மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டிலுள்ள மூன்று கோடி மீனவர்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது மீனவளத்துறை; மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா


மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே சாகர் பரிக்கிரமா பயணம்; இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

प्रविष्टि तिथि: 07 OCT 2023 5:08PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் சாகர் பரிக்ரமாவின் 9-வது கட்ட பயணத்தை அக்டோபர் 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தொடங்கினர்.

அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாபட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் மற்றும் அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மீனவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தனர். அமைச்சர்கள் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகளையும் வழங்கினர்.

 நிகழ்சியில் பேசிய அமைச்சர் பார்ஷோத்தம் ரூபாலா, சாகர் பரிக்கிரமா பயணம் கிட்டத்தட்ட இந்தியாவின் 8000 கிலோமீட்டர் நீளமான  கடற்கரையோரம் வசிக்கும் 3 கோடி மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களை அதிகாரப்படுத்தும் நோக்கில், அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் பயணமாகும் என்றார்.

இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பேசுகையில், ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகின் விலையான  1.2 கோடி ரூபாயில் 60% மானியத்தை  மத்திய அரசு வழங்கி வருவதாகவும், மீனவர்கள் அதனைப் பெற்று பயனடைவதாகவும் தெரிவித்தார். நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தான் கடல்பாசி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், மீனவ சங்க உறுப்பினர்கள், மீன் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி  மெர்சி ரம்யாவும்  கலந்துகொண்டார்.  மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர்கள், அதனைத் தொடர்ந்து  மணல்மேல்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளின் கூட்டுறவு சங்கக் கிளையை தொடங்கிவைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிபட்டினம் மற்றும் அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறியும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு தீபக் ஜேக்கப்  கலந்துகொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 34 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்களுக்கு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்காக நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணைச் செயலாளர் நீத்து பிரசாத்தும்  கலந்துகொண்டார்.

முன்னதாக இன்று காலை திருவாடானை கிராமத்தில் பாரம்பரிய மீனவர் இல்லத்தில் மீனவர்களுடன் அமைச்சர்கள் காலை உணவருந்தினார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பிரதமரின் மத்ஸய சம்பதா திட்டத்தின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெறவுள்ள  நிகழ்ச்சிகளில் மீனவர்களுடன் அமைச்சர்கள் கலந்துரையாடவுள்ளனர். மாலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்காலில் நடைபெறும் நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனும்  கலந்துகொண்டு மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

    

*** 

PKV/AD/DL


(रिलीज़ आईडी: 1965438) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English