனர் (பொறுப்பு) முனைவர். உஷா நடேசன், காரைக்கால் பொதுமக்களுக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் தெரிவிப்பது மிகவும் எளிதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

காரைக்கால் எஸ்எஸ்பி திரு மணீஷ், இந்த செயலியின் எளிமையைப் பாராட்டியதுடன், குறுகிய காலத்திற்குள், தேர்தலுக்கு முன்பு செயலியை உருவாக்கி அறிமுகப்படுத்தியதற்காக தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரி மாணவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க இந்த செயலி காவல்துறை நிர்வாகத்திற்கு உதவும் என்று காவல்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

  

***

PKV/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 2017757) வருகையாளர் எண்ணிக்கை : 143
இந்த வெளியீட்டை படிக்க: English